தெலங்கானாவில் இறுதி ஊர்வலத்திற்கு பறை அடிக்காததால் ஒரு தலித் குடும்பத்தை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தின் கௌடோஜிகுடா கிராமத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கிராமத்தில் ‘மாதிகா’ சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைச் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்க கிராமப் பெரியவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
மேற்படிப்பு படித்து, தங்கள் விருப்பப்படி வேலை செய்யும் தலித் சமூக இளைஞர்களைக் குறிவைத்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் மட்டுமின்றி சக தலித் பிரிவினர் சிலரும் சம்பந்தப்பட்டிருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் 500 பேர் வசிக்கும் சிறிய கிராமமான கௌடோஜிகுடா இந்த மோசமான செயலால் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
இந்தக் கிராமம் ஹைதராபாத்தில் இருந்து 46 கி.மீ தொலைவில் உள்ளது. கிராமம் ஆரம்பிக்கும் சாலையில் அம்பேத்கர் சிலை ஒன்று காணப்படுகிறது.
இந்தச் சிலையை கடந்து சென்றால், கிராமத்தினரால் ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பத்தினரின் வீடு உள்ளது. பஞ்சமி நர்சம்மா, பஞ்சமி அர்ஜுன், மற்றும் பஞ்சமி சந்திரம் ஆகியோரின் குடும்பம் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறது.
கௌடோஜிகுடா கிராமத்திற்குள் செல்ல வேண்டுமெனில், இந்த வீட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன?
இந்தக் கிராமத்தில் முதிராஜ் என்னும் சாதிப் பிரிவை சேர்ந்த ரங்கப்பள்ளி மல்லையா செப்டம்பர் 3-ஆம் தேதி உயிரிழந்தார். இறந்தவரின் குடும்பத்தினர் அதே ஊரைச் சேர்ந்த பஞ்சமி சந்திரம் குடும்பத்தினரிடம் இறுதி ஊர்வலத்தில் பறை அடிக்குமாறு கேட்டனர்.
ஆனால், வழக்கமாக இறப்பு வீட்டில் பறை அடித்து வந்த அவர்களின் குடும்பத்தினர், தற்போது அந்தத் தொழிலை விட்டுவிட்டதாகக் கூறினர்.
பஞ்சமி சந்திரம், உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள செகந்திராபாத் முதுகலை கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். முன்பு பல தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
அவரது தம்பி பஞ்சமி அர்ஜுன் முதுகலை பட்டம் முடித்து தற்போது ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்தக் கிராமத்தில் முதுகலை முடித்த இளைஞர்கள் இந்த இருவர் மட்டுமே என கிராம மக்கள் தெரிவித்தனர். இவர்களது தந்தை சங்கரய்யா பறை அடிக்கும் தொழிலை செய்து வந்தார். அவர் 2015-இல் இறந்துவிட்டார்.
“என்னுடைய சிறுவயதில் எங்களின் அப்பா பிழைப்புக்காக பறை அடிப்பார். ஆனால் நான் படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன்,” என்றார் சந்திரம்.
33 வயதான சந்திரம் மேலும் கூறுகையில், “திருமணம், இறுதிச் சடங்குகள், மற்றும் திருவிழாக்களின் போது பறை அடிப்பதற்காக விடுமுறை எடுத்ததால், வேலையில் இருந்து நீக்கப்பட்டேன்,” என்றார்.
”நான் பறை அடிப்பதை நிறுத்தி ஐந்து வருடங்களாகிறது,” என்றார்.
“எங்கள் தலைமுறையில் யாரும் படித்தவர்கள் இல்லை. என் மகன்கள் படித்தால் நன்றாக வருவார்கள் என்று நம்பினேன். தினமும் காய்கறிகளை ஹைதராபாத்திற்கு கொண்டு சென்று விற்று, அந்த பணத்தில் என் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். என் கணவரின் உடல்நிலை சரியில்லை. அவரைக் கவனித்துக் கொண்டே குடும்பத்தை நிர்வகித்தேன்,” என்று பஞ்சமி நர்சம்மா பிபிசியிடம் கூறினார்.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்தினர்
பஞ்சமி நர்சம்மா குடும்பம் பறை அடிக்காததால் பொறுமையிழந்த ஊர் பெரியவர்கள் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி கிராமத்தில் கூட்டம் நடத்தினர்.
பஞ்சமி சந்திரம் பிபிசியிடம் கூறுகையில், ”முன்னாள் கிராமத் தலைவர் பொட்டு வெங்கடேஷ்வர்லு, முன்னாள் துணைத் தலைவர் பஞ்சமி ரேணுகுமார், மற்ற பெரியவர்கள் மற்றும் கிராம மக்கள் எங்களை ஒதுக்கி வைக்கும் முடிவை எடுத்தனர், எங்கள் வாதங்களைக் கூட கேட்கவில்லை,” என்று விவரித்தார்.
‘‘செப்டம்பர் 10-ஆம் தேதி பஞ்சாயத்துக்குப் போனோம். ‘பறை அடிக்க முடியுமா முடியாதா’ என்று கேட்டார்கள். எங்கள் இடத்தில் யாரேனும் பறை வாசிக்க விரும்பினால் அடிக்கலாம் என்றோம். ஆனால் அதற்கு யாரும் முன்வரவில்லை,” என்றார்.
“என் தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு எங்களை அவமானப்படுத்தினர். ‘உன் தந்தை பறை அடித்தவர் தானே? அவருக்கு பிறந்த நீ, பறை அடிக்கக் கூடாதா?’ என்று அவமதித்தனர். இனிமேல் பறை அடிக்க விருப்பமில்லை என்றால் ஊர் சார்பாக எங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் (சன்மானமாக கொடுக்கப்பட்ட நிலம்) திரும்பப் பெறப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் என்று பஞ்சாயத்தில் தீர்மானம் எழுதினார்கள். எங்களிடம் யாரேனும் பேசினால் அவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர்,” என சந்திரம் தெரிவித்தார்.
“இவ்வாறு முடிவு எடுத்த பிறகு யாரும் எங்களிடம் பேசுவதில்லை. தலையைத் திருப்பிக் கொண்டு போகின்றனர். எங்களுக்கு தேவையான பொருள்களை பக்கத்து ஊர்களில் இருந்து வாங்குகிறோம்,” என்றார் பஞ்சமி நர்சம்மா.
“சிறுவயதில் இருந்தே எங்களுடன் இருந்தவர்கள் கூட எங்களை ஒதுக்கி வைக்கிறார்கள். எங்களுடன் ஒருவர் பேசியதற்காக கடுமையாகத் தாக்கப்பட்டார். எனவே கிராமத்தில் எங்களுடன் பேச யாரும் முன்வருவதில்லை,” என்று அர்ஜுன் பிபிசியிடம் கூறினார்.
பஞ்சாயத்து தீர்மானம் எழுதிய அந்தப் புத்தகத்தின் நகலை பிபிசி பெற்றுள்ளது. அதில், பஞ்சமி சங்கரய்யாவின் மகன்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கிராம மக்கள் யாரும் பேசக்கூடாது என எழுதப்பட்டுள்ளது. அதன் கீழ் 23 கையெழுத்துகள் உள்ளன. அதை மீறுபவர்களும் கிராமத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
“படிக்காததால் அப்பா பறை அடித்தார். ஆனால் இப்போது எங்கள் தலைமுறையினர் படித்திருக்கிறோம். சாதிவெறியால் எங்களையும் பறை அடிக்க சொல்லி கட்டாயப்படுத்துவது நியாயமா? கிராமத்தில் உள்ள சிலர் நாங்கள் படிப்பதையும் வளர்வதையும் விரும்பவில்லை. அதனால்தான் இதெல்லாம் நடந்தது,” என்கிறார் பஞ்சமி சந்திரம்.
31 பேர் மீது வழக்குப்பதிவு
செப்டம்பர் 10-ஆம் தேதி, பஞ்சமி அர்ஜுன் சமூக ஊடக தளமான எக்ஸ் வாயிலாக மேடக் காவல்நிலைய எஸ்.பி-யிடம் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். மேலும் அவர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தார்.
செப்டம்பர் 11-ஆம் தேதி காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமத்திற்குச் சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் தலித் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தலைவர்களுடன் சேர்ந்து செப்டம்பர் 12-ஆம் தேதி புகார் அளித்தனர்.
முதற்கட்டமாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பஞ்சமி சந்திரமின் குடும்பத்தினருக்கும், முன்னாள் ஊர் துணைத் தலைவர் ரேணுகுமாருக்கும் பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இருவரது வீடுகளும் அருகருகே உள்ளன. இரண்டு குடும்பங்களுக்கும் ஒரே குடும்பப் பெயர்தான் என கிராம மக்கள் கூறுகின்றனர்
இந்த முன்விரோதம் பற்றிப் பேசிய பஞ்சமி அர்ஜுன்,”நாங்கள் நன்றாகப் படிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. எங்கள் வீட்டில் இருவர் முதுகலை பட்டம் பெற்றோம். எனவே பல வருடங்களாக எங்கள் குடும்பத்தைத் தொந்தரவு செய்து வருகிறார். நான்கு ஆண்டுகளாக எங்களுடன் பழகுவதை நிறுத்தி விட்டனர்,” என்றார்.
”வேறொரு இடத்தில் வீடு கட்ட முற்பட்ட போது, அங்கு கட்டுமானப் பணியை நிறுத்தி, அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படுத்தினர். அவர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தில் இருந்து விலகிய பிறகு எங்களுக்கு வீடு கட்ட அனுமதி கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், எங்கள் நிலத்திற்கு செல்லும் வழியில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டு பிரச்னைகளை ஏற்படுத்தினர்,” என்றார் அர்ஜுன்.
செப்டம்பர் 28 அன்று பிபிசி கிராமத்திற்குச் சென்றபோது தெலங்கானாவின் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஆணைய அதிகாரிகளும் அந்தக் கிராமத்திற்கு வந்திருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஆணையத்திடம் தங்கள் நிலைப்பாட்டை சொன்ன அதே நேரத்தில் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு அதுவும் தெரியாது என்று தெரிவித்தனர்.
முன்னாள் ஊர் துணைத் தலைவர் ரேணுகுமாருக்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சம்பவம் பெரியதானதாக அவர்கள் தெரிவித்தனர்
மேலும், ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் போது மற்ற யாரும் ஏன் அதை தடுத்து நிறுத்தவில்லை என்று அங்கிருந்த சிலரிடம் பிபிசி கேட்டது. சிலர் பதில் சொல்ல தயங்கினாலும், சிலர் இப்படி நடந்திருக்க கூடாது என்றும் ஒதுக்கி வைப்பது தவறு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“கிராமத்துப் பெரியவர்கள் கல்வியறிவு இல்லாததாலும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைப் புரிந்து கொள்ளாததாலும் இவையெல்லாம் நடந்ததாகத் தெரிகிறது. அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், கிராமத்தில் தகராறுகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் அதிகாரிகளுக்கு பொறுப்பு உள்ளது,” என்றார் இந்த கிராமத்தை சேர்ந்த சாஹேப் என்பவர்.
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நடைமுறை பற்றி அவரிடம் கேட்டதற்கு, “அப்படிச் செய்வது தவறு. அவர்களை இப்படி தண்டிப்பது சரியல்ல,” என்றார்.
கிராமத்தில் அனைவரும் ஒன்றாக வாழ்கிறார்கள், முதிராஜ், தலித் என்ற வேறுபாடு இல்லை என்று கிராமவாசி அனிதா கூறினார். இதே வழக்கில் அவரின் கணவர் கணேஷை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
”பஞ்சமி சந்திரம் குடும்பத்தினர் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். பிரச்னை இவ்வளவு பெரியதாகும் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அனிதா.
முன்னாள் ஊர் துணைத் தலைவர் ரேணுகுமாரின் வார்த்தைகளைக் கேட்டு இப்படி செய்ததாகவும், கிராம மக்கள் அனைவரும் இந்த வழக்கில் சிக்கியதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.
இது தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக பிபிசி, முன்னாள் ஊர் தலைவர் போட்டு வெங்கடேஷ்வர்லுவின் வீட்டுக்குச் சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது.
மேலும் பிபிசி முன்னாள் துணை ஊர் தலைவர் ரேணுகுமார் வீட்டிற்கு சென்றபோது, அவரது குடும்பத்தினர் யாரும் அங்கு இல்லை. அவர்களின் உறவினர்களும் பிபிசியிடம் பேச மறுத்துவிட்டனர்.
‘தீவிர விசாரணை நடத்தப்படும்’
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என்று தெலங்கானா பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையத் தலைவர் பக்கி வெங்கடையா பிபிசியிடம் தெரிவித்தார். இதில் தலித் பிரிவு மக்களின் பங்கும் உள்ளது தெரியவந்துள்ளது என்றார்.
மறுபுறம், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, செப்டம்பர் 18-ஆம் தேதி, பஞ்சமி சந்திரம் குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த மனுவை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று செப்டம்பர் 21-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் கிராம மக்களுக்கு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி மேடக் ஆட்சியர் ராகுல் ராஜ், எஸ்பி உதய் குமார் ரெட்டி ஆகியோர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி கூட்டம் ஒன்றை நடத்தினர்.
மேடக் ஆட்சியர் பிபிசியிடம், “பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளை தீர்த்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்” என்றார்.
ஆட்சியர் மற்றும் காவல்துறை எஸ்பி வந்து கூட்டம் நடத்திய பிறகும் கிராமத்தில் இதே நிலைதான் உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
இந்த வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஎஸ்பி எஸ்.வெங்கட் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், நாங்கள் வழக்குப் பதிவு செய்து, பொட்டு வெங்கடேஸ்வரலு உட்பட 26 பேரை கைது செய்துள்ளோம். 5 பேர் தலைமறைவாக உள்ளனர், விரைவில் கைது செய்யப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு போலீசார் கவனித்து வருகின்றனர்” என்றார்.
தவறு செய்த அனைவரும் சாதி வேறுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் என மனோகராபாத் எஸ்.ஐ., பி.சுபாஷ் கவுட் தெரிவித்தார்.
இதற்கிடையில், தலித் பகுஜன் முன்னணியின் தேசியச் செயலாளர் சங்கர் பிபிசி-யிடம் கூறுகையில், “இந்த சம்பவம் பல தலைமுறைகளாக நிலவி வரும் சாதி அமைப்பின் பிரதிபலிப்பாகும். ஆதிக்க சாதியினர் மட்டுமின்றி சில தலித் சமூகத்தினரும் முன்னேறத் துடிக்கும் தலித் சமூகத்தினரை இப்படித்தான் நடத்துகிறார்கள்,” என்றார்.
ஹைதராபாத் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது உண்மையில் வளர்ச்சிய பாதையில்தான் மாநிலம் பயணிக்கிறதா என்னும் கேள்வியை எழுப்புகிறது என்றார்.