22
மத்திய இலண்டனில் நாளை நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னிட்டு, இங்கிலாந்து அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. வலதுசாரி செயற்பாட்டாளர் Tommy Robinson தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வர முயன்றதாகக் கூறப்படும் 11 “தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள்” இங்கிலாந்துக்குள் நுழைவதை அந்நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் விசேட அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்டவர்களில் போலந்து அரசியல்வாதி Dominik Tarczynski, பெல்ஜியத்தின் வலதுசாரி அரசியல்வாதி Filip Dewinter, இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகளால் சர்ச்சைக்குரிய சமூக ஊடக செல்வாக்காளர் Valentina Gomez, அமெரிக்க வர்ணனையாளர் Joey Mannarino மற்றும் டச்சு குடியேற்ற எதிர்ப்பு செயற்பாட்டாளர் Eva Vlaardingerbroek உள்ளிட்டோர் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து பிரதமர் Keir Starmer இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், தனது அரசாங்கம் அமைதியான ஜனநாயக போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், ஆனால் வெறுப்புணர்வு, இனவாதம் மற்றும் வன்முறையை தூண்டும் எந்தவிதச் செயல்பாடுகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக மத்திய இலண்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் பொலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி – இலண்டனில் சனிக்கிழமை இருவேறு போராட்டங்கள்: 4,000 பொலிஸார் தீவிர பாதுகாப்பு பணியில்!