பட மூலாதாரம், கா.அ.மணிக்குமார்
‘சதியின் ஆழத்தையும் எல்லையையும் எவரும் அறிந்திருக்கவில்லை; ஒரு தீக்குழம்பின் மீது நிற்பது போன்ற அனுபவத்தை ஆங்கிலேயர் பெற்றனர்; தொடர்ந்து எத்தகைய ஆபத்துகள் எவ்வளவு விரைவில் வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை’ என்று வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றுவதில் பங்கெடுத்த ஒரு இராணுவ அதிகாரி தெரிவித்தார். தென் இந்தியாவில், வேலூர்ப் புரட்சி ஏற்படுத்தியிருந்த பதற்றமும் அச்சமும் ஆங்கிலேயர் மனதிலிருந்து நீங்க வெகுகாலமானது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சி வெறும் இந்திய வீரர்களின் கிளர்ச்சியாய் மட்டுமே பார்க்கப்படுவது அதன் கூறுகளை முழுமையாக இந்தியர் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்படாததன் விளைவே என்பதைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1806-இல் வேலூர் புரட்சியின் பின்னணி
தென் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பிறகு ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவன வணிகர்கள் அப்போது நிலவிய திடமற்ற அரசியல் சூழலைப் பயன்படுத்தி தங்களது அரசியல் ஆதிக்க மேலாண்மையை நிலை நிறுத்த முயன்றனர். அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய தென் தமிழக பாளையக்காரர்கள் பூலித் தேவன் (நெற்கட்டும்செவல்: (1755-67), வேலு நாச்சியார் (சிவகெங்கை: 1780-96) வீர பாண்டிய கட்டபொம்மன் (பாஞ்சாலங்குறிச்சி-1790-99), மருது சகோதரர்கள் (சிவகெங்கை-1801) ஆகியோரை தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியாலும் பீரங்கி பலத்தாலும் வென்றனர்.
ஹைதர் அலிக்குப் பின் ஆங்கிலேயரை தொடர்ந்து எதிர்த்த மைசூர் சுல்தான் திப்புவுடன் இரகசிய தொடர்பு வைத்திருந்ததாக ஆற்காட்டு நவாப் மீது குற்றம் சுமத்தி அவரை அரியணையிலிருந்து அகற்றினர். இதன் விளைவாக செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர் மாவட்டங்களோடு வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. தென் தமிழகப் பகுதிகளில் தங்கள் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு கோட்டைகளை இடித்து படைகளைக் கலைத்து ஆங்கிலேயருக்கு விசுவாசமாயிருந்த பாளையக்காரர்கள், அல்லது அவர்களது வாரிசுகளை சென்னை மாகாண அரசு 1802ஆம் ஆண்டு ஜமீன்தார்களாக பிரகடனம் செய்தது.
இதற்கிடையில், நான்காம் மைசூர் போரில் திப்பு ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு (1799) உடையார் சந்ததியினர்க்கு மைசூர் அரியணை வழங்கப்பட்டது. திப்புவின் வாரிசுகளுக்கு மாத உதவித்தொகை வழங்கி, மைசூரிலிருந்து வேறொரு இடத்திற்கு அவர்களை மாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. அன்றைய வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் புதிதாக கட்டப்பட்டிருந்த அரண்மனைகளில் (ஹைதர் மஹால், திப்பு மஹால்) திப்புவின் 10 மகன்கள், 6 மகள்கள், உறவினர்கள் ஆங்கிலேய படையினரின் நேரடி கண்காணிப்பில் குடியமர்த்தப்பட்டனர். குன்றுகளால் சூழப்பட்ட, வலுவான சுற்றுச்சுவராலும் அகழியாலும் எளிதில் எதிரிகள் ஊடுருவ முடியாத இடமாக வேலூர்க்கோட்டை இருந்ததால் திப்புவின் குடும்பத்தினரை அங்கு குடியமர்த்த உகந்த இடமாக கருதப்பட்டது. திப்புவின் குடும்பத்தினரைத் தொடர்ந்து திப்புவின் ஆதரவாளர்கள், ஏவலாளிகள் என 3000 பேர் கோட்டை அருகாமையில் அமைந்திருந்த பேட்டையில் குடியேறினர்.
1806ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது கோட்டைக்குள் பேரரசரின் 69ஆம் படையின் நான்கு பிரிவுகளும், இந்திய காலாட்படையின் 1 ஆம் படையின் 1 ஆம் பிரிவும், 23ஆம் படையின் 2 ஆம் பிரிவும் இருந்தன. இந்திய அதிகாரிகளும் போர் வீரர்களும் சேர்ந்து மொத்தம் 1700 பேர் இருந்தனர். 1ஆம் படையின் 1ஆம் பிரிவில், திப்புவிடம் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் அதிகம் இருந்தனர். 23ஆம் படையின் 2 ஆம் பிரிவில், கலைக்கப்பட்டிருந்த தென்தமிழக பாளையக்காரர்களின் இராணுவப் படைகளிலிருந்தோர் அதிக எண்ணிக்கையில் பணியாற்றினர்.
பட மூலாதாரம், கா.அ.மணிக்குமார்
சர்ச்சைக்குரிய புதிய இராணுவ விதிமுறைகள்
தலைமைத்தளபதி ஜான் பிரடெரிக் கிரடாக் 1806 ஜனவரியில் வெளியிட்ட புதிய இராணுவ விதிமுறைகள் மார்ச்13 அன்று இராணுவ முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஓர் இந்திய வீரன் சீருடையில் இருக்கும் போதும் அணிவகுப்பின் போதும் திருநீறு, நாமம் போன்ற மத, சாதிக் குறிகளை நெற்றியில் வெளிப்படுத்தக் கூடாது, காதணி அணிய க்கூடாது; முகத்தை சுத்தமாக மழித்திருக்க வேண்டும்; மீசையின் அளவு ஒரே சீராக இருக்க வேண்டும் என அதன்படி ஆணையிடப்பட்டிருந்தது.
அதற்கு முன்பே, 1805ஆம் ஆண்டு நவம்பர்14ஆம் நாளிட்ட ஆணையின் மூலம் தலைமைத்தளபதி இந்திய வீரர்கள் தலைப்பாகையையும் மாற்றி யிருந்தார். இந்த வட்டத் தொப்பி ஐரோப்பியர் மற்றும் கிறிஸ்தவர் அணியும் தொப்பி போல் இருந்தது மட்டுமின்றி, தொப்பியின் முன்னே இருந்த குஞ்சம் வழக்கமான பருத்தித் துணியாலான ரிப்பனுக்கு பதிலாக மிருகத்தோலாலான வார்களால் இணைக்கப் பட்டிருந்தது. பன்றியின் தோல் முஸ்லிம்களுக்கு அருவறுக்கத்தக்கது. பசுவின் தோல் இந்துக்களுக்கு ஏற்கத்தக்கது அல்ல என்பதால் அனைவரையும் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்வதற்கான திட்டம் இது என தென் இந்திய இராணுவ முகாம்களில் தொப்பிக்கான எதிர்ப்பு கிளம்பியது.
முதல் எதிர்ப்பு
1806 மே 6ஆம் நாள் வேலூர் கோட்டையில் 4ஆம் படையின் 2ஆம் பிரிவினர் மாலை 6மணி அணிவகுப்பின் போது தோளில் அவர்களது ஆயுதங்களை ஏந்த மறுத்தனர். மறுநாள் (மே 7) வெளிப்படையாக புதிய தலைப்பாகையை அணிய படையினர் மறுத்தனர். கோட்டைத்தலைமை அதிகாரி ஃபேன்கோர்ட் படை ஒழுங்கீனம் பற்றி தலைமைத்தளபதிக்குத் தெரிவித்த போது முக்கிய தலைவர்களைக் கைது செய்து விசாரணைக்கு சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு அவர் ஆணையிட்டார். குற்றம் சுமத்தப்பட்ட 21 படைவீரர்களை (10முஸ்லீம்கள் 11இந்துக்கள்) பேரரசரின் 19ஆம் குதிரைப்படை பாதுகாப்பாக விசாரணைக்கு நடத்திச் சென்றது.
இராணுவ விசாரணை மன்றத் தீர்ப்பின்படி 19 வீரர்களுக்கு ஆளுக்கு 500 சவுக்கடிகள் கொடுத்து, அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு, எதிர்கால நன்னடத்தைக்கு உத்தரவாதம் கொடுத்ததால் மன்னிக்கப்பட்டனர். தவறு என ஒப்புக்கொள்ள மறுத்த இருவீரர்கள் (ஷேக் அப்துல் ரகுமான், அனந்தராமன்) 900 சவுக்கடிகள் பெற்று பணியிலிருந்து நீக்கப்பட்டனர். 4ஆம் படையின் 2ஆம் பிரிவு வேலூரிலிருந்து அகற்றப்பட்டு அதன் இடத்தில் வாலாஜாபாத்திலிருந்த 23ஆம் படையின் 2ஆம் பிரிவு நிறுத்தப்பட்டது.
நடைபெற இருந்த பெரும் ஆபத்தை தவிர்த்துவிட்டதாக தலைமைத்தளபதியிலிருந்து அனைவரும் நம்பியிருந்தபோது அடுத்த இரு மாதங்களில் வேலூரில் கிளர்ச்சி பூகம்பமாக வெடித்தது.
ஜூலை10ஆம் நாள் அதிகாலை இரண்டு மணிக்கு வேலூர்க் கோட்டையில் இந்திய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஒரு பகுதியினர் ஆயுத, வெடி மருந்து கிடங்குகளுக்குச் சென்று அங்கிருந்த துப்பாக்கிக் குண்டுகளையும் ஆயுதங்களையும் கையகப்படுத்தி அனைத்து வீரர்களுக்கும் விநியோகம் செய்தனர்.
மற்றொரு பிரிவினர் ஐரோப்பியர் குடியிருப்புக்குச்சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஐரோப்பிய அதிகாரிகளையும், வீரர்களையும் அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக குறி வைத்து சுடத்தொடங்கினர். எவரும் தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக குடியிருப்பைச் சுற்றிலும் நின்றுகொண்டு தீ வைத்தனர். வீரர்களால் தேடப்பட்ட லெப்டினன்ட்டு கோம்ஸ் இந்திய வீரர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார் என்பதால் வீரர்கள் அவரை அதிகமாக வெறுத்தார்கள்.
முதலில் தாக்கப்பட்டுத் தீக்கிரையானது அவரது வீடே. ஆனால் கோம்ஸ் தப்பி உயிர் பிழைத்தார். திப்புவின் மகன்களுக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாவலராக பணியமர்த்தப்பட்டியிருந்த தாமஸ் மர்ரியட் தனது வீட்டில் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார்.
தொடர் துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டு விழித்த கோட்டைத் தலைமை அதிகாரி ஃபேன்கோர்ட் தன் வீட்டை விட்டு வெளியே சென்று அனைத்து வீரர்களையும் அணிவகுக்க உத்தரவிட்டபோது குண்டடிபட்டு அவரது மனைவி அமெலியா கண் முன் மடிந்தார். வீரர்களின் குண்டிற்கு இரண்டாவது பலி 23ஆம் படை 2ஆம் பிரிவின் தலைவர் மக்காரஸ். 1ஆம் படை 1ஆம் பிரிவுக்கு தலைமை வகித்த ஃபோர்ப்ஸ் கோட்டைக்கு வெளியே சென்றிருந்ததால் பொறுப்பேற்றிருந்த ஓ’ரெய்லி குண்டு சப்தம் கேட்டு பேன்கோர்ட் வீட்டிக்கு விரைந்த போது செல்லும் வழியில் கொல்லப்பட்டார். இரவு காவல் பணியில் ஐரோப்பிய படையினர்க்கு தலைமை தாங்கிய லெப்ட்டினன்ட்டுகள் ஜான் இலி, பூபம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டு கோட்டையின் தலைவாயில் வழியாக சென்று கொண்டிருந்த 16ஆம் படை 1ஆம் பிரிவு மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் தனது பல்லக்கில் இருந்திறங்கி என்ன நடக்கிறது என வினவிய போது அவரது உடலில் குண்டு பாய்ந்து அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்து மாண்டார். தொப்பியை அணியச் சொல்லி கட்டாயப்படுத்தியதற்காக கேப்டன் டேவிட் வில்லிசன் அவரது வீட்டிலிருந்து இழுத்துவரப்பட்டு கொல்லப்பட்டார்.
பட மூலாதாரம், Wiki Commons
கோட்டை இந்தியர் வசமாதல்
மொத்தம் 15 ஐரோப்பிய அதிகாரிகளும் 119 ஐரோப்பிய வீரர்களும் கொல்லப்பட்டிருந்தனர். அனைத்து காவல் மையங்களும் வீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. கோட்டையில் ஆங்கிலேயர் கொடி அகற்றப்பட்டு திப்புவின் மூன்றாவது மகன் மொய்சுதீன் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மைசூர் புலி வரிக்கொடி பறக்கவிடப்பட்டது. மொய்சுதீன் வீட்டிற்கு முன் கூடியிருந்த போராளிகள் அனைவரும் வெற்றியைக் கொண்டாடினர்.
கோட்டைக்கு வெளியே இருந்த லெப்டினண்ட் கர்னல் ஃபோர்ப்ஸ் ஓர் மலைக்கோட்டைக்குச் சென்று அங்கிருந்து கோட்டைக்கு வெளியில் இருந்தவர்களை இயக்கினார். இதை எதிர்பார்த்து மொய்சுதீன் திப்புவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக பணியாற்றிய சையது கபூர் மகன் சையது உசைனை மலைக்கோட்டைக்கு ஓர் படையுடன் அனுப்ப எடுத்த முயற்சி, தலைவாயில் கதவு பூட்டப்பட்டு கோட்டைக்கு வெளியே ஆங்கிலேயர் படை நின்றதால், தோல்வியடைந்தது. இதனால் ஃபோர்ப்ஸ் சுதந்திரமாக செயல்பட முடிந்தது.
ஆற்காட்டிலிருந்து குதிரைப்படை வர ஏற்பாடு செய்யுமாறு கோட்டைக்கு வெளியே பணியிலிருந்த மேஜர் கோட்ஸ்ஐ ஃபோர்ப்ஸ் வேண்டினார். கேப்டன் ஸ்டீவன்சன் ஆற்காட்டு இராணுவமுகாம் தலைவர் கர்னல் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பிக்கு ஆங்கிலேயப்படையினர் கொல்லப்பட்ட செய்தியை எடுத்துச்சென்றார். அப்போது காலை 6 மணி.
ஆற்காட்டிலிருந்து கில்லெஸ்பி வருகை
கில்லெஸ்பி 7 மணிக்கு கேப்டன் எங் தலைமையில் 19ஆம் குதிரைப்படையை அழைத்துக்கொண்டு, மதராஸ் ஏழாம் குதிரைப்படையை உட்ஹவுஸ் தலைமையில் பின் தொடருமாறு உத்திரவு பிறப்பித்துவிட்டு, வேலூர் நோக்கிப் புறப்பட்டார். அவர் வேலூர்க் கோட்டையை சென்றடைந்த நேரம் 8:30 மணி. ஏற்கனவே இருவாயில் கதவுகள் திறந்திருந்தன. மூன்றாவது வாயில் கதவு எளிதாக குதிரைப்படையினரால் திறக்கப்பட்டது. நான்காவது வாயில் கதவு திறக்க முடியாததாலும் இந்திய வீரர்கள் துப்பாக்கிக்குண்டு மழை பொழிந்ததாலும் எறிகுண்டுப் படையினர் வரும்வரை காத்திருக்க கில்லெஸ்பி முடிவு செய்தார். மலைக்கோட்டையில் இருந்த போர்ப்ஸ் கோட்டைக்கு வெளியே தன்னுடன் இருந்தவர்களுடன் கில்லெஸ்பி படையுடன் இணைந்தார்.
ஏழாம் குதிரைப்படையினர் எறிகுண்டு வீரர்களுடன் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர். அப்போது மணி பத்து. பூட்டு துப்பாக்கியால் தகர்க்கப்பட்டு நான்காம் வாயிற் கதவு திறக்கப்பட்டது. தாமஸ் மர்ரியட் கில்லெஸ்பியை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார் குதிரைவீரர்கள் கைவாளுடன் உள்ளே நுழைந்தபோது, கில்லெஸ்பி தலைமைத் தளபதி ஜான் கிரடாக்குக்கு அடுத்த நாள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது போல், இந்திய வீரர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பல ஆங்கிலேய இராணுவ வீரர்களை இழக்க நேரிட்டது. இருப்பினும் சிறிது நேரத்திலேயே குண்டுகள் தீர்ந்ததால் இந்திய வீரர்கள் பின்வாங்க நேர்ந்தது.
பின்வாங்கிய இந்திய படைவீரர்களைக் கொல்வதில் கில்லெஸ்பி தலைமையிலான படையினர் குறியாக இருந்தனர். நான்காம் வாயில் கதவைத் தகர்ப்பதில் முக்கிய பங்காற்றிய லெப்டினண்ட் ஜே. பிளாக்கிஸ்தான் கணக்குப்படி 810 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இராணுவ வரலாற்றறிஞர் டபிள்யு. ஜெ. வில்சன் கணக்குப்படி கோட்டையினுள் இருந்த 1700 பேரில் 879 பேர் கொல்லப்பட்டிருந்தனர், வேலூரில் சிறைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் 466 பேர். கைதாகாமல் தலைமறைவாயிருந்தவர் 321 பேர். இவர்கள் போக நாட்டின் இதர பகுதிகளில் சிறையிலடைக்கப்பட்டிருந்தவர்களும் இருந்தனர்.
திப்புவின் மகன்களையும், குடும்பத்தினரையும் கில்லெஸ்பி கொல்ல முயன்ற போது அவர்கள் தனது பாதுகாப்பில் இருப்பதாகக் கூறி தடைபோட்டார் தாமஸ் மர்ரியட். கோட்டைக்குப்பின் அவசர வழியாக தப்ப முயன்ற வீரர்களைக் கைது செய்து அவர்களைக் கொல்வதற்கும் கில்லெஸ்பி ஆணையிட்டார். இருந்தும் கணிசமான எண்ணிக்கையில் வீரர்கள் தப்பியிருந்தனர். அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கும் ஆட்சியர்களுக்கும் பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கோட்டையை நழுவ விட்ட விதம்
23ஆம் படையின் 2ஆம் பிரிவினர் வாலாஜாபாத்திலிருந்து வேலூர்க் கோட்டைக்கு மாற்றப்படுவதற்கு முன்பே கிளர்ச்சிக்குத் திட்டமிட்டிருந்ததாகவும், அதன் பின் குறித்திருந்த நாளில் சுபேதார் சேக் ஆடமும், ஜமேதார் சேக் காசிமும் தலைமைக் காவலகத்தில் பணியில் இருந்ததால் அன்று தள்ளிப் போடப்பட்டு மறுநாள் இரவு என அறிவித்திருந்தும், 23ஆம் படையின் ஜமேதார் சேக் உசேன் ஜூன் 9அன்று குடிபோதையில் கிளர்ச்சித் திட்டத்தை உளறிவிட்டதால் அன்றே கிளர்ச்சியைத் தொடங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்று இரவு 9 மணிக்குக் கூடி கலந்தாலோசித்து அதிகாலை இரண்டு மணிக்கே கிளர்ச்சியைத் துவங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. கடைசிநேரத்தில் முடிவெடுத்ததால் அரண்மனையிலிருந்த இந்திய அதிகாரிகளும் மக்களும் கிளர்ச்சி பற்றிய செய்தியைத் தக்க தருணத்தில் அறிய முடியவில்லை. இல்லாவிட்டால் விளைவு வேறாக இருந்திருக்கும் என கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர் என்று கருதப்பட்ட ஜமேதார் சேக்காசிம் சிறப்பு விசாரனைக் குழுவிடம் கூறினார்.
வீரர்கள் கோட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் திப்புவின் மூத்த மகன் பதே ஹைதர்ஐ வெற்றிப்படைக்கு தலைமை தாங்குமாறு அழைத்த போது, 300பேர் கொண்ட படையை தலைமை ஏற்று நடத்திச்செல்ல நான் ஒன்றும் முட்டாள் அல்ல என்று கூறி வீரர்களின் வேண்டுகோளை அவர் நிராகரித்தார். அதைத்தொடர்ந்து வீரர்கள் சிலர் மதில் மீது ஏறி பேட்டையில் இருந்தவர்களுக்கு ஆயுதங்களுடன் வர அறைகூவல் விடுத்தனர்.
குறித்திருந்த நேரத்திற்கு முன்பே கிளர்ச்சி தொடங்கியிருந்ததால் பேட்டையில் இருந்தவர்களுக்குக் கூட தகவல் சென்றடையவில்லை. எதிர்பார்த்தது போல் குன்றத்தூரிலிருந்தும் ஆற்காட்டிலிருந்தும் படைகள் வரவில்லை. மேலும் தப்பி உயிர் பிழைத்திருந்த ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிக்க போராளிகள் தவறினர். இந்திய வீரர்களின் இக்கவனக் குறைவை சாதகமாகப் பயன்படுத்தி கோட்டைக்குள் ஒளிந்திருந்த, கோட்டைக்கு வெளியே அணிதிரண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளும், படைவீரர்களும் போதுமான போர்த் தளவாடங்களுடனும், எண்ணிக்கையில் அதிகமான வீரர்களையும் கொண்டு தாக்கியதால் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவர முடிந்தது.
தென்னிந்திய இராணுவ முகாம்களில் கிளர்ச்சி பரவுதல்
வேலூர்க் கோட்டையில் நடந்த கிளர்ச்சி ஐதராபாத், வாலாஜாபாத், பெல்லாரி, சங்ககிரி துர்கம், பெங்களூரு, நந்திதுர்கம், பாளையங்கோட்டை போன்ற இராணுவ முகாம்களில் எதிரொலித்தது. முதலில் வெளிப்பட்ட ஐதராபாத் கிளர்ச்சியும், இறுதியாக நிகழ்ந்த பாளையங்கோட்டை கொந்தளிப்பும் இங்கு விவரிக்கப்படுகின்றது.
ஹுசைன் சாகர் இராணுவ முகாமில் துணைப்படையில் பணியாற்றிய இந்திய வீரர்கள் புதிய தொப்பியை அணிய மறுத்ததோடு ஆங்கிலேயருக்கு சாதகமாக செயல்பட்ட திவான் மீர் ஆலமை படுகொலை செய்வது, நிஜாம் சிக்கந்தர் ஜாவை அரியணையிலிருந்து இறக்கி அவரது மற்றொரு சகோதரரை அரியணையில் அமர்த்துவது போன்ற ரகசிய திட்டங்களோடு செயல்படுவதாக வந்த செய்தியின் அடிப்படையில் அங்கிருந்த துணைப்படையின் தலைவர் கர்னல் மாண்ட்ரெஸ்ஸர் வீரர்களை அணிவகுக்கச்சொல்லி இராணுவ விதிகள், புதிய தொப்பி பற்றிய ஆணைகளை ரத்து செய்வதாக ஜூலை 17 அன்று அறிவித்தார். இருப்பினும் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்ததால் பிரதான சூழ்ச்சிக்காரர்கள் என குற்றம் சாட்டப்பட்டு சுபேதார்கள் சித்திக் ஹுசைன். காதர் பெக், உமர் அலி பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டனர். ஜமேதார் ஷேக் சுல்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாளையங்கோட்டை
வேலூரில் ஆங்கிலேயருடன் போரிட்டு உயிரிழந்தவர்களின் உறவினர் பலர் பாளையங்கோட்டையிலிருந்த படையில் பணியாற்றினர். மதமாற்றம் என்பது கண் கூடாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. மதம் மாறிய கிறிஸ்தவர்கள் வாழ முதலூர் தனி குடியிருப்பாக தோன்றியிருந்தது (1799). இச்சூழலில் படை நடத்துனர் ஜேம்ஸ் வெல்ஷ் தனது படை போர்வீரர்களில் மறவர்களை நம்ப முடியாது என்ற முடிவுக்கு வந்து முதலில் அச்சமூகத்தைச் சேர்ந்த நூறுக்கும் மேலான படைவீரர்களை பணிநீக்கம் செய்தார்.
பின்னர் முஸ்லீம் அதிகாரிகள், வீரர்கள் 450 பேர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறித்து முகாமை விட்டு வெளியேற்றினார். 150 இந்து வீரர்களை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருக்க வைப்பதற்கு அவர்கள் பலருக்கு பதவி உயர்வு வழங்கினார். ஏற்கனவே சமரசப் போக்கைக் கடைப்பிடித்திருந்த கம்பெனி அரசு ஜேம்ஸ் வெல்ஷ் நடவடிக்கைகளை அங்கீகரிக்க மறுத்து ஓர் விசாரணை மன்றத்தின் முன் விளக்கமளிக்குமாறு வேண்டியது. ஆனால் வெல்ஷ் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பட மூலாதாரம், Wiki Commons
மரண தண்டனைக்குள்ளானவர்கள்
இராணுவ நீதிமன்ற தீர்ப்பின் படி 1806ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் வேலூர்க் கிளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கோட்டையின் தலைமைப்பொறுப்பை ஏற்றிருந்த ஹர்கோர்ட் துணை படைத்தளபதி (Adjutant General) பி. ஏ. அக்னீவ்க்கு எழுதிய கடிதத்தில் பெயரை குறிப்பிடாமல் கிளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள் எண்ணிக்கை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை, வகித்த பதவி ஆகியவற்றை குறிப்பிடு கிறார். அதன்படி:
- பீரங்கி வாயில் வைத்து உடல் தகர்க்கப்பட்டவர்கள்:
ஒரு ஹவில்தார், ஒரு நாயக்-1 ஆம் படை 1ஆம் பிரிவு.
இரண்டு சுபேதார்கள், இரண்டு லஸ்கர்-23 ஆம் படை 2ஆம் பிரிவு
- சுடப்பட்டவர்கள்:
ஒரு நாயக், நான்கு வீரர்கள்- 1 ஆம் படை 1ஆம் பிரிவு
தூக்கிலிடப்பட்டவர்கள்
ஒரு ஜமேதார், நான்கு வீரர்கள்-1 ஆம் படை 1ஆம் பிரிவு
இரண்டு ஹவில்தார்கள், ஒரு நாயக்-23 ஆம் படை 2ஆம் பிரிவு
- பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டவர்கள்
மூன்று ஹவில்தார்கள், இரண்டு நாயக்குகள், ஒரு வீரர்
கொல்லப்பட்ட பத்தொன்பது போராளிகளில் நான்கு பெயர்களை மட்டும் நம்மால் அரசின் இரகசிய ஆவணங்களிலிருந்து கண்டுபிடிக்க முடிகிறது. ஒருவர் பீரங்கி வாயில் வைத்து உடல் சிதறக் கொல்லப்பட்ட சுபேதார் ஷேக் ஆடம். மற்றொருவர் தூக்கிலிடப்பட்டு, பூத உடல் சங்கிலியிடப்பட்டுப் பொதுமக்களை எச்சரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஜமேதார் ஷேக் காசிம். மூன்றாமவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட 1ஆம் படையின் 1ஆம் பிரிவின் நாயக் ஷேக் மீரான். துப்பாக்கித் தோட்டாக்கள் விநியோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட லேன்ஸ் நாயக் நான்காமவர்.
பொது மன்னிப்பு
கடுமையான தண்டனை வழங்குமளவிற்கு “மைசூர் இளவரசர்களின்” பங்கு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவர்களைக் கல்கத்தாவிற்கு அனுப்புவதற்கு உத்தர விடப்பட்டது. கில்லஸ்பி அமைத்த விசாரணை நீதிமன்ற அறிக்கையை நிராகரித்து, அரசு அமைத்திருந்த சிறப்பு விசாரணைக் குழு சிறையிலிருக்கும் கைதிகளை ‘எப்போதும் கம்பெனி இராணுவப் பணியில் சேர அனுமதிக்கக் கூடாது என்கிற தெளிவான புரிதலோடு விடுதலை செய்ய வேண்டும்’ எனப் பரிந்துரைத்திருந்ததையும் மீறி இந்திய படையினருடன் சமரச போக்கைக் கடைப்பிடிக்க கம்பெனி நிர்வாகம் முடிவு செய்தது.
சிறையிலிருந்த சுமார் 516 பேரை அரசு விடுதலை செய்து இராணுவப்பணியில் மீண்டும் அனுமதித்தது.
கிளர்ச்சிக்குக் காரணங்களாகக் கருதப்பட்டவை
ஐரோப்பிய அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையேயான முறிந்த உறவு, முன்னவர்களது அதிகார ஆணவம், இந்திய மொழி அறியாமை ஆகியவற்றால் என இயக்குநரகம் கருதியது. ஹெச்.ஹெச். வில்சன் கருத்துப்படி மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசின் தலையீடே கிளர்ச்சிக்கான முக்கிய காரணமாகும். தாமஸ் மன்றோ இராணுவ கட்டுப்பாடுகள்தான் கிளர்ச்சிக்கான காரணம் என வாதிட்டார். இவர்கள் எல்லோரும் அரசின் ஏகாதிபத்திய எண்ணத்தை பிரதிபலித்தனர்.
ஐதராபாத் துணைப்படையினர் சுட்டிக்காட்டிய மோசமான பணிநிலை, பதவி உயர்வுக்கான வாய்ப்பின்மை போன்றவை கிளர்ச்சிக்கானதொரு முக்கியமான காரணமாக இருந்த போதிலும், கம்பெனி ஆட்சியை முன்னாள் பாளையக்காரர்கள், சிற்றரசர்கள் ஏற்க மறுத்தது, அவர்களுக்கு பிரெஞ்சுக்காரர்கள் கொடுத்த ஊக்கம், திப்புவின் மைத்துனர் பதே அலி மராத்தியர், புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் கொண்டிருந்த தொடர்பு ஆகிய அனைத்தும்தான் கிளர்ச்சிக்கான காரணிகள் என வரலாற்றறிஞர் ஹெச்.ஹெச். டாட்வெல் நினைத்தார்.
மக்களையும் இராணுவத்தையும் தூண்டியதில் முஸ்லிம் பக்கிரிகளின் முக்கியப் பங்கினை, குறிப்பாக, ‘சதிக்கோட்பாட்டிற்கு’ ஆதரவாக எஸ்.எஸ். பர்னல் விரிவாக எழுதினார்:
‘ஆங்கிலேய அரசை ஒழித்துக்கட்டிவிட்டு அதன் அழிவுகளிலிருந்து முஸ்லிம் இறையாண்மையை மேலோங்கச் செய்யும் நோக்கில் வேலூர் அப்போது ஆழமான பயங்கர சூழ்ச்சிகளின் இருப்பிடமாக இருந்தது…. மிதமிஞ்சிய வருமானம் அவர்களிடம் இருந்தததால் பழைய தொடர்புடைய, திப்பு குடும்பத்தோடு பிணைப்பு கொண்டிருந்தவர்களை அடியாட்களாகப் பணியில் அமர்த்த முடிந்தது. பலர் மத வெறியுடனும் இதர நோக்கங்களுடனும் ஐரோப்பியர், கிறிஸ்தவர் ஆதிக்கத்தை ஒழிக்கும் எத்தகையதொரு திட்டத்திலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள தயாராக இருந்தனர்.’ என்று அவர் குறிப்பிட்டார்.
சென்னை மாகாணத்தில் தொடர்ந்து நிலவிய வறட்சி, கம்பெனி அரசின் நில வருவாய்க்கொள்கையினால் மோசமாகிச் சிறு நில உடைமையாளர்கள் அனைவரையும் வெகுவாக பாதித்திருந்தது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர் சென்னை இராணுவத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களது அதிருப்தியின் பிரதிபலிப்பு கம்பெனி அரசு மீதான வெறுப்பு வேலூரிலும் தென்னிந்தியாவிலுமிருந்த இராணுவக் குடியிருப்புகளில் கிளர்ச்சியாய் வெடித்தது என்று வரலாற்று ஆய்வாளர் தேவதாஸ் முதலி கருதினார். ஆனால் இக்கண்ணோட்டத்தில் வேலூர்க் கிளர்ச்சியை வரலாற்றறிஞர்கள் உற்று நோக்கவில்லை.
பட மூலாதாரம், கா.அ.மணிக்குமார்
சமீப ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் விவரங்கள்
நாடுகளை கைப்பற்றும் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றிய கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம் அரியணையிலிருந்து அகற்றப்பட்ட மன்னர்கள் மத்தியில் பெரும் பகைமை உணர்வை ஏற்படுத்தியிருந்தது. வேலூரில் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னரும், மருது பாண்டியன் பிரகடனம் (1801) சென்னை வீதிகளில் ஒட்டப்பட்டிருந்ததும், இரகசியமாக இராணுவ மையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்ததும் இதைத் தெளிவாக்குகிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் கம்பெனி அரசுக்கு அடிமையாயிருக்கும் நிலையைத் தூக்கி எறிந்துவிட்டு தங்களைச் சுதந்திரம் உள்ளவர்களாக ஆக்கிக்கொள்ள முன்னால் பாளையக்காரர்கள் தயாராய் இருந்தனர்.
கேட் பிரிட்டில்பேங்க் என்ற வரலாற்றாசிரியர் ஸ்ரீரங்கப்பட்டிணத்தை கையகப்படுத்தியவுடனேயே மைசூர் அரசை ஆங்கிலேயர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடவில்லை. மைசூரின் பல பகுதிகளில் கிளர்ச்சி வெடித்தது. அவற்றை எல்லாம் ஒடுக்கிய பிறகே ஆங்கிலேயர் தமது ஆதிக்கத்தை அங்கு முழுமையாக நிலைநாட்ட முடிந்தது எனக்கூறுகிறார்.
அதே போன்று சித்தூர் பாளையக்காரர் 1805 வரை ஆங்கிலேயருக்கு அடங்காதிருந்தார். கடப்பா-கர்நூல் மாவட்டங்களின் பாளையக்காரர்கள் மீது அதிக செல்வாக்குக் கொண்டிருந்த இவர்கள் கப்பம் செலுத்தாதது மட்டுமின்றி ஆங்கிலேயர் அதிகாரத்தை ஏற்கவும் மறுத்தனர். சித்தூர், கடப்பா-கர்நூல் மாவட்டங்களின் பாளையக்காரர்களை ஒடுக்குவதற்கு அனுப்பப்பட்ட படை பெரும் கிளர்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்தது. இறுதியில் அடங்கிப் போயிருந்தாலும், கம்பெனி நிர்வாகத்திற்கு அவர்கள் தொடர்ந்து பதற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
பிரஞ்சுக்காரர்கள் மீதான பாளையக்காரர்களின் நம்பிக்கை
இந்தியாவில் பிரஞ்சுக்காரர்களின் ஆட்சி முற்றுப்பெற்றிருந்தாலும், பாண்டிச்சேரியை 1802ஆம் ஆண்டு அமீன்ஸ் உடன்படிக்கையின் படி திரும்பப் பெற்றிருந்த பிரஞ்சுக்காரர்கள் தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான சதியில் ஈடுபட்டனர். புதிதாக பிரஞ்சு-இந்தியாவின் தலைமைத்தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த டெய்கன் தனது முதன்மைஅதிகாரி பினாட் மூலம் தஞ்சாவூர், திருவாங்கூர் மன்னர்களுடன் தொடர்பு ஏற்படுத்தியிருந்தார். தனது மற்றொரு சகஅதிகாரி மூலம் மராத்தியர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். தெற்கே டிராங்குபாரிலும் (தரங்கம்பாடியிலும்) வடக்கே செராம்பூரிலும் பினாட் தனது ஆட்களை வைத்திருந்தார். இந்த இரு இடங்களும் டென்மார்க்கிடமிருந்து இங்கிலாந்திற்கு கைமாறியிருந்தன. இப்பிரஞ்சு “ஏஜன்டுகள்” இந்தியா முழுமையுமிருந்த தங்களது ஒற்றர்களின் மூலம் இந்தியா மாபெரும் கிளர்ச்சிக்கு தயாராக இருந்ததாகக் கருதினர். தென்இந்திய பாளையக்காரர்களுக்கு எழுதிய கடிதத்தில் டெய்கன், அவுத், ஆற்காடு, மைசூர் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட கதி அவர்களுக்கு நிகழாமல் இருக்க வேண்டுமானால் ஒன்றுபட்ட சக்தியாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அரசை தாக்குமாறு வேண்டினார்.
மேஜர் கேசல்வுட் விசாரணைக்குழுவின் முன் தானாக சாட்சியங்கள் சொல்லச்சென்று கீழ்க்கண்ட விவரங்களைக் கூறினார்:
“சமீபத்தில் பிரஞ்சுத்தீவில் [மொரீசியஸ்] சிறைப்படுத்தப்பட்டிருந்த திரு. சால்டரை சந்தித்தேன். அவர் தீவில் இருந்த போது தரங்கம்பாடி வழியாக இந்தியா சென்று இந்தியர்கள் மனதில் புரட்சியை விதைப்பதற்காக பல இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்ததாகக் கேள்விப்பட்டேன்’. ‘வேலூர் எழுச்சி இயற்கையானது அல்ல; அதிகாரத்தைக் கைப்பற்ற நடத்திய திட்டமிட்ட முயற்சி; அதன் நோக்கம் ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்துவது; பேட்டைவாழ் முஸ்லிம்களும் அதிருப்தியுற்றிருந்த சில இந்திய இராணுவஅதிகாரிகளும் புதியதோர் மைசூர் சுல்தானியத்தை நிறுவும் நம்பிக்கையிலிருந்தனர்’ என கில்லெஸ்பி அமைத்திருந்த விசாரணைமன்றம் சொல்லி மைசூர் இளவரசர்ளை பொறுப்பாக்கியதில் உண்மை இருப்பதை நாம் உணர முடிகிறது” என்று அவரு கூறினார்.
பட மூலாதாரம், India Post
வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையுடன் நடந்த எழுச்சி
இந்துக்களும் முஸ்லிம்களும் மத வேறுபாடுககளை மறந்து, ஒன்றிணைந்து போரிட்டார்கள் என்பதற்கு இரு பிரிவினரின் எண்ணிக்கையும் அனைத்துப்பட்டியல்களிலும் சமமாக உள்ளதே சான்றாகும். அதைவிட முக்கியமானது, பீரங்கிவாயில் வைத்து, தூக்கிலிடப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்ட 19 நபர்களில் 12 நபர்கள் இந்துக்கள், 7 பேர் இஸ்லாமியர்கள் என்பதாகும்.
சாதிக்கு அப்பாற்பட்டு இந்திய போர் வீரர்கள் செயல்பட்டதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். விசாரணைக்குழுவின் முன் ஆஜரான 23ஆம்படை இரண்டாம் பிரிவின் மேஜர் டிராட்டர் கிளர்ச்சிக்காரர்களின் சாதி அடிப்படை பற்றி தெரிவிக்க வேண்டிய போது, ‘பணியில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகக் கீழ்நிலைச் சாதியைச் சார்ந்தவர்களை உள்ளடக்கிய அப்படை சிவகிரி அருகே உள்ள பாளையக்காரர் பகுதியான சங்கரன்கோவிலில் எழுப்பப்பட்டது. உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், பாளையக்காரர் மக்களில் பெரும்பாலோர் அப்படையில் அமர்த்தப்பட்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட சாதியினரான பறையர்களும் சக்கிலியர்களும் பெருமளவில் கொண்டிருந்த அப்படை லெப்டினன்ட் கோம்ஸ் தலைமையில் 23ஆம் படையின் ஓர் கூடுதல் (ஏழாம்) பிரிவாக செயல்பட்டுவந்தது’ என்றார்.
இரண்டரை ஆண்டுகள் பறையர் குடியிருப்பில் வசித்துவிட்டுப் பின்னர் கோட்டைக்குள் குடிபுகுந்த தமிழ் தெரிந்த ஐரோப்பிய பெண் திருமதி பர்க் தனது வீட்டிற்கருகில் உள்ளூர்வாசிகள் நடத்திய கூட்டங்கள், உரையாடல்கள் ஆகியன பற்றிய விவரங்களை விசாரணைக்குழுவிடம் தெரிவித்தார். அதிருப்தியுற்றிருந்த அம்மக்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு, தான் வேலூரில் இருந்தபோது, லெப்டினன்ட் கர்னல் டார்லி தலைமை ஏற்றிருந்த நான்காம் படையில் அதிருப்தி மேலோங்கியிருந்ததாகவும், பீச் கமிட்டி என அவர்கள் அழைத்த பறையர்கள் கொண்ட கூட்டம் அடிக்கடி காலை முதல் இரவு வரை அவரது வீட்டிற்கு அருகில் நடந்ததாகவும், தங்கள் சுண்டுவிரல்களை இணைத்து நாம் அனைவரும் ஒன்றென ஒருவருக்கொருவர் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டதாகவும் சொன்னார்.
வயதான, முடமாகியிருந்த பறையர் சாதியைச் சார்ந்த காளன் என்ற பெயர் கொண்ட துப்பாக்கி வீரரைச் “சதிகாரர்களில்” முக்கியமான நபராகத் திருமதி பர்க் அடையாளம் காட்டினார். ஐரோப்பியர்கள் இந்நாட்டில் வாழ்வதற்கு எந்த உரிமையும் கிடையாது. ஐரோப்பியர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால் அவர்களை எளிதில் அழித்துவிட்டு அதன்பிறகு ஏராளமான செல்வங்களை நாம் பெறலாம் எனத் தனது மனதில் உள்ள எண்ணங்களை அத்தருணங்களில் அவன் வெளிப்படுத்தினான்’ எனச் சொன்ன திருமதி பர்க், ஒருநாள் காளன் தனது மகன் முன்னிலையில், தான் கிராமத்தின் தலைவன் எனவும், வெகுவிரைவில் இந்த நாட்டில் ஒரு ஐரோப்பியர் கூட இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப் போவதாகவும் பிரகடனப்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் மேஜர் பார்கிளேயால் தயாரிக்கப்பட்ட சென்னை சாந்தோம் உறைவிடத்தில் கைதிகளாக இருந்தவர்களின் பட்டியல் 1807 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் நாள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1ஆம் படை யின் முதல் பிரிவினர் 21 பேரும் 23ஆம் படையின் இரண்டாம் பிரிவினர் 151 பேரும் உள்ள இப்பட்டியல் மூலம் வேலூர்க் கிளர்ச்சியில் கலந்து கொண்ட வேளாண்மையை வாழ்வாதாரமாக கொண்டிருந்தவர்கள் பங்களிப்பு பற்றி சாதி வாரியாக அறியமுடிகிறது. நில உடைமையாளர்களான வேளாளர்களும் (29 பேர்) பாலிஜா நாயுடுகளும் (39 பேர்) கலந்திருப்பது தமிழகப் பகுதிகளில் கடுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதையும் அதனால் அச்சமூக மக்கள் இராணுவத்தில் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
முக்குலத்தோர் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது. கள்ளர், மறவர் எண்ணிக்கையைக் காட்டிலும் விவசாயத்திற்குச் சென்றிருந்த அகமுடையார் அதிக எண்ணிக்கையிலிருப்பது வேளாண்குடியினரின் துயரை பிரதிபலிக்கிறது. பட்டியலின மக்களாகிய பறையர்களும், பள்ளர்களும் அதிக எண்ணிக்கையில் கிளர்ச்சியில் பங்கெடுத்துள்ளனர். சென்னையில் குடியிருந்த விசாரணைக்காக பிடித்து வைக்கப்பட்ட போர் வீரர்கள் பட்டியலிலும் பறையர்கள் இருப்பது பளிச்சென்று தெரிகிறது.
வேலூர் புரட்சி குறித்தான மதிப்பீடு
ஆங்கிலேயரின் நிலவரி சுரண்டல் கொள்கையினால் கடும் வறட்சி, உணவுப் பற்றாக்குறை என உருவாகியிருந்த கடுஞ்சூழலில், ஆட்சியை இழந்ததால் பாதிக்கப்பட்டிருந்த சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், அவர்களது சந்ததியினர், குறிப்பாக ஆந்திரா-ஒரிஸ்ஸா மாநிலங்களுக்கிடேயேயான பகுதிகளில் (northern circars) கம்பெனி அரசுக்குக் கப்பம் செலுத்திவந்த கிட்டத்தட்ட பத்துப் பாளையக்காரர்கள், ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தக்க தருணத் திற்காகக் காத்திருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் புதிய இராணுவ விதிகள், தலைப்பாகை, உடை, கிறித்தவ மதமாற்றத்திற்கான முயற்சி என்ற பீதி பரப்பப்பட்டு, அதன் மூலம் தென்னிந்தியாவில் உருவாகியிருந்த மக்களுடைய அதிருப்தியைப் பயன்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சியை அகற்றிவிட்டு மைசூர் சுல்தானிய ஆட்சியை மீண்டும் நிறுவத் திட்டமிடப்பட்டது.
தென்னிந்தியப் படை அதிகாரிகளும் வீரர்களும் அந்நியர் ஆதிக்க கொள்கையை வெறுத்து, வட்டார, மொழி, சாதி மத வேறுபாடுகளை மறந்து ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கியெறியத் திட்டமிட்டனர். போர் வீரர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்த இறுதி முயற்சியை மேற்கொள்ளப் பல ஆயுதங்களில் ஒன்றாக மதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வேலூரில் மட்டுமில்லாது தென்னிந்தியாவில் இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் அரசியல் நோக்கோடு தோன்றிய எழுச்சிகள் 1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சிக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தன. எனவே 1806ஆம் ஆண்டில் வெடித்த வேலூர்க் கிளர்ச்சி 1857ஆம் ஆண்டின் பெருங்கிளர்ச்சிக்கு முன்னோடி என்று தயக்கமின்றிச் சொல்ல முடியும்.
கூட்டுத் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டதால் பூலித்தேவரைப் போன்றோ, கட்டபொம்மனைப் போன்றோ, மருது சகோதரர்களைப் போன்றோ வரலாற்றுப் பாடங்களில் இதனை வழிநடத்தியவர்கள் இடம்பெறாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் மக்கள் மனதில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
(கட்டுரையாளர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் எழுதிய வேலூர்ப் புரட்சி 1806 என்ற ஆய்வு நூலில் இருந்த தகவல்களே இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு