• Sun. Jun 14th, 2026

24×7 Live News

Apdin News

அபுதாபியில் கைது செய்யப்பட்ட புளுமெண்டல் சங்க, மோதர சதுர ஆகியோரிடம் மேலதிக விசாரணை

Byadmin

Jun 14, 2026


ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விசேட புலனாய்வு பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கடந்த சனிக்கிழமை (13) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரரான ‘மோதர சதுர’ மற்றும் ‘புளுமெண்டல் சங்க’ என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

25 வயதான ‘மோதர சதுர’ மேலதிக விசாரணைகளுக்காக இன்று முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு கஞ்சா வைத்திருந்தமை, 2020ஆம் ஆண்டு தடியடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி ஒருவரை காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, ‘புளுமெண்டல் சங்க’ கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக 2010ஆம் ஆண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதுடன், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவத்திலும் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், 2016ஆம் ஆண்டு மாளிகாவத்தை பகுதியில் சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும், ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

By admin