லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்கு பைடன் பிறப்பித்துள்ள உத்தரவு என்ன?
ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறி
முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். ஹெஸ்பொலா தலைமையகத்தை தாக்கியதாக கூறினாலும், ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பெயரையோ, அவர்தான் தாக்குதலின் இலக்காக இருந்தார் என்றோ அவர் ஏதும் குறிப்பிடவில்லை.
ஆனால், இஸ்ரேல் நடத்திய இந்த தாககுதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது.
ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
IDF-இன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், “ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட்டில் ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மற்றும் பிற ஹெஸ்பொலா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு
‘ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்
தெற்கு லெபனானில், ஹெஸ்பொலாவின் ஏவுகணைப் பிரிவு தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் துணைத் தலைவர் ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி புதன்கிழமை அன்று ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது உட்பட இஸ்ரேல் மீதான ஏராளமான தாக்குதல்களின் பின்னணியில் அலி இஸ்மாயில் இருந்தார் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
தாக்குதலைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்கப் படைகளுக்கு புதிய உத்தரவு
மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
“மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையைல் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்” என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார்.
‘எந்த சக்தியாலும் இஸ்ரேலைத் தடுக்க முடியாது’
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா உட்பட எந்த சக்தியாலும் ‘தடுக்க முடியாது’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.
ஜோசப் பொரெல் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாங்கள் செய்வது போர்நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொடுப்பது தான். ஆனால் காஸாவில் அல்லது மேற்குக் கரையில் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை யாராலும் தடுக்க முடியாது என்று தான் தெரிகிறது” என்றார்.
“ஹெஸ்பொலா அழிக்கப்படும் வரை இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தாது” என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியதாக பொரெல் கூறினார்.
21 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் அழைப்பையும் அவர் ஆதரித்து பேசினார்.