படக்குறிப்பு, விமான விபத்தின் போது விமானத்தின் பின் பகுதி மோதிய, மாணவர்களுக்கான அந்த விடுதி உணவகக் கட்டடம் இன்னும் சிதைந்த நிலையிலேயேதான் உள்ளது. இருப்பினும், விமானத்தின் பின் பகுதியை அதிகாரிகள் அங்கிருந்து அகற்றிவிட்டனர். பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் மீனாட்சி பரிக் கூறுகையில், விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை வந்த பின்னரே இந்த உணவகக் கட்டடம் மீண்டும் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.கட்டுரை தகவல்
எழுதியவர், ராக்ஸி ககதேகர் சாரா
பதவி, பிபிசி செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கடந்த 2025 ஜூன் 12 அன்று ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்த கொடூர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பிபிசி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று, தற்போது அங்குள்ள சூழ்நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிய முயற்சித்தது.
படக்குறிப்பு, இது ‘அதுல்யம் 1’ கட்டடத்தின் தோற்றம். இந்த வளாகத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயில்களில் ஒன்று இந்த கட்டடத்தின் அருகேதான் அமைந்திருந்தது. விபத்தை நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, அங்குள்ள அனைத்துக் கட்டடங்களிலும், இந்தக் கட்டடத்தில்தான் அதிகமானோர் அந்தப் பேரிடரிலிருந்து தப்பிப் பிழைத்தனர். இப்போதும் அந்த வளாகத்தைச் சுற்றிலும் கருகிய மரங்களே காணப்படுகின்றன.
படக்குறிப்பு, விடுதி உணவகக் கட்டடத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள கட்டிடம் இதுவாகும். விபத்தின் போது விமானத்தின் வலது இறக்கை இந்தக் கட்டடத்திற்கு எதிரே உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டது. இன்றும்கூட இந்தக் கட்டடம் சேதமடைந்த நிலையில்தான் உள்ளது. விபத்து நடந்த சமயத்தில், இந்த விடுதிக் கட்டடத்தில் 92 மாணவர்கள் தங்கியிருந்தனர்.
படக்குறிப்பு, ஐஜிபி வளாகத்திற்கு அருகிலுள்ள இந்தச் சாலை, எஃப்எஸ்எல் சந்திப்புக்கு செல்கிறது. விபத்து நடந்த சமயத்தில், அணிவகுத்து நின்ற ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் சைரன் சத்தங்களால் இரைச்சலாக இருந்த இந்த சாலை, இப்போது பொதுமக்கள் அன்றாடப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் பாதையாக மாறியுள்ளது. இருப்பினும், இப்போதும் கூட பலர் விபத்து நடந்த இடத்தைக் கடந்து செல்லும்போது, அந்த உடைந்த கட்டடத்தைப் புகைப்படம் எடுப்பதற்காகச் சற்று நின்று செல்கின்றனர்.
படக்குறிப்பு, ஒரு காலத்தில் மாணவர்களின் கலகலப்பான சத்தத்தாலும் பேச்சுகளாலும் நிறைந்திருந்த இந்த விடுதிக் கட்டடம், விபத்துக்குப் பிறகு ஏறக்குறைய ஓராண்டாக ஆள் அரவமற்றுக் கிடக்கிறது. இப்போது இந்தக் கட்டடத்தைச் சுற்றி காட்டுச்செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன.
படக்குறிப்பு, இந்த இடம் ஐஜிபி வளாகத்திற்கு வெளிப்பகுதியில் அமைந்துள்ளது. ஏஐ 171 விமானத்தின் வலது இறக்கை இங்குதான் வந்து விழுந்தது. உள்ளூர் தேநீர் கடைக்காரரின் 15 வயது மகன் இங்குள்ள நடைபாதையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, எரிந்து கொண்டிருந்த அந்த விமான இறக்கை அவன் மீது வந்து விழுந்தது. அது விழுந்ததன் தாக்கத்தால், இங்கிருந்த மற்றொரு அரசு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததுடன், அருகில் இருந்த மரங்களும் வேரோடு சாய்ந்தன. அந்தச் சுவர் இன்னும் கூட அதே இடிந்த நிலையில்தான் உள்ளது.
படக்குறிப்பு, இது உணவுக் கூடக் கட்டடத்திற்கும் ‘அதுல்யம்’ கட்டடத்திற்கும் இடையில் அமைந்துள்ள பாதுகாப்புக் கூடம் ஆகும். இந்தக் கூடத்தின் ஒருபுறம் காவல் துறை குதிரை முகாமும், மறுபுறம் உணவுக் கூடக் கட்டடமும் உள்ளன. விமானத்தின் எரிந்துபோன பாகங்களில் பெரும்பாலானவை இன்னும் இந்தப் பாதுகாப்புக் கூடத்திற்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, இங்கிருந்து ‘அதுல்யம்’ வளாகத்தின் நான்கு கட்டடங்களும் தெரிகின்றன. விமானத்தின் சிதைந்த பாகங்களை அங்கிருந்து அகற்றியதைத் தவிர, மற்ற அனைத்தும் அப்படியேதான் வைக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு இந்தக் கட்டடத்திற்கு வெளியே துருப்பிடித்த நிலையில் ஒரு எல்பிஜி கேஸ் சிலிண்டர் கிடப்பதும் கண்ணில் பட்டது. இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, காவல்துறையின் அனுமதி கிடைத்த பிறகு, இந்த வளாகத்தில் விடுதிக்கான புதிய குடியிருப்பு கட்டடங்களை உருவாக்கப் போவதாக பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் மீனாட்சி பரிக் தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி இந்த விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். ‘அதுல்யம்’ கட்டடத்தின் அடித்தளத் தூண்களுக்கு அருகே கிடந்த விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்கள் அகற்றப்பட்டுவிட்டன; இருப்பினும், கட்டடத்தின் நிலைமை இன்னும் அப்படியேதான் உள்ளது. இக்கட்டடத்தின் பாதுகாப்பதற்காக பி.ஜே. மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த தனியார் பாதுகாவலர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.