ஈலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள், பிரபஞ்சத்தை உற்றுநோக்கும் ஆய்வுகளுக்கு இடையூறாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஈலோன் மஸ்கின் செயற்கைக்கோள் வலையமைப்பில் இருந்து வரும் ரேடியோ அலைகள், விஞ்ஞானிகளின் பிரபஞ்சத்தை உற்றுநோக்கும் செயல்முறைக்கு தடங்கலை ஏற்படுத்துகிறது.
மஸ்க்கின் புதிய தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், உலகம் முழுவதும் வேகமாக இணையத்தை வழங்குகின்றன. இவை முந்தைய பதிப்புகளைக் காட்டிலும் அதிகளவில் ரேடியோ தொலைநோக்கிகளின் பாதையில் குறுக்கிடுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நெதர்லாந்து ரேடியோ வானியல் நிறுவனத்தின் (ASTRON) கூற்றுபடி, சுற்றுப்பாதையில் வட்டமிட்டு வரும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள், ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் பிரபஞ்சத்தை உற்று நோக்குவதை தடுக்கின்றன. இது வானியல் ஆராய்ச்சிக்கு இடையூறாக இருக்கக் கூடும்.
ஸ்டார்லிங்க் உரிமையாளரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பிபிசியிடம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
நன்மைகளுடன் சிக்கல்களும் உள்ளன
இந்த செயற்கைக்கோள்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பிராட்பேண்ட் இணைய வசதியை வழங்குகின்றன. குறிப்பாக தொலைதூர இடங்களுக்கும், யுக்ரேன் மற்றும் ஏமன் போன்ற சவாலான சூழல்களை கொண்ட நாடுகளுக்கும் இணைய சேவை அளிக்கின்றன.
பிரிட்டனின் தொலைதூரப் பகுதிகளை வேகமான இணைய சேவை உதவியுடன் இணைக்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.
டிஜிட்டல், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறையின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில், ஸ்டார்லிங்க் சராசரியை விட நான்கு மடங்கு வேகமாக இணைய சேவை வழங்க முடியும் என்று சோதனைகள் காட்டுகின்றன.
ஆனால் வானியல் வல்லுநர்கள் கூற்றுப்படி இதனால் நன்மைகள் இருந்தாலும், சிக்கல்களும் இருக்கின்றன என்று கூறுகின்றனர்.
“ஒவ்வொரு முறையும் செயற்கைக்கோள்கள் அதிக திறனுடன் ஏவப்படும் போது, எங்களால் வானத்தை சரியாக பார்க்க முடியாமல் போகிறது” என்று ஆஸ்ட்ரோன் (ASTRON) நிறுவன இயக்குநர், பேராசிரியர் ஜெசிகா டெம்ப்சே பிபிசி செய்தியிடம் கூறினார்.
அதிக கதிர்வீச்சு உமிழும் V2 செயற்கைக்கோள்
“விண்மீன் திரள்களின் மையத்தில் உள்ள கருந்துளை ஜெட் (black hole jets) போன்றவற்றைப் பார்க்க முயற்சிக்கிறோம். லட்சக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கோள்கள் மற்றும் பழமையான விண்மீன் திரள்கள் சிலவற்றையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம்” என்று அவர் கூறினார்.
செயற்கைக்கோள் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் பகுதிகளை அவர் சுட்டிக்காட்டி பேசினார்.
இரண்டாம் தலைமுறை அல்லது V2, செயற்கைக்கோள்களால் ஏற்படும் பாதிப்பு, முதல் தலைமுறையை விட 32 மடங்கு சக்தி வாய்ந்தது என்பதை ஆஸ்ட்ரோன் கண்டுபிடித்தது.
பேராசிரியர் டெம்ப்சே தொடர்ந்து பேசுகையில், “இந்த கதிர்வீச்சு உமிழ்வு தொழில்துறை அமைப்பான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் நிறுவப்பட்ட வரம்புகளை மீறுகிறது.” என்றார்.
பூமியிலிருந்து 342 மைல்கள் (550 கிமீ) தொலைவில் தற்போது 6,402 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருப்பதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.
இந்த செயற்கைக்கோள்கள் ஒப்பீட்டளவில் பெரியவை – 3 மீ பிளாட் பேனல்கள் மற்றும் 8 மீ சோலார் பேனல்களின் வரிசையையும் அவை கொண்டுள்ளன.
2030இல் 1,00,000 செயற்கைகோள்கள் புவி சுற்றுப்பாதையை ஆக்கிரமிக்கும்
ஸ்பேஸ் எக்ஸின் முக்கிய போட்டியாளரான `ஒன் வெப்’ (OneWeb) 1,000க்கும் குறைவான செயற்கைக் கோள்களையே கொண்டுள்ளது. இருப்பினும், இந்த வணிகத் துறை விரிவடைகிறது. அமேசான் நிறுவனமும் அதன் சொந்த நெட்வொர்க்குகளை உருவாக்கி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3,000 செயற்கைக்கோள்கள் அந்நிறுவனம் ஏவ திட்டமிட்டுள்ளது. மேலும் அவற்றை தற்போது வடிவமைத்து வருகிறது.
2030-ஆம் ஆண்டு வாக்கில் புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 1,00,000 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்தில் உள்ள `LOFAR’ என்னும் ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொலைதூர விண்மீன்கள் மற்றும் கோள்கள் உட்பட விண்வெளியில் உள்ள பல பொருட்கள் மின்காந்த ஒளிக்கற்றையை (electromagnetic spectrum) வெளியிடுகின்றன.
இந்த கதிர்வீச்சு, அலைகளைப் போல பயணிக்கிறது. இந்த அலைகளை ரேடியோ தொலைநோக்கிகளால் கண்டறிய முடியும். இது நம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை தொலைநோக்கி மூலம் பார்க்க அனுமதிக்கிறது.
ஆனால் அந்த அலைகள் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களால் இடையூறை சந்திக்கின்றன.
விஞ்ஞானிகள் கவனித்த அனைத்து V2 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் இருந்தும் திட்டமிடப்படாத மின்காந்த கதிர்வீச்சு வெளியாவதை கண்டறிந்தனர்.
அடையாளம் காணப்பட்ட ஒளியின் பலவீனமான மூலங்களை (sources of light) விட இது சுமார் 10 மில்லியன் மடங்கு பிரகாசமாக இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
முன்னணி எழுத்தாளர் சீஸ் பாஸாவின் கூற்றுப்படி, இது வெறும் கண்ணுக்குத் தெரியும் மங்கலான நட்சத்திரங்களையும் முழு நிலவின் பிரகாசத்தையும்” ஒப்பிடுவது போன்றது.
“ஸ்பேஸ் எக்ஸ் ஒவ்வொரு வாரமும் சுமார் 40 இரண்டாம் தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவுவதால், இந்த பிரச்னை மேலும் மோசமாகி வருகிறது” என்று அவர் கூறினார்.
பிரிட்டனில் உள்ள ராயல் அஸ்ட்ரோனமிகல் சொசைட்டியின் துணை நிர்வாக இயக்குநர் ராபர்ட் மாஸ்ஸி கூறுகையில் : “ஒரு பெரிய வானொலி ஆய்வகத்தின் செயல்பாட்டை இந்த அளவிற்கு பாதிக்கும் பிரகாசமான கதிர்வீச்சு இருப்பது ஆபத்தானது. எனவே நாம் ஏதாவது உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்றார்.
விஞ்ஞானிகள் செயற்கைக்கோள்களின் ஒளி மாசுபாடு குறித்தும் கவலைப்படுகின்றனர். அதே சமயம் இது ஆப்டிகல் தொலைநோக்கிகளிலும் இடையூறு ஏற்படுத்துகிறது என்றும் அஞ்சுகின்றனர்.
முதல் தலைமுறை செயற்கைக்கோள்களின் கதிர்வீச்சு குறித்து ஸ்பேக்ஸ் எக்ஸ் உடன் பேசியதாகவும், தாங்கள் முன்வைத்த சிக்கல்களை நிறுவனம் கேட்டு கொண்டதாகவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தற்போதுள்ள மேம்படுத்தப்பட்ட V2 செயற்கைக்கோள்கள் மேலும் சக்திவாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது என்று ஆஸ்ட்ரோன் கூறுகிறது.
தீர்வு என்ன?
“LOFAR தொலைநோக்கியை இயக்கும் போது, இந்த புதிய V2 மினி ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள்களில் இருந்து வந்த சக்தி வாய்ந்த உமிழ்வுகளை பார்த்த போது அதிர்ச்சி அளித்தது” என்று பேராசிரியர் டெம்ப்சே கூறுகிறார்.
“இது உண்மையில் நிலத்திலிருந்து நிகழும் வானியல் ஆய்வுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. வெவ்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்துகிறது. இது தொடர்ந்தால், இந்த செயற்கைக்கோள்களின் உழிம்வை தடுக்க எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல், நாம் செய்யும் வானியல் ஆய்வுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும் ” என்று பேராசிரியர் டெம்ப்சே மேலும் கூறினார்.
விஞ்ஞானப் பணிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, செயற்கைக்கோள் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒரு தரநிலையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று அவர்கள் கூறினர்.
செயற்கைக்கோளில் பேட்டரியை ஷீல்ட் செய்வது போன்ற எளிய நடவடிக்கைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சு குறையும் என்று பேராசிரியர் டெம்ப்சே கூறினார்.
சில இடையூறுகள் தவறான மின்னணுவியலால் ஏற்படுகின்றன. அதனையும் கட்டுப்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முயற்சி செய்ய வேண்டும்.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில், “மிக விரைவில் நாம் காணும் ஒரே விண்மீன் கூட்டம் மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
இந்த கண்டுபிடிப்புகள் வானியல் மற்றும் வானியற்பியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு