• Mon. Jun 8th, 2026

24×7 Live News

Apdin News

இரவில் தூங்கும் முன் குளிப்பதில் யாருக்கு எச்சரிக்கை அவசியம்? கோடை வெப்பத்தை சமாளிக்க எளிய டிப்ஸ்

Byadmin

Jun 8, 2026


கோடைக் காலத்தில் இரவு குளித்துவிட்டு உறங்கச் செல்வது நல்லதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டின் சில பகுதிகள் உள்பட நாடு முழுவதும் ஜூன் மாதத்திலும் வெப்ப அலை தீவிரமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பகல் மட்டுமின்றி இரவிலும் வழக்கத்தை விட அதிகமான வெப்பத்தை உணர முடிகிறது. இதனால் ஏற்படக் கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும், மருத்துவர் அருள்மொழிச்செல்வன் பிபிசி தமிழுக்கு அளித்த விரிவான நேர்காணலில் விளக்கியுள்ளார்.

உடலுக்கு வெப்பம் தேவை என்றாலும், அளவுக்கு அதிகமான வெப்பம் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் மருத்துவர் அருள்மொழிச்செல்வன் “பருவநிலை மாறும்போது நம் உடலும் மாற்றங்களுக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால் இந்தக் கோடையில் வெப்பம் சாதாரண அளவைவிட மிகவும் அதிகமாக இருப்பதால், உடல் அதைச் சமாளிக்க இயலாத நிலை உருவாகிறது” என்று குறிப்பிடுகிறார்.

மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்

வெப்ப அலை வீசத் தொடங்கியதும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள பொது மக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி,

  • மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • மதிய வேளைகளில் கடுமையான உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
  • வெளியில் செல்லும்போது செருப்பு அணியாமல் செல்லக் கூடாது.
  • உச்சகட்ட வெயில் நேரத்தில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • சமையலறையில் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • மது, தேநீர், காபி மற்றும் அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்கள் உடலை நீர்ச்சத்தின்றிச் செய்துவிடும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  • அதிக புரதம் கொண்ட உணவுகளையும் பழைய உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.
  • யாராவது மிக அதிக உடல் வெப்பத்துடன், சுயநினைவை இழந்தோ அல்லது குழப்பமான நிலையிலோ காணப்பட்டால், உடனடியாக 108 அல்லது 102 என்ற அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இந்த வெப்ப தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள நீர்ச்சத்தை பராமரிப்பது மிக அவசியம் என்று மருத்துவர் அருள்மொழிச்செல்வன் வலியுறுத்துகிறார்.

“குறிப்பிட்ட நேரத்திற்குக் காத்திருக்காமல், இடைவெளி விட்டு தொடர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் மட்டுமே போதாது, உப்பு சேர்த்த தண்ணீர், எலுமிச்சை சாறு, மோர் ஆகியவை நல்ல தேர்வுகளாகும். ஏனெனில் வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் உடலில் உள்ள உப்புச்சத்து நீர்த்துப் போய்விடும். தர்ப்பூசணி, கீரை, பழங்கள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்” என்று அவர் விளக்கினார்.

By admin