மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத் துறையில் இதுவரை கிரேடு 1 செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில் சட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்வெழுதி அலுவலர்களாக முடியும் என்ற நிலை இருக்கிறது. கோயில் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை நிர்வகிக்க சட்ட அறிவு அவசியமானதாக இருக்கிறது என்பதால், துறையின் இணை ஆணையர் பதவிக்கு சட்டம் படித்து இருப்பது அவசியமானதாகும்.
நீதிபதியாக இருந்து வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு பூசல்களை தீர்க்கும் இடமாக இணை ஆணையர் பொறுப்பு நீதித்துறை சார்ந்து முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் சட்டம் பயிலாதவர்களும் நேரடி நியமனத்தின் மூலம் உதவி ஆணையர்களாக, கிரேடு 1 செயல் அலுவலர்களாக நியமிப்பதற்கும், மேலும், அவ்விடங்களை வருவாய்த் துறையினரை வைத்து நிரப்புவதற்கும் தற்போதுள்ள இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 9-வது சட்டப் பிரிவை திருத்தி பிரிவு 2-ஐ ரத்து செய்ய உள்ளதாக அறிகிறோம்.
இது பொருத்தமற்றதும், அறநிலையத்துறை செயல்பாடுகளை முடக்குவதுமாகும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.