போப் லியோ XIV சகோதரர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போப் லியோ XIV-ன் சகோதரர்களில் ஒருவரின் இல்லினாய்ஸ் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அது ஆதாரமற்றது எனக் கண்டறியப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
சிகாகோவிலிருந்து சுமார் 40 மைல் தென்மேற்கில் அமைந்துள்ள, லியோவின் மூத்த சகோதரர்களில் ஒருவரான ஜான் பிரெவோஸ்டின் இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலுக்கு தாங்கள் முதலில் பதிலளித்ததாக நியூ லெனாக்ஸ் காவல்துறை கூறியது.
காவல்துறை அதிகாரிகள் வீட்டைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்ததாகவும், மிகுந்த முன்னெச்சரிக்கையாக சுற்றியுள்ள வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிபொருட்களைக் கண்டறியும் கே9 நாய்களை பயன்படுத்தும் சிறப்பு பிரிவுகளுடன் இணைந்து, அவர்கள் “வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முழுமையான தேடுதல்” நடத்தினர்.
இறுதியில், அந்த மிரட்டல் ஆதாரமற்றது என்றும், அங்கு எந்த வெடிபொருட்களோ அல்லது அபாயகரமான பொருட்களோ இல்லை என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் பின்னர் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தகவலை கொடுத்தது யார் என்பதை கண்டறிய தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக நியூ லெனாக்ஸ் காவல்துறை தலைவர் மைக்கா டி. நியூஸ் தெரிவித்தார்.