• Fri. Jul 3rd, 2026

24×7 Live News

Apdin News

ஈஸ்டர் குண்டுவெடிப்பு: கொழும்பு அதிகார வட்டத்தை உலுக்கிய புதிய விசாரணைகள் – என்ன நடக்கிறது?

Byadmin

Jul 3, 2026


உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியான் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும், கொழும்பின் சொகுசு ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட அந்தத் தொடர் தாக்குதல்களின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை.

வெளிநாட்டுப் பிரஜைகள் உள்பட 269 பேர் இந்தத் தாக்குதல்களில் பலியாகினர், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் யார் என்ற கேள்விக்கு மூன்று அரசுகள் மாறிய பிறகும் விடை அறியப்படாமலே இருந்து வந்தது.

தாக்குதல் நடந்த 2019இல் ஆட்சியில் இருந்த மைத்ரி-ரணில் அரசாங்கம், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், அதைத் தொடர்ந்து அமைந்த ரணில்-ராஜபக்ச அரசாங்கம் என மூன்று ஆட்சிக் காலங்களிலும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகமும், பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான திருச்சபையும் நீதிகோரி வீதிகளில் இறங்கிப் போராடின.

இந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசின் கீழ், இந்த விசாரணைகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. அதன் விளைவாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடை ஆகியவை கொழும்பு அதிகார மையங்களின் அஸ்திவாரத்தையே உலுக்கியுள்ளன.

By admin