அருள்வான் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : ஆரவ், அருள்நிதி, ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, ‘பருத்திவீரன்’ சரவணன், விடிவி கணேஷ், காளி வெங்கட், அருள் தாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : கணேஷ் விநாயகன்
மதிப்பீடு : 2/ 5
நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அருள்வான்’ திரைப்படம்- பார்வையாளர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றில், காடர் எனும் மொழி பேசும் ஒரு பிரிவினர் வசித்து வருகிறார்கள்.
இதில் கந்தன்- அமரவள்ளி தம்பதிகள், குறிஞ்சி எனும் தங்களின் ஒரே பெண் பிள்ளையுடன் வாழ்ந்து வருகிறார்கள். அமரவள்ளியின் தந்தை மூப்பன்.. ஊர் தலைவராக இருக்கும் காலகட்டத்தில், அவருடைய கல்லாமையை பயன்படுத்தி அங்குள்ள மலைவாழ் மக்களை அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரி முயற்சிக்கிறார்.
அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் வேதனை அடைந்த மூப்பன் – கல்வி அறிவு இல்லாததால் தன் சமூக மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டோமே! என்று தன் பேத்தியான குறிஞ்சியிடம், ‘என்ன இடர் வந்தாலும் கல்வியை கற்று எம் சமூகத்தை முன்னேற்று’ என்று வாக்குறுதி பெற்று மரணம் அடைகிறார்.
கல்வி கற்பதற்கான வழிமுறை தெரியாமல் குறிஞ்சி தடுமாற.. அருகில் இருக்கும் பாடசாலை ஆசிரியர் ஒருவர், ‘இதற்காக நீ மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினால்.. நீ மட்டுமல்ல உங்கள் பகுதிக்கு அரசாங்க அனுசரணையுடன் கூடிய பாடசாலை திறக்கப்படும்.
அதன் மூலமாக அனைவருக்கும் கல்வி கிடைக்கும்’ என்றும் சொல்ல.. இதனை தன்னுடைய லட்சியமாக உறுதியேற்கிறார் குறிஞ்சி. இதற்காக பெற்றோரின் எதிர்ப்பை மீறி, மலையில் இருந்து கீழிறங்கி மாவட்ட ஆட்சி வரை சந்திக்க பயணம் மேற்கொள்கிறார். அவரது பயணம் வெற்றி பெற்றதா? தோல்வி அடைந்ததா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
2004 ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழும் மலையாளமும் கலந்து பேசும் காடர் இன மக்களின் மொழி உச்சரிப்பு- கலாச்சாரம்- சடங்கு- சம்பிரதாயங்கள் – ஆகியவை விரிவாக விவரிக்கப்பட்டிருப்பது… ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
ஆனால் குறிஞ்சி எனும் அடிப்படை வசதிகளும் நாகரீகமும் இல்லாத மலைவாழ் பகுதியில் வாழும் சிறுமியின் கல்விக் கனவு நிறைவேறுவதற்கு.. அவள் மேற்கொள்ளும் முயற்சிகளும்.. அதற்காக சமூகத்தில் நிகழும் தடைகளும் பார்வையாளர்களை கவனிக்க வைக்கிறது.
இதன் முத்தாய்ப்பாக குறிஞ்சி கதாபாத்திரம் மனிதர்களையும் விலங்குகளையும் ஒப்பிட்டு பேசுவது போன்ற ஒரு உரையாடல் … பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது.
மலைவாழ் மக்களுக்கு கல்வி கிடைக்காததன் நடைமுறை காரணத்தை இயக்குநர் விவரித்திருந்தாலும்… அதற்காக மாவட்ட ஆட்சியரே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மலைவாழ் மக்களின் கல்விக்காக ஆசிரியராக பணியாற்றுகிறார் என சொல்வது ஒரு பிரிவினருக்கு மிகை கற்பனையாக தோன்றுகிறது. இருப்பினும் இதனையும் ரசிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் முத்துவேல் கதாபாத்திரத்தில் இளமையாகவும், முதுமையாகவும் நடித்திருக்கும் அருள்நிதி – அவருக்கே உரிய அளவான மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
கந்தன் எனும் மலைவாழ் இளைஞனாக நடித்திருக்கும் நடிகர் ஆரவ்வின் திரை தோற்றம்- திரை பங்களிப்பு நிறைவு.
அமரவல்லி கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா பாண்டியனின் நடிப்பும் சிறப்பு.
தன்ராஜ் எனும் பத்திரிக்கையாளராக நடித்திருக்கும் காளி வெங்கட்டும்.. திரைக்கதையின் சுவாரசியத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
குறிஞ்சி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பேபி கிருத்திகாவின் நடிப்பு வியக்க வைக்கிறது. ஒட்டுமொத்த கதையையும் தன் ஒற்றைத் தோளில் சுமக்கிறார். அதற்காக அர்ப்பணிப்புடன் திரையில் உழைத்திருக்கிறார்.
டாக்கு ஃபீச்சர் ஃபிலிம் ஆக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி பார்வையாளர்களை மகிழ்விக்கிறார்கள்.
மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கான அதிலும் பெண் பிள்ளைக்கான கல்வி விடயம் என்பதால்…. பல உரையாடல்களில் பிரச்சார நெடி அதிகம்.
அருள்வான் – எட்டா ஏட்டு கல்விக்கான தூதர்
The post அருள்வான் | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.