0
உக்ரைனில் நீடித்து வரும் போர் மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், அங்குள்ள இயற்கை சூழலிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
போர் தீவிரமாக நடைபெற்று வரும் பகுதிகளில் உள்ள பறவைகளின் கூடுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், சில கூடுகள் வழக்கமான புல் மற்றும் இயற்கை பொருட்களுடன் சேர்த்து பைபர்-ஆப்டிக் கேபிள்களையும் பயன்படுத்தி கட்டப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
டிரோன் இயக்கங்களில் மின்னணு தடைகளை தவிர்க்கும் நோக்கில், உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகள் பைபர்-ஆப்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. போரின் போது அறுந்து விழும் இந்த கேபிள்கள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை பறவைகள் புதிய கட்டுமானப் பொருட்களாக பயன்படுத்தத் தொடங்கியிருப்பது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயற்கையாக கிடைக்கும் பொருட்களுக்கு பதிலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் பறவைகளின் வாழ்விடத்தில் இடம்பெறுவது, போரின் மறைமுக தாக்கங்களை வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
போர் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித உயிர்கள் மற்றும் கட்டமைப்புகளை மட்டுமல்லாமல், விலங்குகள் மற்றும் பறவைகளின் இயல்பான வாழ்க்கை முறையையும் பாதிக்கக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
இயற்கையின் சமநிலையை பாதிக்கும் இதுபோன்ற மாற்றங்கள், நீண்ட காலத்தில் அந்தப் பகுதிகளின் உயிரியல் அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.