1
இலங்கைத் தமிழ் வணிக சமூகம் மற்றும் ஹரோ தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், ஹரோ கவுன்சில் (Harrow Council) தலைவர்களுடன் தங்களது முதல் சந்திப்பை மேற்கொண்டனர்.
தெற்கு ஹரோவின் நார்தோல்ட் வீதியில் உள்ள பிரபா உணவகத்தில், நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 31) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்த முக்கியச் சந்திப்புக்கு ஹரோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் குமாரசாமி இந்திரஜித் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் ஹரோ கவுன்சில் தலைவர் கவுன்சிலர் பால் ஆஸ்போர்ன் (Cllr. Paul Osborn), ஹரோ மேற்கு கன்சர்வேட்டிவ் சங்கத்தின் தலைவர் கவுன்சிலர் கிறிஸ் பாக்ஸ்டர் (Cllr. Chris Baxter) மற்றும் ராக்ஸெத் வார்டு கவுன்சிலர் ஜான் பாக்ஸ்டர் (Cllr. John Baxter) ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் தமிழ் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் வணிகத் தலைவர்களும் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
இந்சந்திப்பின் போது தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, சட்ட அமலாக்கம் மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடர்பான சிக்கல்கள், சமூக விரோத நடத்தைகள் மற்றும் அதன் பாதிப்புகள், தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அத்துடன், ஹரோ தமிழ்ச் சங்கத்துக்குத் தேவையான ஆதரவுகள் மற்றும் தமிழ்ச் சமூகத்துக்கென ஒரு பிரத்யேக சமூக மையத்தின் (Tamil Community Centre) அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டன.
மக்களின் கவலைகளைக் கேட்டறிந்த கவுன்சிலர் பால் ஆஸ்போர்ன், முன்வைக்கப்பட்ட விவகாரங்களை ஹரோ கவுன்சில் முறையாக ஆய்வு செய்யும் என்றும், அது குறித்த கருத்துகளைத் தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிவிப்பதாகவும் உறுதியளித்தார்.
ஹரோ கவுன்சில், தமிழ்ச் சமூகம் மற்றும் உள்ளூர் வணிகங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதில் இந்தச் சந்திப்பு ஒரு முக்கியமான மற்றும் நேர்மறையான தொடக்கமாகக் கருதப்படுகிறது.


