“முதல்முறையாக ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு வந்தபோது எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது. பஞ்சு அருணாச்சலம் என்னிடம் ஏதாவது பாடல் இருக்கிறதா எனக்கேட்க, சில பாடல்களை பாடிக் காண்பித்தேன். நன்றாக உள்ளது, இதை வைத்தே நான் திரைக்கதை எழுதிக் கொள்கிறேன் என்றார் அவர். அந்தப் பாடல்களை வாத்தியங்கள் இல்லாமல் மேசையில் கைகளால் தட்டியே பாடிக் காண்பித்தேன்”.
‘அன்னக்கிளி’ திரைப்படம் உருவான விதம் குறித்து, 2024இல் ஒரு இசை நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியிருந்தார் இளையராஜா.
இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான ‘அன்னக்கிளி’, 1976இல் வெளியானபோது, அதன் பாடல்கள் வெகு சீக்கிரமாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. காரணம் அதில் ஒலித்த புதுமையான கிராமத்து இசை.
அதற்கு முன், 1960கள் மற்றும் 70களில் கன்னட திரைப்படத் துறையில் பிரபல இசையமைப்பாளராக இருந்த ஜி.கே.வெங்கடேசன் என்பவரிடம் சில ஆண்டுகள் இசை உதவியாளராகப் பணிபுரிந்தார் இளையராஜா.
பெரும் தயக்கத்துடனே ‘அன்னக்கிளி’ திரைப்படத்திற்கு இசையமைத்ததையும், பாடல்கள் வெற்றியடைவது பெரும் சந்தேகம் தான் நினைத்ததையும் இளையராஜா பல முறை கூறியுள்ளார்.
மே 14, 1976 அன்னக்கிளி திரைப்படம் வெளியானபோது ஓரிரு நாட்களுக்கு தான் நினைத்தது சரி தான் என இளையராஜா எண்ணியிருப்பார், காரணம் திரைப்படம் முதலில் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
பட மூலாதாரம், S. P. T. Films
படக்குறிப்பு, இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான ‘அன்னக்கிளி’, 1976இல் வெளியானது.
“முதல் சில நாட்களில் திரைப்படம் ‘சலிப்பை ஏற்படுத்துகிறது’ என மக்கள் சொன்னதால், இடைவேளைக்குப் பின் வரும் ‘சொந்தமில்லை…பந்தமில்லை’ பாடல் நீக்கப்பட்டது. நாட்கள் செல்ல, பாடல்கள் ஹிட் ஆக, எங்கே அந்த பாட்டு என மக்கள் கேட்டார்கள். 56வது நாள் அந்தப் பாடல் மீண்டும் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டது” என ஒரு நிகழ்வில் பேசியிருப்பார் ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் கதாநாயகன் சிவக்குமார்.
கருப்பு-வெள்ளை திரைப்படமான ‘அன்னக்கிளி’க்காக, இந்திய மற்றும் மேற்கத்திய செவ்வியல் இசையைத் தமிழ் நாட்டுப்புற இசையுடன் இணைத்து பாடல்களை உருவாக்கியிருந்தார் இளையராஜா.
இளையராஜாவின் இசைப்பயணத்தின் தொடக்கம் குறித்து பேசப்படும்போதெல்லாம், ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் பாடல் பதிவின் போது சில நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டது குறித்தும் பேசப்படும்.
“மின்தடை ஏற்பட்டது உண்மை தான். அப்போது நான் வெற்றிபெற்ற இளையராஜா கிடையாதே. அப்படிப்பட்ட ஒரு சூழலை ஒரு சாமானியன் சந்தித்தால் என்ன உணர்வை எதிர்கொள்வானோ அதையேதான் நானும் அன்று எதிர்கொண்டேன்” என ஒரு பேட்டியில் கூறியிருப்பார் இளையராஜா.
ஆனால், இளையராஜாவின் பாட்டின் மூலம் உருவான அத்திரைப்படம், அவரது பாடல்களுக்காகவே பெரு வெற்றியும் பெற்றது.
“திரைப்படம் வெளியான நேரத்தில், ஒருமுறை நான் நடைபயிற்சி செய்யக் கிளம்பும்போது, பக்கத்து வீட்டின் வானொலியில் ‘அடுத்த பாடல் அன்னக்கிளி படத்தில் இருந்து’ என அறிவித்தார்கள். உடனே பக்கத்து வீட்டுக்காரர் ‘அன்னக்கிளி பாடல் போடுகிறார்கள்’ என்று பிறரையும் அழைத்தார். நான் தெருவைக் கடப்பதற்குள் அனைத்து வீட்டு வானொலிகளிலும் அந்தப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது” என இளையராஜா தெரிவித்திருந்தார்.
‘தமிழ் திரையிசையை எளிதாக்கியவர்’
பட மூலாதாரம், Instagram/ilayaraja_official
அன்னக்கிளிக்குப் பிறகு இளையராஜாவுக்கு திரைப்படங்கள் குவிந்தன. ஆனால், இதைத் தாண்டி ‘அன்னக்கிளி’ மூலம் இளையராஜா கொண்டு வந்த மாற்றம் என்பது அதுவரை இந்தி பாலிவுட் பாடல்களை கேட்டுவந்த பலரையும் தமிழ் திரைப்பட பாடல்களை நோக்கி திருப்பியது தான்.
காரணம், 1970கள் என்பது இந்தித் திரைப்படப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த காலகட்டம். குறிப்பாக இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் பாடல்கள்.
“நாங்கள் அப்போது தீவிர தமிழ் உணர்வோடு இருந்தோம். இந்தி எதிர்ப்புணர்வு கொண்டவர்கள். ஆனால், பாடல்கள் கேட்பதென்றால் இந்திப் பாடல்கள் தாம். ‘அன்னக்கிளி’ பாடல்கள் வந்த பிறகு ஒரே நாளில் இந்திப் பாடல்களைவிட்டு, தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் பழக்கத்துக்கு மாறிப்போனோம், அந்த அளவுக்கு அப்பாடல்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தன” என ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ‘தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்’ நூலில், இளையராஜா பற்றிய ஒரு கட்டுரையில், பேராசிரியர் ஒருவர் நினைவுகூர்ந்திருந்தார்.
‘அன்னக்கிளி’ பாடல்கள் தொடர்பாக பலரும் குறிப்பிடும் மற்றொரு விஷயம், அதுவரை மக்களுக்கு அந்நியமாக இருந்த தமிழ் திரையிசையை எளிதாக, கடைக்கோடி கிராமங்கள் வரை இளையராஜா கொண்டுசேர்த்தார் என்பதே.
பட மூலாதாரம், ILAYARAJA/X
படக்குறிப்பு, நடிகர் ரஜினிகாந்துடன் இளையராஜா
“எங்கள் கிராமத்தின் கோவில் திருவிழாவில் தான் முதல்முறையாக ‘அன்னக்கிளி உன்ன தேடுது…’ பாடலைக் கேட்டோம். அதுவரை கேட்காத அந்த இசை, கேட்டவுடன் மனதில் ஒட்டிக் கொண்டது. நம் ஆள் ஒருவர் இசையமைக்க வந்துவிட்டார் என நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்” என ஒரு நிகழ்வில் பேசியிருப்பார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் சீமான்.
இதற்கு மற்றொரு முக்கிய காரணம், தனது கிராமத்து வாழ்க்கையில் தான் கேட்டு வளர்ந்த இசையையே ‘அன்னக்கிளி’ மூலம் திரையில் கொண்டுவந்தார் இளையராஜா. அதிலும், ‘அன்னக்கிளி உன்ன தேடுது…, பாடல் எங்கள் தாய் சிறுவயதில் பாடிய தாலாட்டுப் பாட்டு’ என இளையராஜாவின் சகோதரர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே..’ உள்பட பல்வேறு பாடல்கள் தனது அம்மா பாடிய தாலாட்டுகளில் இருந்து உருவானவையே என்பதை இளையராஜாவும் குறிப்பிட்டுள்ளார்.
‘அன்னக்கிளி’ வழங்கிய அடையாளம்
பட மூலாதாரம், ILAYARAJA/X
“‘அன்னக்கிளி’ என்ற வழக்கமான திரைக்கதையைக் கொண்ட திரைப்படத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கதாக இருந்தன. ஒன்று, இந்தப் படம் முழுக்க முழுக்க தெங்குமரஹாடா என்ற அழகிய கிராமத்தில் படமாக்கப்பட்டிருந்தது. அந்த நிலப்பரப்பை அப்படியே திரையில் கொண்டுவந்தது இந்தப் படம். இரண்டாவதாக, இளையராஜா என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியது” என தன்னுடைய ‘The Eye of the Serpent’ நூலில் குறிப்பிடுகிறார் பிரபல திரைப்பட ஆய்வாளரான தியோடர் பாஸ்கரன்.
“இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அன்னக்கிளி உன்னைத்தேடுதே’ என்ற பாடல் வெளிவந்த சில வாரங்களிலேயே தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்தது. இந்தப் படத்தின் பாடல்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு மிகப் பிரபலமாக இருந்தன,” என அவர் கூறுகிறார்.
இதுவரை 1400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துவிட்டார். திரையிசையைத் தவிர்த்து, ஆல்பங்கள், சிம்ஃபொனி உள்ளிட்ட இளையராஜாவின் பிற முயற்சிகளும் கவனிக்கத்தக்கவை தான். ஆனால், 50 வருடங்களைக் கடந்தும் ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் பாடல்கள் தமிழ் திரையிசை ரசிகர்களால் தொடர்ந்து நினைவுகூரப்படுகிறது.