சமூக ஊடக நேரலையில் பேசிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த அரசியல் இயக்கம் பொறுமையாக அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்து வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதன் பின்னர் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப்போவதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தான் ஏற்கெனவே அங்கம் வகித்த ‘we the leader’ என்கிற இயக்கத்தில் இணையுமாறு அழைத்து விடுத்துள்ளார். அதற்கான இணையதள முகவரியையும் பகிர்ந்துள்ளார். அண்ணாமலை அறிவிப்பை தொடர்ந்து அந்த தளத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
அண்ணாமலை பேசியது என்ன?
பட மூலாதாரம், Annamalai
“புதிய பாதை, புதிய அரசியல் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை” எனக் கூறும் அண்ணாமலை, “தமிழக மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்ற பாஜக வாய்ப்பு கொடுத்தது. இன்று வெளியே வந்திருக்கிறேன். 2009-இல் விஜயகாந்தின் தேமுதிகவில், மூன்று மாதங்கள் மாணவராக இன்டர்ன்ஷிப் செய்தேன். அதன்பின் 2020-இல் பாஜகவில் இணைந்தேன். இன்று புதிய இயக்கத்தை உங்கள் முன் வைக்கிறேன். என்னைப் பற்றி நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு விளக்கம் தர வேண்டும் என்பதற்காக தான் பேசுகிறேன்.” என்றார்.
“ரஜினிகாந்திடம் இருந்து வந்த அழைப்பு”
நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து தனக்கு வந்த அழைப்பு பற்றி குறிப்பிட்டு பேசிய அண்ணாமலை, “பாஜகவில் இணைகிறேன் என்கிற வாக்குறுதியை சந்தோஷிடம் கூறினேன். 2020-இல் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாளுக்கு முன்பு ரஜினிகாந்த் என்னை அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன்.” என்றார்.
“இந்தியன் என்கிற அடையாளத்தோடு பெருமைமிகு தமிழனாக இருக்கிறேன்.” என கூறிய அவர்,”தமிழ்நாட்டின் வளர்ச்சியை அனைவரும் எடுத்துச் செல்ல வேண்டும். பாஜக தமிழர் அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக தனித்துச் செல்ல வேண்டும் எனக் கூறி வந்தேன்.” என்றார்.
கடந்த டிசம்பர் மாதமே தான் ராஜிநாமா செய்யப்போவதாக கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறும் அண்ணாமலை, “எனக்கு இருந்த கருத்து வேறுபாடுகளை 18 மாதங்களாக கூறி வந்தேன். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதியே பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துவிட்டேன். ” என்றார்.
தமிழ்நாட்டின் ஓர் அரசியல் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம் என அறிவித்த அவர், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியாக போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
பட மூலாதாரம், PTI
“இணையதளத்தில் பதிவு, கோவையில் பயிற்சி மையம்”
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு இன்னொரு அரசியல் கட்சி வேண்டும். இந்த இயக்கத்தில் இணைய விரும்புபவர்கள் இணையதளம் மூலமாக சேரலாம்” என்றார்.
கோவையில் “ஏபிஜே அப்துல் கலாம் பெயரில் ஒரு பயிற்சி மையம் உருவாக்க இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
“பாஜகவோடு முரண்படுவேன்”
பாஜக மற்றும் மோதி பற்றி குறிப்பிடும்போது, “பிரதமர் மோதி மீது மரியாதை உண்டு. மும்மொழிக் கொள்கை போல பாஜகவிடம் முரண்பட வேண்டிய சூழல் எழுந்தால் நிச்சயம் முரண்படுவோம். முறைப்படி ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதால் தான் அமித் ஷாவை நேரில் சந்தித்தேன்.” என்றார்.
இன்று காலை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜிநாமாவை ஏற்பதாக பாஜக தலைமை ஒரு செய்திக்குறிப்பின் மூலம் அறிவித்திருக்கிறது.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை ராஜிநாமா செய்ததை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, “சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
பட மூலாதாரம், BJP
அதற்கு சற்று முன்பாக அண்ணாமலையின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வந்தது பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
முன்னதாக டெல்லி சென்றிருந்த அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
டெல்லி செல்வதற்கு முன்பாக புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று சென்னையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இன்னும் 2 நாட்களில் எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறேன்” என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
2021 சட்டபேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை என்றாலும் அதுநாள் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த பாஜகவின் வாக்கு வங்கி 11 சதவிகிதத்தை தாண்டியது.
பட மூலாதாரம், Annamalai/X
இந்த நிலையில் 2025-ஆம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகினார். அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மீண்டும் அதிமுக உடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்னர் பிரசாரம் மட்டும் செய்யப்போவதாக அறிவித்தார்.
ஆனால் அந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் வாங்கு வங்கி மீண்டும் 3 சதவிகிதத்திற்கு கீழ் சென்றது.