• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் நிலவும் வெப்ப அலை: நீர்நிலை விபத்துகளின் உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு!

Byadmin

May 28, 2026


இங்கிலாந்தில் நிலவும் வெப்ப அலை காரணமாக, மக்கள் அதிகளவில் நீர் நிலைகளை நாடுவதால் நீர்நிலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆவர்.

ஹாலிஃபாக்ஸில் 13 வயது சிறுவன், வார்விக்ஷயரில் ஒரு இளம் பெண் மற்றும் செஷையர் பகுதியில் 17 வயது சிறுவன் எனப் பல இளைஞர்கள் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி – இங்கிலாந்தில் அதிகரித்த வெப்பம்: நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்கள்!

கார்ன்வால் பகுதியில் தனது உறவினர்களைக் காப்பாற்ற முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் உயிரிழந்தார்.

வளிமண்டல வெப்பநிலை 35.1°C வரை அதிகரித்திருந்தாலும், நீர்நிலைகளில் உள்ள நீர் இன்னும் மிகவும் குளிர்ச்சியாகவே உள்ளது. இத்தகைய குளிர்ச்சியான நீரில் திடீரென இறங்குவது “குளிர் நீர் அதிர்ச்சி”யை உண்டாக்கி, நீந்துவதையும் நீரிலிருந்து வெளியேறுவதையும் கடினமாக்கும் என்று ராயல் லைஃப் சேவிங் சொசைட்டி (RLSS) எச்சரித்துள்ளது.

மக்கள் உயிர் காப்பாளர்கள் (lifeguards) இருக்கும் கண்காணிப்புடன் கூடிய இடங்களில் மட்டுமே நீந்துமாறும், உடல் வெப்பநிலையைச் சமன்படுத்த நீருக்குள் மெதுவாக இறங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒருவேளை தண்ணீரில் ஆபத்தான நிலையில் சிக்கினால், பதற்றமடையாமல் “float to live” (வாழ மிதத்தல்) என்ற முறையைப் பின்பற்றுமாறு நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு (Water Safety Partnership) வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, மல்லாக்கப் படுத்து, தலையைப் பின்னோக்கிச் சாய்த்து, சுவாசத்தைச் சீராக்கிக் கொண்டு, பின்னர் உதவிக்கு அழைக்க வேண்டும்.

வேல்ஸ் பகுதியில் மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவு 32.9°C வெப்பமும், இலண்டனின் கியூ கார்டன்ஸ் பகுதியில் 35.1°C வெப்பமும் பதிவாகியுள்ளது.

By admin