உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியையும் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும் முடிவுடன் இருக்கிறது.
ஆனால், கான்பூர் மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானது என்பதால், இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் வங்கதேச அணியும் சுழற்பந்துவீச்சாளர்களைக் களமிறக்கினால் ஆட்டம் நெருக்கடியில் செல்லும்.
இதேபோலத்தான் கடந்த 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து-இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியிலும் வெல்ல வேண்டிய நிலையில் ஆட்டத்தை ரச்சின் ரவீந்திரா, அஜாஸ் படேல் இருவரும் சேர்ந்து டிரா செய்தனர். ஆகவே, கான்பூர் ஆடுகளத்தில் கடைசி இரு நாட்களில் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
கான்பூர் மைதானத்தின் பெருமை
கான்பூர் கிரீன் பார்க் மைதானத்துக்கென பழம்பெருமை இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து முதன்முதலில் இந்த மைதானத்தில்தான் கிரிக்கெட் விளையாடியது.
கடந்த 1952, ஜனவரி 12 முதல் 14ஆம் தேதிவரை இந்த கிரீன் பார்க் மைதானத்தில்தான் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த மைதானத்தில் கடந்த 1959ஆம் ஆண்டு டிசம்பர் 19 முதல் 24ஆம் தேதிவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணிக்கு இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்தது.
அதுமட்டுமல்லாமல், கடந்த 1960 முதல் 1979ஆம் ஆண்டுவரை கான்பூர் மைதானத்தில் நடந்த அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தன. ஏறக்குறைய 19 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் 7 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டன, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகள் அனைத்தும் டிராவில் முடிந்தன.
அதற்குப் பிறகு 19 ஆண்டுகள் கழித்து, 1979ஆம் ஆண்டு, பிப்ரவரி 2 முதல் 8ஆம் தேதிவரை நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி வெற்றியைச் சுவைத்தது. நீண்ட காலம் டெஸ்ட் போட்டியில் டிரா முடிவுகளைக் கொடுத்த மைதானமாக கான்பூர் பார்க்கப்படுகிறது.
இந்த மைதானத்தில் கடைசியாக 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தில் இந்திய அணி கோட்டைவிட்டு ஆட்டம் டிராவில் முடிந்தது.
கடைசியாக 2016ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஏறக்குறைய 8 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை கான்பூர் மைதானத்தில் இந்திய அணி 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 5 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது, 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இந்த கான்பூர் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 1983ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்தியாசத்தில் கிளைவ் லாயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் தோற்கடித்தது.
இதுதான் இந்திய அணி கான்பூர் மைதானத்தில் அடைந்த கடைசி தோல்வி. அதன்பின், 41 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் தோல்வி அடையாமல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
கான்பூர் ஆடுகளம் எப்படி?
சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் சிவப்பு மண்ணால் அமைக்கப்பட்ட விக்கெட்டில் போட்டி நடந்தது. இதனால் முதல் இரு நாட்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறியது, பந்து நன்கு பவுன்ஸ் ஆனது, ஸ்விங், சீமிங் இருந்தது. கடைசி இரு நாட்களில் விக்கெட் காய்ந்த பின் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் பேட்டர்களுக்கும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் ஓரளவு சாதகமாக இருந்தது, ரன் சேர்ப்பதிலும் சிக்கல் இல்லை.
ஆனால், கான்பூர் ஆடுகளம் கறுப்பு மண்ணால் அமைக்கப்பட்ட தட்டையான விக்கெட்டை கொண்டது. இந்த ஆடுகளத்தில் பந்து பேட்டரை நோக்கித் தாழ்வாக வரும், பவுன்ஸ் பெரிதாக இருக்காது, சுழற்பந்துவீச்சுக்கு கடைசி இருநாட்கள் சொர்க்கமாக மாறிவிடும், சமாளித்து ஆடுவது கடும் சிரமமாக இருக்கும்.
வேகப்பந்துவீச்சாளர்கள் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும், ஸ்விங் செய்தாலும் பேட்டரை நோக்கி பந்து மெதுவாகவே வரும், இதனால் பேட்டர்களும் நினைத்த ஷாட்களை அடித்து ஆட முடியாது.
சுழற்பந்துவீச்சாளர்களிலும், ரிஸ்ட் பவுலர்கள், மெதுவாகப் பந்துவீசுபவர்கள் பந்துகளை பேட்டர்கள் கனித்து ஆடுவது கடினமாக மாறும், பெரும்பாலும் டிஃபென்ஸ் முறையில்தான் ஆட வேண்டியதிருக்கும். போட்டி தொடங்கி 3 நாட்களுக்குப் பின் ஆடுகளம் நன்கு காய்ந்து, விரிசல்கள் அதிகரித்தால், சுழற்பந்துவீச்சாளர்கள் ராஜ்ஜியம் நடத்துவார்கள். ஆதலால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்து பெரிதாக ஸ்கோர் செய்வதுதான் பாதுகாப்பானது.
இந்திய அணியிலும் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கும் அதேநேரத்தில் வங்கதேச அணியிலும் நல்ல சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதால், ஆட்டம் போராட்டத்துடனே இருக்கும்.
கான்பூர் ஆடுகளத்தில் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 7 போட்டிகளில் இந்திய அணியும், மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளது. 13 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
கான்பூர் ஆடுகளத்தில் இதுவரை டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணி 7 ஆட்டங்களிலும், இரண்டாவதாக பேட் செய்த அணிகள் 3 முறையும் வென்றுள்ளதால், டாஸ் முக்கிய காரணியாகச் செயல்படும்.
கான்பூர் மைதானத்தில் அதிகபட்சமாக 1986ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 676 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சம். இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. குறைந்தபட்சமாக ஆஸ்திரேலிய அணி 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் சராசரியாக 370 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 322 ரன்களும், 3வது இன்னிங்ஸில் 260 மற்றும் 4வது இன்னிங்ஸில் 130 ரன்கள் மட்டுமே சேர்க்க முடியும். கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் இருப்பதால் ரன்கள் சேர்ப்பது கடினமாகிவிடும்.
இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
இந்திய அணியில் பேட்டர்களில் பெரும்பாலும் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், பந்துவீச்சாளர்களில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அக்ஸர் படேல் அல்லது குல்தீப் யாதவ் கொண்டு வரப்படலாம். சிராஜ், ஆகாஷ் ஆகியோர் வேகப்பந்துவீச்சுக்கும் அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் அல்லது குல்தீப் யாதவ் இருக்கலாம்.
கான்பூர் மைதானத்தில் அஸ்வின் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். அக்ஸர் படேல் ஒரு டெஸ்டில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பதால் அக்ஸர் படேலுக்கு அதிக வாய்ப்புள்ளது.
கவலைதரும் ரோஹித், கோலி ஃபார்ம்
நீண்ட இடைவெளிக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சென்னை டெஸ்டில் சொதப்பலாக ஆடி ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரு சீனியர் பேட்டர்களும் ஏமாற்றம் அளித்து முதல் இன்னிங்ஸில் நெருக்கடி அளித்தனர். அஸ்வின், ஜடேஜா இருவரின் பொறுப்பான ஆட்டத்தால்தான் இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்டியது.
அதிலும் வங்கதேச அணிக்கு எதிராக கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை அரைசதம் அடிக்காமல் இருந்து வருகிறார். அந்த அவப்பெயரைப் போக்க இந்த ஆட்டத்தில் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்துவது அவசியம்.
விராட் கோலியும் சென்னை டெஸ்டில் ஆட்டமிழந்தது மோசமான ஷாட்களுக்கு உதாரணமாக அமைந்தது. ஆஃப் சைடுக்கு வெளியே சென்ற பந்தைத் தொட்டு கோலி தேவையின்றி ஆட்டமிழந்தார், கான்பூர் டெஸ்டில் கோலி பெரிதாக இதுவரை ரன்களை சேர்த்ததில்லை என்பதால் அவரின் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் வாய்ப்பைத் தவறவிட்ட சுப்மான் கில் 2வது இன்னிங்ஸில் சதம் அடித்தார். ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, ஜெய்ஸ்வால் என பேட்டர்கள் அருமையான ஃபார்மில் இருக்கிறார்கள். கே.எல் ராகுல், கோலி, ரோஹித் ஆகியோர் மட்டுமே நல்ல ஆட்டத்தைத் தரவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
சஹிப் அல் ஹசன் சந்தேகம்
வங்கதேச அணியைப் பொருத்தவரை மூத்த அனுபவ வீரர் சஹிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் 2வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. ஒருவேளை அவர் களமிறங்காவிட்டால் அவருக்குப் பதிலாக தைஜுல் இஸ்லாம் சேர்க்கப்படலாம்.
ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப வங்கதேச அணி வேகப்பந்துவீச்சாளரைக் குறைத்துக்கொண்டு கூடுதல் சுழற்பந்துவீச்சாளரைச் சேர்க்கலாம். குறிப்பாக இளம் வீரர் நயிம் ஹசன் சேர்க்கப்படலாம். தைஜூல் இஸ்லாம், சஹிப் அல் ஹசன், மெகதி ஹசன் மிராஸ் ஆகியோரோடு நயிம் ஹசன் சேர்க்கப்படலாம்.
இந்திய அணியில் இருக்கும் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் அல்லது அக்ஸருக்கு இணையாக பந்துவீச்சில் சவால் விடுக்கும் வகையில் வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்களும் இருப்பது ஆட்டத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்லும். பேட்டிங்கில் இந்திய அணி வங்கதேசத்தைவிட வலுவாக இருந்தாலும், பந்துவீச்சில் இந்திய அணிக்கு கடும் சவாலாகவே வங்கதேசம் திகழும் என எதிர்பார்க்கலாம்.
கம்பீரை முந்த ரோஹித்துக்கு வாய்ப்பு
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது டெஸ்ட் போட்டியில் 4,148 ரன்களுடன் உள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 4,152 ரன்கள் சேர்த்துள்ளார். கம்பீரின் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 5 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
அதேபோல, டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 84 சிக்ஸர்களை இதுவரை விளாசியுள்ளார். முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடிக்க ரோஹித்துக்கு இன்னும் 7 சிக்ஸர்கள்தான் தேவை.
இந்த டெஸ்டில் ரோஹித் சர்மா 7 சிக்ஸர்கள் அடித்தால் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய பேட்டர் என்ற பெருமையைப் பெறுவார்.
டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா 12 சதங்கள் அடித்து ரஹானே, முரளி விஜய்க்கு இணையாக இருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிராக இதுவரை ஒரு அரைசதம்கூட அடிக்காத ரோஹித் சர்மா, இந்த டெஸ்டில் சதம் அடித்தால், ரஹானே, முரளி விஜய் சதங்களை முறியடிப்பார்.
ரசிகர்களுக்குத் தடை
கான்பூர் மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் சி பால்கனி பகுதி மிகவும் சேதமடைந்து, பாதுகாப்பின்றி இருப்பதால், அங்கு ரசிகர்கள் அமரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கான்பூர் மைதானம் உத்தர பிரதேச அரசின் விளையாட்டுத் துறைக்குச் சொந்தமானது. அந்தத் துறையின் சிஇஓ அங்கித் சாட்டர்ஜி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கான்பூர் மைதானத்தின் ரசிகர்கள் அமரும் ‘சி’ பிரிவு கேலரி மிகுந்த சேதமடைந்துள்ளதாக பொதுப் பணித்துறை அளித்த அறிக்கையைப் படித்தேன். ஆதலால் அந்தப் பகுதியில் ரசிகர்கள் அமரவும் செல்லவும் தடை விதிக்கப்பட்டு, அந்தப் பகுதியில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியை பராமரிக்கும், செப்பணிடும் பணிகள் நடந்தாலும், முழுமையாக ரசிகர்கள் அமரும் 4,500 இருக்கையை நிரப்ப முடியாது. அதிகபட்சமாக 1,700 டிக்கெட்டுகள்தான் ‘சி’ பிரிவு கேலரிக்கு விற்பனையாகியுள்ளன. இங்கு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைக்குப் பின் முடிவு எடுக்கப்படும். அதுவரை ரசிகர்கள் செல்லத் தடை விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினமும் நேற்றும் ‘சி’ பிரிவு கேலரி பகுதியைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் முடிவில் ஒரு பொறியாளர் நிருபர்களிடம் கூறுகையில் “சி பிரிவு கேலரி கட்டடம் பாதுகாப்பின்றி, ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. இங்கு 50 ரசிகர்கள் சேர்ந்து, ரிஷப் பந்த் அடிக்கும் சிக்ஸரை பார்த்து குதித்தாலே கேலரி இடிந்துவிடும் நிலையில் இருக்கிறது. ஆதலால், டெஸ்ட் போட்டி நடக்கும்போது இந்தப் பகுதியில் ரசிகர்களை அனுமதிக்காமல் இருப்பது சிறந்த முடிவாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, கான்பூர் மைதானத்தில் ஒளி விளக்குகள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என்ற புகார்களையும் மைதானத்தின் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஒருவேளை விளக்குகளை எரியவிடும் சூழல் ஏற்பட்டாலும் அப்போதும் சிக்கல் ஏற்படும் நிலை இருக்கிறது. விஐபி பெவிலியன் பகுதியில் இருக்கும் ஒளி விளக்குகளில் 8 பல்புகள் சரியாக எரிவதில்லை, பராமரிக்கப்படவில்லை என்று மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு