ஜப்பானின் டோக்கியோவில் உள்ள Haneda Airport விமான நிலையத்திலிருந்து இலண்டன் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த British Airways விமானத்தில் பயணி ஒருவரின் கையடக்க தொலைபேசி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விமானம் ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, விமானத்தை உடனடியாக அதன் நிறுத்துமிடத்திற்கு மீண்டும் திருப்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற உடனேயே விமான பணியாளர்கள் அவசர பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் பயணித்த 211 பயணிகள் மற்றும் பணியாளர்களில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என ஜப்பானிய போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்து வருவது தொடர்பில் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஸ்மார்ட்போன்கள், மின்சார சாதனங்கள் மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய மின்னணு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் இத்தகைய பேட்டரிகள் பாதுகாப்பு சவால்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து மேலதிக பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இலண்டன் நோக்கிப் பயணித்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்தை விட சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post இலண்டன் நோக்கிச் சென்ற விமானத்தில் பயணியின் அலைபேசி தீப்பற்றி எரிந்தது: விமானத்தில் பரபரப்பு appeared first on Vanakkam London.