டெஸ்ட் போட்டியில் 814 நாட்களுக்குப் பின் சதம் அடித்து தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்-இன் அற்புதமான ஆட்டம், சுப்மன் கில்லின் நேர்த்தியான சதம் ஆகியவற்றால் இந்திய அணி வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஏற்கெனவே 227 ரன்கள் முன்னிலை பெற்றதையுடம் சேர்த்து வங்கதேச அணி வெற்றி பெற 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.
சவாலான இலக்கு
இரண்டரை நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்பும் நோக்கில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. பெரிய இலக்கான 515 ரன்களை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி 2 நாட்களில் எட்டுவது வங்கதேசத்துக்கு கடும் சவாலாக இருக்கும்.
வங்கதேச அணி 515 இலக்குடன் களமிறங்கியது. 3வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் ஷான்டோ 51 ரன்கள், சஹிப் அல்ஹசன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இன்னும் வங்கதேசம் கைகளில் 6 விக்கெட்டுகள் உள்ளன, வெற்றிக்கு 357 ரன்கள் சேர்க்க வேண்டியுள்ளது. மெஹதி ஹசன், லிட்டன் தாஸ் விக்கெட்டை இந்திய அணி விரைவாக எடுத்துவிட்டால், இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும்.
814 நாட்களுக்குப் பின் ரிஷப் பந்த்
இந்திய அணி 2வது இன்னிங்ஸில் விரைவாக ரன்கள் சேர்க்க ரிஷப் பந்த்(109), சுப்மான் கில்(119 நாட்-அவுட்) ஆகியோரின் சதம் மற்றும் 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாக அமைந்தது.
கார் விபத்தில் சிக்கி 634 நாட்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். டெஸ்ட் போட்டியில் ஏறக்குறைய 814 நாட்களுக்குப் பின் தனது 6வது சதத்தை 124 பந்துகளில் பந்த் நிறைவு செய்தார். இதில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.
கடைசியாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 1ஆம் தேதி நடந்த டெஸ்டில் ரிஷப் பந்த் சதம் அடித்திருந்தார். அதன்பின் இந்த ஆட்டத்தில் சதம் அடித்துள்ளார்.
இன்னிங்ஸ் ஸ்கோர்
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கும், வங்கதேசம் 149 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. 2வது நாளான நேற்று மட்டும் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்திருந்தது. கில் 33 ரன்களுடனும், பந்த் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இன்றைய 3வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
கில், பந்த் அரைசதம்
தொடக்கத்தில் இருந்தே கில், ரிஷப் பந்த் இருவரும் வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை அடித்து ஆடி ரன்களை சேர்த்தனர், இருவரின் பேட்டிங்கிலும் ஆக்ரோஷம் காணப்பட்டது. 79 பந்துகளில் சுப்மன் கில் அரைசதத்தை நிறைவு செய்தார். காலை தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்திருந்தது.
அதன் பிறகு ரிஷப் பந்த் பேட்டிங் வேகெடுத்தது. சஹிப் அல்ஹசன், மிராஸ் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்த ரிஷப் பந்த் 88 பந்துகளில் அரைசதம் எட்டினார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 205 ரன்கள் சேர்த்திருந்தது.
தோனியின் சாதனை சமன்
அதன்பின் களத்துக்கு வந்த ரிஷப் பந்த் ஆட்டத்தில், மோசமான பந்துகளை பவுண்டரி, சிக்ஸர் என விளாசி, 124 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதத்தை நிறைவு செய்தார்.
இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்து தோனி அடித்த 6 சதங்களையும் ரிஷப் பந்த் சமன் செய்தார். ரிஷப் பந்த் சதம் அடித்தபோது, அவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடக்கம்.
நிதானமாக ஆடிய சுப்மன் கில்லும் 161 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை எட்டினார். இருவரின் பார்ட்னர்ஷிப் 150 ரன்களை கடந்து சென்றது.
கடந்த முதல் இன்னிங்ஸில் சாஃப்ட் டிஸ்மிசலில் ஆட்டமிழந்தது போல் இந்த முறை எந்தத் தவறையும் ரிஷப் பந்த் செய்யவில்லை. இதனால் இருவரையும் பிரிக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடும் பிரயத்தனம் செய்தும் முடியவில்லை.
சிக்ஸரில் சாதிக்கும் இந்திய அணி
சுப்மான் கில் தனது 26வது டெஸ்ட் போட்டியில் 28வது சிக்ஸரை அடித்துள்ளார். அதேபோல ரிஷப் பந்த் 34 டெஸ்ட் போட்டிகளில் 59 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 2024ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டர்கள் மட்டும் 85 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.
ஒரு காலண்டர் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை எட்ட இந்திய அணிக்கு இன்னும் 5 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
ரிஷப் பந்த் 109 ரன்கள் சேர்த்த நிலையில் மிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு கில், பந்த் கூட்டணி, 167 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த கே.எல்.ராகுல் 22 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இன்னும் இரண்டரை நாட்கள் மீதமிருந்த நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணியித்தது இந்திய அணி.
வலுவான தொடக்கம்
வங்கதேச அணி 515 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது. ஜாகிர் ஹசன், இஸ்லாம் இருவரும் முதல் இன்னிங்ஸைவிட சற்று ஆழமாகவே தங்கள் ஆட்டத்தை தொடங்கி ரன்களை சேர்த்தனர். பும்ரா, சிராஜ், ஆகாஷ் பந்துவீச்சை இருவரும் நன்கு சமாளித்து ஆடி ரன்களை சேர்த்தனர்.
மாலை தேநீர் இடைவேளைக்குப் பின் வங்கதேச அணி முதல் விக்கெட்டை இழந்தது. பும்ராவின் வேகப்பந்துவீச்சில் ஹசன் 33 ரன்கள் சேர்த்த நிலையில் கல்லி பாயின்டில் நின்றிருந்த ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஷான்டோ, இஸ்லாமுடன் சேர்ந்தார்.
அஸ்வினின் மாயாஜாலம்
சென்னை விக்கெட் கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு பலன் அளிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு அஸ்வின் பந்து வீசினார். அதற்குப் பலன் கிடைத்து, இஸ்லாம் 35 ரன்கள் சேர்த்த நிலையில் ஷார்ட் மிட்விக்கெட்டில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
அடுத்து வந்த மோமினுல் ஹக் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். அதைத் தொடர்ந்து முஸ்பிகுர் ரஹ்மான் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கே.எல்.ராகுலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாண்டோ இந்திய பந்துவீச்சை நன்கு சமாளித்து ஆடி அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் வங்கதேசம் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என வலுவாக இருந்தது, ஆனால் கடைசி 10 ஓவர்களில் சீரான இடைவெளையில் 3 விக்கெட்டுகளை இழந்தது.
சஹிப் அல் ஹசன் 5, கேப்டன் ஷாண்டோ 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கடைசி 10 ஓவர்களில் அஸ்வின் வீழ்த்திய 3 விக்கெட்டுகள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு 357 ரன்கள் தேவை.
மீதமுள்ள விக்கெட்டுகளில் லிட்டன் தாஸ், மிராஸ் மட்டுமே ஓரளவு பேட் செய்யக் கூடியவர்கள். இவர்களை வீழ்த்தினால் நாளை இந்திய அணியின் வெற்றி எளிதாகும். சேப்பாக்கத்தில் திடீரென வெளிச்சக் குறைவு ஏற்பட்டதையடுத்து, 9 ஓவர்கள் முன்னதாகவே ஆட்டம் முடிக்கப்பட்டது.
கடைசி 2 நாட்களில் சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி இருக்கும்?
சேப்பாக்கம் விக்கெட் என்றாலே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும். ஆனால், இந்த முறை கறுப்பு மண் ஆடுகளத்துக்குப் பதிலாக சிவப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து நன்கு ஒத்துழைத்து ஸ்விங் ஆகும், பவுன்ஸ் ஆகும். வரும் நவம்பர் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்குத் தயாராகும் பொருட்டு இதுபோன்ற ஆடுகளத்தை பிசிசிஐ நிர்வாகம் தயாரித்துள்ளது.
இந்த ஆடுகளத்தில் கடைசி 2 நாட்களில் பிளவு ஏற்பட்டு பந்து சுழற்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும். முதல் நாளில் வேகப்பந்துவீச்சில் 1.3 டிகிரி வரை ஸ்விங் ஆன நிலையில், 3வது நாளில் 0.4 டிகிரியாக குறைந்தது.
ஆடுகளம் நன்கு காய்ந்திருக்கிறது ஆனால், எதிர்பார்த்த பிளவுகள் இன்னும் வரவில்லை. பிளவுகள் வந்தால் அடுத்த இரு நாட்கள் வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சுக்குத்தான் விக்கெட் ஒத்துழைக்கும். இதனால், அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு நன்கு எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனியை போல் உதவிய பந்த்
மூன்றாம் நாள் ஆட்டமான இன்று ரிஷப் பந்த், கில் இருவரும் சிறப்பாக பேட் செய்த நிலையில், திடீரென வங்கதேசத்துக்கு உதவும் வகையில் பந்த் ஃபீல்டிங் செட் செய்து கொடுத்து கேப்டன் ஷாண்டோவுக்கு உதவினார்.
தோனியை போலவே ரிஷப் பந்த் வங்கதேச கேப்டனுக்கு ஃபீல்டிங் செட் செய்வதில் உதவினார். 22 யார்ட் வட்டத்தின் லெக் திசையில் எந்த பீல்டரும் நிறுத்தவில்லை, அங்கு பீல்டரை நிறுத்துங்கள் என்று வங்கதேச கேப்டனுக்கு பந்த் ஆலோசனை கூறினார். இதைக் கேட்ட கேப்டன் ஷாண்டோ மிட்விக்கெட் திசையில் ஒரு பீல்டரை நிறுத்தினார்.
ரிஷப் பந்தின் கிரிக்கெட் குருவான தோனியும் இதேபோல வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து உதவியுள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது, பேட் செய்த தோனி, வங்கதேச வீரர் சபிரீ ரஹ்மானை ஸ்குயர் லெக் திசையில் நிற்குமாறு கூறினார்.
வங்கதேச கேப்டன் மோர்தசாவிடம் கேட்காமல் தோனி ஃபீல்டிங் செட் செய்தார். தோனி கூறியவுடன், தனது கேப்டன் மோர்தசாவிடம்கூட ஆலோசனை கேட்காமல் தோனி கூறிய திசையில் சபீர் ரஹ்மான் ஃபீல்டிங் செய்ய நின்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு