• Wed. May 20th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீராவின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்

Byadmin

May 20, 2026


தற்போது இஸ்ரேலிய இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீராவின் பாதுகாப்பு குறித்து கொழும்பிலுள்ள சிவில் சமூக அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தமது தீவிர கவலைகளை வெளியிட்டுள்ளன.

அத்துடன், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவரை விடுவிப்பதற்கும் தேவையான இராஜதந்திர ரீதியிலான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசிடமும் வெளிவிவகார அமைச்சிடமும் கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் உள்ள வெளிவிவிவகார அமைச்சுக்கு முன்பாக இன்று (19) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காசா பகுதிக்கு அவசர மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற சர்வதேச ‘குளோபல் சுமுத்’ (Global Sumud Flotilla) கப்பல் குழுவின் படகுகள் இஸ்ரேலிய கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இடைமறிக்கப்பட்டது.

இச்சம்பவத்தின் போது, அந்தப் படகுகளில் பயணித்த இலங்கையைச் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளரான சமீரா மஹ்பூப்தீன் உட்பட 250க்கும் மேற்பட்ட சர்வதேச செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்குழுவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் வாழும் சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள் மற்றும் அவசர நிவாரணங்களை வழங்குவதற்காக, சுமார் 45 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களுடன் 54 படகுகள் அண்மையில் துருக்கியிலிருந்து புறப்பட்டிருந்தன.

எனினும், காசா கரையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இக்குழுவின் 30க்கும் மேற்பட்ட படகுகளை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வழிமறித்துக் கைப்பற்றியுள்ளதுடன், அதிலிருந்த செயற்பாட்டாளர்களையும் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்

By admin