பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், அர்ஜவ் பரேக்
- பதவி, பிபிசி
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்வாமிநாராயண் பிரிவும் போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) அமைப்பும் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளன.
பாரிஸில் நடைபெற்ற இந்தச் சம்பவம், அந்தப் பிரிவினருக்கு எதிராக ‘பெண்களுக்கு எதிரான பாகுபாடு’ குற்றச்சாட்டுகளையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியது.
எனினும், ஸ்வாமிநாராயண் பிரிவைப் பின்பற்றுபவர்கள் பெண்களை நடத்தும் விதம் குறித்து பல ஆண்டுகளாகவே சர்ச்சைகள் இருந்து வருகின்றன.
பிரபல பத்திரிகையாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சலீல் திரிபாதி, குஜராத்திகள் குறித்து தான் எழுதிய புத்தகத்தில், “ஸ்வாமிநாராயண் பிரிவின் எல்லைகளே குஜராத்தின் எல்லைகள். அவர்கள் தங்களுக்கென்று சொந்த எல்லைகளை வகுத்துக்கொண்டுள்ளனர். இந்தப் பிரிவில் பெண்களுக்கு விதிக்கப்படும் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள், அந்த எல்லைகளை அமல்படுத்துவதற்கான மற்றொரு வழியாகும்” என்று குறிப்பிடுகிறார்.
எனினும், ஸ்வாமிநாராயண் பிரிவு பெண்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், தலித்துகளுக்கு எதிராகவும் பாகுபாடு காட்டிய வரலாறு கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஒரு வழக்கில், ஸ்வாமிநாராயண் பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகள், தாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க நாட்டின் உச்சநீதிமன்றத்தில் முயன்றனர்.
இந்த வழக்கிலும், கோவில்களுக்குள் தலித்துகள் நுழைவதும், அவர்கள் எதிர்கொண்ட பாகுபாடும் முக்கியப் பிரச்னையாக இருந்தது.
நீதிமன்றத்துக்குச் சென்ற வழக்கு என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஸ்வாமிநாராயண் பிரிவையும் இந்து மதத்தையும் தொடர்புபடுத்தி நீதிமன்றத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கு, சுமார் 20 ஆண்டுகளாக நீடித்தது.
1947-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவில் ‘பம்பாய் ஹரிஜன் கோவில் நுழைவுச் சட்டம், 1947’ அமலுக்கு வந்தது.
இந்தச் சட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களிலும் தலித்துகள் நுழைந்து வழிபடுவதற்கான உரிமை வழங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் தலித்துகள் பரவலான பாகுபாட்டை எதிர்கொண்டதுடன், கோவில்களுக்குள் நுழைவதிலும் பல்வேறு தடைகளைச் சந்தித்தனர்.
இந்தச் சூழலில், 1947-ஆம் ஆண்டின் இறுதியில், மகா குஜராத் தலித் சங்கத்தின் தலைவரான முல்தாஸ் பூதர்தாஸ் வைஷ்யா, அகமதாபாத்தில் உள்ள ஸ்வாமிநாராயண் கோவிலான நர நாராயண்தேவ் கோவிலுக்குள் நுழையப் போவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அகமதாபாத் ஸ்வாமிநாராயண் பிரிவின் நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள் சார்பில் சாஸ்திரி யக்னபுருஷ்தாஸ் அகமதாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம், இந்த வழக்கு நடைபெற்ற ஸ்வாமிநாராயண் பிரிவுக்கும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள பிஏபிஎஸ் அமைப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பதாகும்.
இந்த வழக்கைத் தொடர்ந்த யக்னபுருஷ்தாஸ், ஒரு காலத்தில் பிஏபிஎஸ் அமைப்பின் தலைவராக இருந்த சாஸ்திரிஜி மகாராஜ் அல்ல. இருவரும் வெவ்வேறு நபர்கள்.
ஸ்வாமிநாராயண் பிரிவைச் சேர்ந்த கோவில்கள் ‘இந்துக் கோவில்கள்’ என்ற வரையறைக்குள் வராது என்றும், எனவே ஸ்வாமிநாராயண் பிரிவின் சத்சங்கிகளாக இல்லாத தலித்துகள் அந்தக் கோவில்களுக்குள் நுழைய முடியாது என்றும் யக்னபுருஷ்தாஸ் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக 1951-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அகமதாபாத் சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஸ்வாமிநாராயண் பிரிவுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்வாமிநாராயண் கோவிலுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், அகமதாபாத் நீதிமன்றம் ஸ்வாமிநாராயண் பிரிவு இந்து மதத்திலிருந்து வேறுபட்டது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்றத்திலும் ‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்று வாதிட்ட ஸ்வாமிநாராயண் பிரிவு
பின்னர், முல்தாஸ் வைஷ்யாவும் அப்போதைய பம்பாய் மாநில அரசும் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
உயர் நீதிமன்றத்திலும் ஸ்வாமிநாராயண் பிரிவைப் பின்பற்றுபவர்கள், தாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற வாதத்தைத் தொடர்ந்து முன்வைத்தனர்.
உயர் நீதிமன்றத்தில் ஸ்வாமிநாராயண் பிரிவினர் முன்வைத்த வாதங்களின் அடிப்படை:
- இந்தப் பிரிவை நிறுவிய ஸ்வாமிநாராயணே தன்னை கடவுள் என்று கருதுகிறார்.
- எனவே, ஸ்வாமிநாராயணை தெய்வமாகக் கருதும் இந்தப் பிரிவை இந்து மதத்தைப் பின்பற்றும் பிரிவாகக் கருத முடியாது.
- இந்தப் பிரிவால் நிறுவப்பட்ட கோவில்கள் பாரம்பரிய இந்துக் கடவுள்களை வழிபடுவதற்காக அல்ல; ஸ்வாமிநாராயணை வழிபடுவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவை. இது, இந்தப் பிரிவு இந்து மதத்திலிருந்து வேறுபட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
- ஸ்வாமிநாராயணைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் வழிபடுவது தங்கள் மதத்துக்கு எதிரான துரோகம் எனவும் இந்தப் பிரிவினர் கருதுகின்றனர். ஸ்வாமிநாராயணால் நியமிக்கப்பட்ட ஆச்சாரியர்கள் தீட்சை வழங்குகின்றனர். அந்தத் தீட்சையைப் பெற்றவுடன் பக்தர் ‘சத்சங்கி’ என்று அழைக்கப்படுகிறார். இதன்மூலம், அவர் அந்தப் பிரிவைப் பின்பற்றுபவர் என்ற தனித்த அடையாளத்தைப் பெறுகிறார்.
இந்த நான்கு அடிப்படைகளைக் கொண்டு, ஸ்வாமிநாராயண் பிரிவு இந்து மதத்திலிருந்து வேறுபட்டது என்றும், எனவே தலித்துகள் கோவில்களுக்குள் நுழைவது தொடர்பான சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்றும் நீதிமன்றத்தில் நிரூபிக்க அந்தப் பிரிவினர் முயன்றனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, 1956-ஆம் ஆண்டு பம்பாய் இந்து வழிபாட்டுத் தலங்கள் (நுழைவு அங்கீகாரம்) சட்டம் இயற்றப்பட்டது.
1958-ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றம் ஸ்வாமிநாராயண் பிரிவினரின் வாதங்களை நிராகரித்தது. ஸ்வாமிநாராயண் பிரிவு இந்து மதம் மற்றும் இந்து சமூகத்தின் ஒரு பகுதி என்றும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தை எட்டியது. இங்கு கதை மேலும் சுவாரஸ்யமாகிறது. ஏனெனில், உச்சநீதிமன்ற அமர்வும் ஒரு முக்கியமான கேள்விக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது: **’இந்து’ என்பதன் சரியான வரையறை என்ன?**
தீர்ப்பில் இந்து மதம் குறித்து உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
பட மூலாதாரம், Supreme court of India
தலைமை நீதிபதி பி.பி. கஜேந்திரகட்கர் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஸ்வாமிநாராயண் பிரிவு இந்து மதத்திலிருந்து வேறுபட்டதா, 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டம் அந்தப் பிரிவின் கோவில்களுக்கும் பொருந்துமா என்பதே இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கேள்விகளாக இருந்தன.
1966-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஸ்வாமிநாராயண் பிரிவு இந்து மதத்திலிருந்து வேறுபட்டது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் இந்து மதம் குறித்து விரிவாக விளக்கியது.
கடந்த 4,000 ஆண்டுகளில் இந்து மதம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ந்திருப்பதால், அதன் தனித்துவமான அம்சங்களை வரையறுப்பது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்குகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
“உலகின் பிற மதங்களைப் போலல்லாமல், இந்து மதம் ஒரு குறிப்பிட்ட கடவுளை வழிபட வேண்டும் என்று வலியுறுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட கோட்பாடு அல்லது நம்பிக்கைக்கு மட்டும் இந்த மதம் கட்டுப்பட்டதல்ல. அதேபோல், குறிப்பிட்ட ஒரு தத்துவக் கருத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே வகையான மதச் சடங்குகள் அல்லது பழக்கவழக்கங்களையும் அது பின்பற்றுவதில்லை. உண்மையில், எந்தவொரு மதம் அல்லது பிரிவுக்கும் பொதுவாக வரையறுக்கப்படும் குறுகிய, வழக்கமான அம்சங்களுக்குள் இந்து மதத்தை அடக்கிவிட முடியாது. பரந்த பொருளில், அதை ஒரு ‘வாழ்க்கை முறையாக’ மட்டுமே கருத முடியும்.”
இந்தத் தீர்ப்பில், நீதிமன்றம் “மதம் மற்றும் நெறிமுறைகள் கலைக்களஞ்சியம்”, மோனியர் வில்லியம்ஸ் எழுதிய “இந்தியாவில் மதச் சிந்தனையும் வாழ்க்கையும்” என்ற நூல், மற்றும் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய “இந்துமத வாழ்க்கை நோக்கு” என்ற நூல் ஆகியவற்றையும் மேற்கோள் காட்டி விரிவாக ஆராய்ந்து விவாதித்தது.
இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களில் சிலர் எந்தவிதமான சிலை வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதேநேரத்தில், இந்து மதத்தில் எண்ணற்ற தெய்வங்கள் இருப்பதுடன், பல்வேறு இந்து சமூகத்தினரும் வெவ்வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஸ்வாமிநாராயணின் வாழ்க்கை, அவர் எழுதிய ‘சிக்ஷாபத்ரி’ நூல் மற்றும் ஸ்வாமிநாராயண் பிரிவைச் சேர்ந்த பிற நூல்கள் குறித்தும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் விவாதித்தது.
இதையடுத்து, தீர்ப்பில் உச்சநீதிமன்ற அமர்வு, “ஸ்வாமிநாராயண் பிரிவைப் பின்பற்றுபவர்கள் இந்து சமூகத்திலிருந்து தனித்த ஒரு சமூகமாகவும், அவர்களின் மதம் இந்து மதத்திலிருந்து வேறுபட்டதாகவும் கூறுவது முற்றிலும் தவறானது” என்று தெரிவித்தது.
“ஸ்வாமிநாராயண் ஓர் இந்து துறவி. வல்லபாச்சாரியாரின் போதகர்கள் மற்றும் பின்பற்றுபவர்களிடையே நிலவிய சீர்கேடான நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், இந்து மதத்தை அதன் ஆரம்பகாலப் பெருமைக்கும் தூய்மைக்கும் மீட்டெடுக்கவும் அவர் உறுதியாக இருந்தார்,” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இறுதியாக, தலித்துகளுக்கு கோவில்களுக்குள் நுழைவதற்குச் சட்டம் வழங்கிய உரிமை என்பது, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து சமூக உரிமைகளின் அடையாளமாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
“இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள ஜனநாயக வாழ்க்கை முறையின் அடிப்படைத் தூணாக சமூக நீதி இருப்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை முடித்தது.
தலித்துகளும் ஸ்வாமிநாராயண் பிரிவும்

குஜராத்திலும் ஸ்வாமிநாராயண் பிரிவுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான பாகுபாடு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
1980-களில் வெளியான ஸ்வாமிநாராயண் பிரிவு தொடர்பான சில நூல்களில், குஜராத்தின் கீழ்த்தட்டு மக்களின் நிலையை இந்தப் பிரிவு மேம்படுத்தியதாகவும், பிரிட்டிஷார் மற்றும் மராத்தியர்கள் கூட இந்தப் பிரிவைப் பின்பற்றியதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், குஜராத் வரலாற்றாசிரியர் மகரந்த் மேத்தா, 1986-ஆம் ஆண்டு ஸ்வாமிநாராயண் பிரிவு குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். சூரத்தில் உள்ள சமூக ஆய்வுகள் மையத்தின் ‘அர்த்தா’ இதழில் இந்தக் கட்டுரை வெளியானது.
அதில், ஸ்வாமிநாராயண் பிரிவு முன்வைத்த இந்தக் கூற்றுகளை அவர் ஆய்வு செய்து, அவற்றில் பெரும்பாலானவற்றை மறுத்தார்.
இதையடுத்து, மகரந்த் மேத்தா மற்றும் ‘அர்த்தா’ இதழின் ஆசிரியர்களான கன்ஷ்யாம் ஷா, அச்சுத யாக்னிக் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 295-A பிரிவின் கீழ் குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்வாமிநாராயண் பிரிவு அரசிடம் கோரியது.
சஹஜானந்த் எனப்படும் ஸ்வாமிநாராயண், தலித்துகளின் நிலையை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க வகையில் எதையும் செய்யவில்லை என்று மகரந்த் மேத்தா தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மகரந்த் மேத்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்வாமிநாராயண் பிரிவு பதிலளித்தது. தலித்துகள் தொடர்பான அந்தப் பிரிவின் அணுகுமுறையைப் புரிந்துகொள்ள இந்தப் பதில் ஒரு பார்வையை வழங்குகிறது.
அந்தப் பிரிவு, “சுவாமி சஹஜானந்த் வழங்கிய ஆதரவின் கீழ், தலித் சமூகத்தினர் தூய்மையைப் பேணக் கற்றுக்கொண்டனர். அவர்களது நடத்தையும் பிராமணர்களைப் போன்றதாக மாறியது. அப்போது நிலவிய சாதி அமைப்பின் சூழலில், சஹஜானந்த் அவர்களை முன்னேற்றுவதற்காகப் பாடுபட்டார்” என்று தெரிவித்தது.
“தலித் சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் வசித்த இடங்களில், சஹஜானந்த் அவர்களுக்காகத் தனிக் கோவில்களைக் கட்டினார். அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்புக்கு மத்தியில், அவர்களின் விடுதலைக்காக சஹஜானந்த் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். தலித்துகளுக்கு கல்வியறிவையும் வழங்கினார். இதன் காரணமாக, அவர்கள் மத நூல்களைப் படிக்கத் தொடங்கினர்” என்றும் அந்தப் பிரிவு தெரிவித்தது.
1966-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி சுமார் 60 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஸ்வாமிநாராயண் பிரிவினர் தலித்துகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.
2021-ஆம் ஆண்டு ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியின்படி, நியூஜெர்சியில் உள்ள பிஏபிஎஸ் ஸ்வாமிநாராயண் கோவிலில் தலித் சமூகங்களைச் சேர்ந்த பலரை கட்டாயத் தொழிலாளர்களாகப் பணியமர்த்தியதாகக் கூறி உள்ளூர் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.
அவர்களுக்கு மாதம் 450 அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள மேலும் சில ஸ்வாமிநாராயண் கோவில்களிலும் இதேபோன்ற நிலை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், ஊதியம் குறைவாக வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை பிஏபிஎஸ் அமைப்பின் பிரதிநிதி மறுத்தார்.
இந்த வழக்கில் குற்றவியல் விசாரணை நிறைவடைந்துவிட்ட நிலையில், வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
‘ஃபிரான்ஸ் 24’ வெளியிட்ட செய்தியிலும், பிஏபிஎஸ் கோவிலில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரின் கதை இடம்பெற்றுள்ளது. அவர் தற்போது அந்தக் கோவிலை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால், தனக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று கூறுகிறார். அவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கோவில் கட்டுமானப் பணியில் கல் செதுக்கும் தொழிலாளியாகப் பணியாற்றுவதற்காக அவர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கோவில் வளாகம் மத்திய சிறைச்சாலை போன்றிருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். யாரிடமும் பேசவோ, வெளியே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை என்றும், கல் செதுக்கும் வேலையை மட்டுமே செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த வழக்கின் விசாரணையின்போதும் பிஏபிஎஸ் அமைப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
சாதி மற்றும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டைத் தங்கள் அமைப்பு எதிர்ப்பதாக பிஏபிஎஸ் கடந்த காலங்களில் கூறியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு