8
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான உத்தியோகப்பற்றற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் ஏ அணியை 5 விக்கெட்களால் நியூஸிலாந்து ஏ அணி வெற்றிகொண்டது.
முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை பறிகொடுத்த நியூஸிலாந்து மகளிர் ஏ அணிக்கு இது ஆறுதல் அளிக்கும் வெற்றியாக அமைந்தது.
மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் ஏ அணி 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் அணித் தலைவி சத்யா சந்தீப்பனி அதிகப்பட்சமாக 16 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரை விட சஞ்சனா காவிந்தி, சுமுது நிசன்சலா ஆகிய இருவரும் தலா 15 ஓட்டங்களையும் பியூமி வத்சலா 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜெஸ் வொட்கின் 4 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கேய்லி நைட் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் ஏ அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் ப்ரூ கெட்டொன் ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் கேட் அண்டசன் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ப்ரமுதி மெத்சரா 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சச்சினி நிசன்சலா 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: ஜெஸ் வொட்கின்