அப்போது அவர்கள் கேட்டுக் கொள்ளும்படி நடந்து கொள்வதற்காக 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். “இதில் எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள்’ எனக் கண்டிப்புடன் கூறிவிட்டேன். இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் நானும் என் குடும்பத்தினரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்'” என மிரட்டியதாகப் புகார் மனுவில் இளையராஜா கூறியுள்ளார்.
‘மக்களால் தேர்வு செய்யப்பட்ட பொது ஊழியரான என்னிடம் மக்கள் பணியை செய்யக் கூடாது என்பதற்காகவும் தனது பேச்சுக்கு உடன்படுவதற்கு லஞ்சம் தர முயற்சித்ததோடு, குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்விடும் வகையில் நடந்து கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் புகார் மனுவில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
அவருக்குப் பின்னணியாக செயல்பட்டதாக கருதப்படும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையின் புலன் விசாரணையில் தி.மு.க முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் என்பவர், வழக்கில் கைதான நரேஷ் என்பவரை சென்னையில் சந்தித்துள்ளதாகக் காவல்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின்பேரில் கைதான திருநாவுக்கரசு வழக்கின் புகார்தாரரான இளையராஜாவைத் தொடர்பு கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததாகக் காவல்துறை கூறியுள்ளது.
வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’10 எம்.எல்.ஏக்களிடம் பேரம்’ – எம்.எல்.ஏ இளையராஜா
தன்னிடம் பேரம் பேசியதாகப் புகார் அளித்த எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பிபிசி தமிழ் பேசியது.
“புகார் மனுவில் அனைத்தையும் கூறியுள்ளேன். செல்போன் மூலமாக அழைத்தார்கள். அவர்கள் கூறிய விஷயங்கள் எதுவும் எனக்கு சரியானதாக தெரியவில்லை,” என்கிறார்.
”அவர்கள் கட்சிப் பெயரை எதுவும் பயன்படுத்தவில்லை” எனக் கூறிய அவர், ”முக்கியமான கட்சிக்காக பேசுவதாகக் கூறினர். யார் பெயரையும் குறிப்பிட்டுப் பயன்படுத்தவில்லை. அவர்கள் கூறியதன் அடிப்படையில் புரிந்து கொண்டேன்” எனக் கூறினார்.
”இதுதொடர்பாக, பத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஓர் அமைச்சரிடம் பேசியதாக அவர்கள் என்னிடம் கூறினர். இதன் பின்னணி மிக முக்கியமானதாக இருந்ததால் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். காவல்துறையிலும் புகார் அளித்தேன்,” எனவும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு