1
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காங்கேசன்துறை பகுதியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளை சோதனையிட்ட போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆரம்ப சோதனைகளில், இரண்டு இந்தியப் பிரஜைகளிடமிருந்து தலா 100 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் மேலும் 26 பேர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், உடலினுள் மறைத்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்கேன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டனர்.
இதன்போது, அவர்களில் 6 பேரின் உடலினுள் தங்கக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகளின் பின்னர் ஏனைய 20 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்துக்கு நேற்று தகவல் முன்வைக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்களை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட 8 பேரில் இரண்டு இலங்கைப் பெண்களும், ஆறு இந்திய ஆண்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.