5
இலங்கைக்கு மேற்கொண்டிருந்த தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று செவ்வாய்க்கிழமை (20) கொழும்பிலிருந்து இந்தியா புறப்பட்டார்.
இரண்டு நாள் விஜயத்தின் போது, அவர் இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அதன் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் தனித்தனியான சந்திப்புகள் இடம்பெற்றன.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடனும், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அமைப்புகளுடனும் அவர் கலந்துரையாடல்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது, மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாற்றிய அவர், மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.
இவ்விஜயம், இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
