படக்குறிப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் அதே வேளையில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றனர். கட்டுரை தகவல்
எழுதியவர், சாரதா வி
பதவி, பிபிசி செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதே வேளையில், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் இடதுசாரிகள் வேட்பாளர்களை களமிறக்குகின்றன.
ஒன்றுக்கு மேற்பட்ட முறை விளக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், தங்கள் நிலைப்பாடு (அரசுக்கு ஆதரவு, அமைச்சரவையில் பங்கு இல்லை, கூட்டணியில் இல்லை, தேர்தலில் எதிர்த்துப் போட்டி) என்பது தெளிவாக இருப்பதாக இடதுசாரி கட்சிகள் கூறுகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுராந்தகத்திலும் போட்டியிடுகின்றன. தாங்கள் எந்த கூட்டணியிலும் தற்போது இல்லை என்பதால் தனித்துப் போட்டியிடுவதாக இரு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் அதேவேளையில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
‘அரசியல் அறமற்ற செயலால் இடைத்தேர்தல்’
தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரத்தில் வென்ற சத்தியபாமாவும் மதுராந்தகத்தில் வென்ற மரகதம் குமரவேலுவும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர். தற்போது அவர்கள் அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
“இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். அரசியல் அறமற்ற செயலால் ஏற்பட்டது இது” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கருத்தை முன்வைக்கிறது.
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
அரசுக்கு ஆதரவு, தேர்தலில் எதிர்த்துப் போட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை 2019-ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் இருந்து வந்தன. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தலா 5 இடங்களில் போட்டியிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
தனிப் பெரும்பான்மை பெறாத தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்ட போது, அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற நிலைப்பாட்டை இடதுசாரிகள் எடுத்தன. ஆளுநர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே ஆதரவு அளித்ததாக இடதுசாரி கட்சிகள் தெரிவித்தன.
“ஆளுநர் ஆட்சி மூலமாக பாஜக கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு சென்றுவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம்” என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்.
தவெக அரசுக்கு ஆதரவு அளித்தாலும் தற்போது தேர்தல் களத்தில் தவெகவை எதிர்த்து போட்டியிடும் முடிவை இடதுசாரி கட்சிகள் எடுத்துள்ளன. இது முரண்பாடான முடிவு அல்ல என்கிறார் மு.வீரபாண்டியன்.
“மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமே தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். நாங்கள் தவெக அமைச்சரவையிலும் பங்கேற்கவில்லை, தவெக கூட்டணியிலும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, “இடைத்தேர்தலுக்காக தனியாக அணி சேர வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழலில் நாங்கள் திமுக, அதிமுக, தவெக கூட்டணியில் இல்லை. எனவே தனித்துப் போட்டியிடுகிறோம்” என்றார்.
இதுபோன்ற முடிவுகள் சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ள கடினமானவை என்கிறார் இடதுசாரி அரசியலை பல தசாப்தங்களாக உற்று கவனித்து வருபவரும் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புடையவருமான ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு.
“இயல்பான புரிதலுக்கு எதிராக இருப்பதால் சாதாரண மக்கள் புரிந்து கொள்வது கடினம். அக்கட்சியின் சாதாரண உறுப்பினர்களுக்கு கூட இந்த முடிவுகளை புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். ” என்றார் அவர்.
பட மூலாதாரம், CPIM
படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
தவெக – இடதுசாரிகள் உறவு
தவெக அரசு அமைந்த முதல் வாரத்திலேயே இரு தரப்பினருக்கும் இடையிலான உரசல்கள் தொடங்கி விட்டன. அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாக பாடவில்லை என்கிற சர்ச்சை எழுந்த போது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் அறிக்கை வெளியிட்டிருந்தன. அதன் பிறகு, பல சந்தர்ப்பங்களில் இடதுசாரிகள் தவெகவுடனான தங்கள் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
இடதுசாரி மாணவர் அமைப்பினரின் போராட்டங்களில் மாணவர்கள் கலந்து கொள்வதை கல்லூரிகள் கண்காணிக்கும் வகையில் வெளியான சுற்றறிக்கையை எதிர்த்து இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. திண்டுக்கல்லில் தாசில்தார் ஒருவர் இடதுசாரிகளை கணக்கெடுக்குமாறு உத்தரவிட்ட விவகாரத்தில் தவெக அரசை இடதுசாரி கட்சிகள் கடுமையாகவே கண்டித்திருந்ததன.
இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இந்த முரண்பாடுகள் கண்டிப்பாக தேர்தல் பிரசாரத்தில் முன் வைக்கப்படும் என்றார்.
“தவகெ அரசுடன் முரண்படும் விசயங்களை அவ்வப்போது அறிக்கைகள் வாயிலாக கூறியுள்ளோம். அமைச்சர்களை சந்தித்து சில சட்டங்களை நிறைவேற்ற வேண்டாம் என்று கூறியிருந்தோம். அவற்றில் சிலவற்றை ஏற்றுக் கொண்டார்கள், பலவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டமன்றம் மக்களின் பிரச்னைகளை பேசும் மன்றமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். இவை எல்லாமும் தேர்தல் பிரசாரத்தில் பேசப்படும்” என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தற்போது நிலவுகிற அரசியல் சூழலில் தாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை என்றும் அதே நேரம் தேர்தல் நடைபெறும் போது பார்வையாளராக இருக்க விரும்பவும் இல்லை என்றும் தெரிவித்தார். “அரசியல் என்பது கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது மட்டுமல்ல. சாதி பிரச்னைகள் உட்பட பல சமூக அவலங்கள் உள்ளன. அதுகுறித்து மக்களை அரசியல்படுத்த வேண்டியுள்ளது. நான்கு இடங்கள் பெற்றுள்ள இடதுசாரிகள் ஆறு இடங்கள் பெற்றால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு வலு சேர்க்குமே” என்றார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்தப் பத்திரிகையாளர் சிவப்பிரியன்,”தவெக அரசின் செயல்பாடுகளில் சில நேரம் அவர்களுக்கு உடன்பாடு இருப்பதில்லை. மாணவர் அமைப்பினரை கண்காணிக்கும் சுற்றறிக்கை விடுத்த விவகாரத்தில் தலைமைச் செயலாளரை கண்டித்து இடதுசாரிகள் அறிக்கை விடுத்தன. அதேபோன்று திண்டுக்கல் தாசில்தார் விவகாரத்திலும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. பாஜகவை எதிர்ப்போம் என்ற சித்தாந்த உறுதிப்பாட்டை தவெக கடைப்பிடிக்குமா என்ற சந்தேகம் இடதுசாரிகளுக்கு எழுந்துள்ளது.” என்றார்.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு பேசுகையில், ” இடதுசாரிகள் இந்த தேர்தலில் வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் அவர்கள் 2 ஆயிரம் வாக்குகள் பெற்றால் கூட தீர்மானிக்கும் சக்தியாக இருக்கக் கூடும். தவெக இந்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெறாவிட்டால் இடதுசாரிகள் வெளியிலிருந்து கொடுக்கும் ஆதரவை நம்பி இருக்க வேண்டும், கூட்டணிக் கட்சிகளை மிரட்ட முடியாது” என்கிறார்.
பட மூலாதாரம், CPIM
தமிழக அரசியலில் கோலோச்சிய திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பின்னுக்கு தள்ளி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. அக்கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது. திமுக, அதிமுக, தவெக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
தவெக, திமுக, (பாஜக கூட்டணியில் அல்லாத) அதிமுக –இந்த மூன்று கட்சிகளையும் ஜனநாயக சக்திகளாகவே பார்ப்பதாக மு.வீரபாண்டியன் கூறுகிறார். “ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் சித்தாந்தத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம். திமுக, தவெக, பாஜக கூட்டணியில் சேராத போது அதிமுக – மூன்றையுமே நாங்கள் ஒரே தூரத்தில் வைத்து தான் பார்க்கிறோம். ஒரு கட்சி மற்றொரு கட்சியை விட எங்களுக்கு நெருக்கம் என்று கூற முடியாது” என்றார்.
தவெக அரசுக்கு ஆதரவு அளித்தாலும் தற்போது அந்த ஆதரவை திரும்ப பெறுவதற்கான களத்தை தயார் செய்து வருகின்றன இடதுசாரிகள் என்கிறார் மூத்தப் பத்திரிகையாளர் சிவப்பிரியன்.”காலியாக உள்ள ஏழு சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளில் மூன்று அல்லது நான்கை தவெக கைப்பற்றினாலும் இடதுசாரிகளின் தேவை தவெகவுக்கு இருக்காது. இயல்பாக அவர்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.
இடைத்தேர்தலுக்கு பிறகு தவெக அரசுக்கு தங்கள் ஆதரவு தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டாலும் தங்களின் அணுகுமுறை இதே மாதிரியாகவே இருக்கும் என்று மு.வீரபாண்டியன் கூறுகிறார். “ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம், எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம்” என்றார்.