• Sat. Apr 25th, 2026

24×7 Live News

Apdin News

ஆறாவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழா: ஆண்கள் கபடி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தியது இலங்கை

Byadmin

Apr 25, 2026


சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் தாய்லாந்தை இலங்கை வெற்றிகொண்டு வரலாறு படைத்துள்ளது.

ஏனைய விளையாட்டுக்களில் இலங்கைக்கு ஏமாற்றமே கிடைத்தது.

சன்யா குடா ஹய்யுவே ஸ்கொயார் அரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான கடற்க்;ரை கபடி போட்டியில் தாய்லாந்தை எதிர்த்தாடிய இலங்கை 43 – 29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

இப் போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை 24 – 12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

ஆனால் இடைவேளையின் பின்னர் தாய்லாந்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை, இரண்டாவது ஆட்ட நேர பகுதியை 19 – 17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்டு போட்டியில் 43 – 29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வெற்றி பெற்றி இலங்கை ஆண்கள் கபடி அணியில் சீ.ஆர்.எஸ். சமரக்கோன் (தலைவர்), மொஹம்மது அன்சாப், மொஹம்மத் ஆபித் அக்கார், யாப்பாகே டிலான் சஞ்சய, எஸ்.எஸ்.ரி. தென்னக்கோன், அஹங்கம பொல்வத்த ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆனால், பெண்களுக்கான கடற்கரை கபடி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டம், கடற்கரை கைப்பந்தாட்டம் ஆகியவற்றில் இலங்கை தோல்வி அடைந்தது.

பெண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் இந்தியாவிடம் 32 – 44 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் 21 – 16 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும்  இரண்டாவது பகுதியில்  23 – 16 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றிபெற்றது.

இலங்கை பெண்கள் கபடி அணியில் ராசா கஜேந்தினி, பி. டிபுலா, ராசதுரை பிரியவர்ணா, எச். அலஹக்கோன், விமலேந்திரன் டிலக்ஷனா, பி. ஹேனக்க ஆகியோர் இடம்பெற்றனர்.

கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் இருபாலாரிலும் இலங்கைக்கு தோல்வியே மிஞ்சியது.

ஆண்களுக்கான கடற்கரை கைப்பந்து போட்டியில் ஹொங் கொங் அணிக்கு பலத்த சவாலாக விளங்கிய இலங்கை அணி இறுதியில் ஷூட் அவுட் முறையில் தோல்வி அடைந்தது.

முதலாவது செட்டில் 12 – 13 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்த இலங்கை, இரண்டாவது செட்டில் 16 – 6 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது. இதனை அடுத்து இரண்டு அணிகளும் தலா ஒரு செட்டில் வெற்றிபெற்றிருந்ததால், ஷூட் அவுட் முறை அமுல்படுத்தப்பட்டது.

இதில் 9 – 8 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஹொங் கொங் வெற்றிபெற்றது.

இதேவேளை பெண்களுக்கான கரப்பந்து போட்டியில் சினாவிடம் 0 – 2 என்ற செட்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

By admin