9
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வெறும் எட்டே வாரங்களில் உருவாக்கப்பட்ட புதிய எபோலா தடுப்பூசி, மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை இங்கிலாந்து மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை முகாமை (MHRA) வழங்கியுள்ளது.
தற்போது காங்கோ ஜனநாயக குடியரசில் ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 625 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,792 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : காங்கோவில் பரவும் எபோலா வைரஸ் தொற்று: முதல் ஐரோப்பிய நோயாளி பிரான்ஸில் பதிவு!
கொரோனா பெருந்தொற்றின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொழில்நுட்பத்தையே விஞ்ஞானிகள் இதற்கும் பயன்படுத்தியுள்ளனர். இது சிம்பன்சிகளிடம் காணப்படும் ஒரு பொதுவான சளி வைரஸை மரபணு மாற்றம் செய்து பாதுகாப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் முதற்கட்டப் பரிசோதனையில் 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 50 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் ஒரு ஆண்டு காலம் கண்காணிக்கப்படுவார்கள் என்றாலும், தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத் திறன் குறித்த முடிவுகள் விரைவாகத் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.