7
நியூஸிலாந்து மகளிர் ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருககான இலங்கை மகளிர் ‘ஏ’ குழாத்தில் மன்னார், பேசாலை வீராங்கனை சதீஸ்குமார் சஜிந்தினி பெயரிடப்பட்டுள்ளார்.
வலதுகை வேகப்பந்துவீச்சாளரான சஜிந்தினி, அண்மையில் நடைபெற்ற இலங்கை – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான உத்தியோகப்பற்றற்ற மகளிர் சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை மகளிர் ஏ குழாத்திலும் பெயரிடப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
மூன்று போட்டிகள் கொண்ட அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சீரற்ற காலநிலை காரணமாக இடையில் கைவிட்டப்பட்டன. ஆனால் கடைசிப் போட்டியில் நியூஸிலாந்து மகளிர் ஏ அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.
எனினும், ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரில் சஜிந்தினிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மகளிர் ‘ஏ’ குழாத்தில் இடம்பெறும் வேகபந்துவீச்சாளர்களில் சஜிந்தினி அதிவேகமாகவும் துல்லியமாக வும் பந்துவீசக்கூடியவர் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அவரது நுட்பத்திறன் முன்னேறவேண்டும் என முன்னாள் பயிற்றுநர் ஹேமன்த தேவப்ரிய சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மகளிர் ‘ஏ’ ரி20 அணிக்கும் சத்யா சந்தீப்பனி தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழாம்: சத்தியா சந்தீப்பனி (தலைவி), சஞ்சனா காவிந்தி, விமோக்ஷா பாலசூரிய, விட்டினி டி அல்விஸ், விஷ்மி குணரட்ன, தெவ்மி விஹங்கா, சுமுது நிசன்சலா, ரஷ்மிக்கா செவ்வந்தி, பியூமி வத்சலா, ப்ரமுதி மெத்சரா, சச்சினி நிசன்சலா, ஷஷினி கிம்ஹானி, அசேனி தலகம, சமுதி ப்ரபோதா, ரந்தி ப்ரேமரத்ன, சதீஸ்குமார் சஜிந்தினி.
