அஸ்வினின் மாயாஜாலம் மற்றும் ஜடேஜாவின் துல்லியமான சுழற்பந்துவீச்சால் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு வெற்றி கிட்டியது.
4வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 515 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 62.1 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களும், வங்கதேசம் 149 ரன்களும் சேர்த்தன. 227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ரிஷப் பந்த்(109), கில்(119) இருவரும் சதம் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர்.
இதையடுத்து 515 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி நேற்று பிற்பகல் தேநீர் இடைவேளைக்கு முன்பாக ஆட்டத்தைத் தொடங்கியது.
3வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி, 37.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் ஷகிப் அல்ஹசன் 5, கேப்டன் ஷாண்டோ 51 ரன்களில் களத்தில் இருந்தனர்.
நான்காவது நாள் ஆட்டம்
ஆடுகளத்தில் வெடிப்புகள் தென்பட்டதால், 4வது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்திருந்தனர். அதற்கேற்ப, இன்று காலை ஆட்டம் தொடங்கியது முதல் ஒரு மணிநேரம் பந்து வீசிய பும்ரா, சிராஜ் இருவருக்கும் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. சிராஜ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஷாண்டோ, ஒரு கட்டத்தில்அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார்.
காலை தேநீர் இடைவேளைக்குப் பின், சென்னை நாயகன் அஸ்வின், ஐ.பி.எல்.லில் சிஎஸ்கே அணி நட்சத்திரமான ஜடேஜா ஆகியோர் பந்துவீச வந்தபின், ஆட்டம் அப்படியே இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது. வங்கதேசத்தின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விழுந்தன. ஐந்தாம் ஆட்டத்தில் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் 25 ஓவர்களில் வங்கதேசம் இழந்தது. கடைசி 6 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குள் வங்கதேசம் இழந்தது.
வங்கதேச கேப்டன் ஷாண்டோ 85 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் பும்ராவிடம் எக்ஸ்ட்ரா கவர் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இன்று காலை அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே அனுபவ வீரர் சஹிப் அல் ஹசன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த லிட்டன் தாஸ்(1), மெஹதி ஹசன் மிராஜ்(8), தஸ்கின் அகமது(5), ஹசன் மெஹ்மத்(7) என ஒற்றை இலக்க ரன்னில் அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
2வது இன்னிங்ஸில் அஸ்வின் 6, ஜடேஜா 3 மற்றும் பும்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்திய அணி முன்னேற்றம்
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான பாதை பிரகாசமாகியுள்ளது. தற்போது 10 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் முதலிடத்தில் இந்திய அணி இருக்கிறது.
இந்திய அணிக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது.
புதிய மைல்கல்
இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளது. அதன்படி இந்திய அணி இதுவரை 581 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தோல்விகளைவிட அதிகமான வெற்றிகளைப் பெற்று இந்திய அணி சாதித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை இந்திய அணி 178 தோல்விகளையும், 179 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்துடன் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்று 12-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
அஸ்வினுக்கு ரோஹித் புகழாரம்
டெஸ்ட் வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ எங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. நீண்ட காலத்துக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் வந்து வென்றுள்ளோம், இதற்கு காரணம் குழுவாகச் செயல்பட்டதுதான். கடினமான நேரத்தில் ரிஷப் பந்தின் பேட்டிங் எப்போதும் அற்புதமாக இருக்கும் அதுபோல் இந்த முறையும் இருந்தது. ஐபிஎல், உலகக் கோப்பையிலும் பந்த் சிறப்பாகச் செயல்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட் அவருக்கு பிடித்த விளையாட்டு. அவர் அற்புதமாக விளையாடினார். துலிப் டிராபியில் விளையாடிவிட்டு இந்திய அணிக்குள் பந்த் வந்துள்ளார், அவர் செட்டிலாக போதுமான நேரம் வழங்கப்படும். எங்கள் பந்துவீச்சு வரிசையை வலிமைப்படுத்த விரும்புகிறோம். எந்த சூழலிலும், காலநிலையிலும், ஆடுகளத்திலும் பந்துவீச தயாராகி வருகிறோம். வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்கள் பொறுப்பெடுத்து செயல்பட்டதுதான்.” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “அழகான ஆடுகளம், சிவப்பு மண் விக்கெட் எப்போதும் நல்ல முடிவுகளை வழங்கும், பொறுமையாக ஆட வேண்டும். பெரிய ஸ்கோருக்காகவும், விக்கெட்டுக்காகவும் காத்திருந்தோம். அஸ்வின் வந்து அதை செய்து கொடுத்தார். அவர் என்ன செய்கிறார் என்பதை செயலால் பதில் அளித்துவிடுவார். எங்களுடன் நீண்டகாலம் அஸ்வின் பயணிக்கிறார். இந்திய அணிக்காக அஸ்வின் என்ன செய்துள்ளார் என்பதை இங்கே பேசினால் அதுபோதுமானதாக இருக்குமா என எனக்குத் தெரியாது. ஒருபோதும் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஒதுங்கியதில்லை. ஐபிஎல் ஆடுகிறார், டிஎன்பிஎல் தொடரில் அஸ்வின் கலக்குகிறார், இந்திய அணியிலும் இருக்கிறார். தேவைப்படும் நேரத்தில் அணிக்காக இதுபோல் அருமையாகவும் பேட் செய்கிறார்” என்று தெரிவித்தார்.
அஸ்வின் சாதனைமேல் சாதனை
முதல் இன்னிங்ஸில் சதம்(113) அடித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கும், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை விரைவாக ஆல் அவுட் செய்யவும் காரணமாக இருந்த தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 750 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அது மட்டுமல்லாமல் 37-வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்ன் சாதனையை அஸ்வின் சமன் செய்து 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை நாயகனாக தொடர்கிறார்.
அது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் இயான் போத்தமுக்கு(5) அடுத்த இடத்தில் அஸ்வின் இருக்கிறார். அஸ்வின் 4 முறை சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 2வது முறையாக இதேபோன்று சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8-வது வீரராகக் களமிறங்கி 522 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கர்ட்னி வால்ஷின் சாதனையை தகர்த்துள்ளார். வால்ஷ் 519 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரையிலும் சாதனையாக இருந்தது. சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் அஸ்வின் 8-வது இடத்தில் இருக்கிறார், ஆஸ்திரேலியாவின் நாதன் லயான் 530 விக்கெட்டுகளுடன் 7வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை 522 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்த வரிசையில், 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்தில் இருக்கிறார். 37 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளையும், 10 முறை 10 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் 250, 300, 250 விக்கெட்டுகளை வேகமாக அடைந்ததும் அஸ்வின்தான். பேட்டிங் வரிசையில் 8-வது வீரராகக் களமிறங்கி 4 முறை சதம் அடித்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் அஸ்வின்.
(மேற்கூறிய புள்ளிவிவரங்கள் அனைத்தும் கிரிக்இன்ஃபோ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)
“சென்னை என்றாலே ஆனந்தம்தான்”
ஆட்டநாயகன் விருது வென்றபின் அஸ்வின் அளித்த பேட்டியில்,“ஆட்டநாயகன் விருதையெல்லாம் நான் கருத்தில் வைப்பது இல்லை, அதை நோக்கி விளையாடுவதும் இல்லை. சென்னையில் ஒவ்வொரு முறை விளையாடும் போதும், அது எனக்குள் எழும் ஆனந்தமான உணர்ச்சி. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கேலரியில் ஒரு பார்வையாளராக அமர்ந்து ஏராளமான டெஸ்ட் போட்டிகளை இருந்து ரசித்துப் பார்த்துள்ளேன். பல அணி வீரர்கள், சக வீரர்கள் விளையாடுவதை நான் ரசித்திருக்கிறேன். எனக்கு பந்துவீச்சுதான் உயிர், அதுதான் என்னை வாழ வைக்கிறது. இயல்பாகவே நான் ஒரு பந்துவீச்சாளர் என நினைக்கிறேன், அதேசமயம், பேட்டிங்கிலும் நான் என் கவனத்தை செலுத்துகிறேன்.” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.