36
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 234 தொகுதிகளில் 108க்கும் அதிகமான இடங்களில் தவெக முன்னிலைப் பெற்றிருப்பது, கட்சியினரிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, இந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் பதிவு செய்துள்ள வாக்கு சதவீதம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 3 மணி நிலவரப்படி, விஜய் தலைமையிலான தவெக 34.75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெகின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் புகழ்பெற்ற நடிகரான எம்.ஜி.ஆர் தனது கட்சியை ஆரம்பித்த பின்னர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 33.52 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். அந்த சாதனைக்கு பிறகு, ஒரு புதிய கட்சி முதல் தேர்தலிலேயே இத்தகைய உயர்ந்த வாக்கு சதவீதத்தைப் பெறுவது அபூர்வமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இதனால், எம்.ஜி.ஆருக்கு பிறகு, கட்சி தொடங்கிய உடனேயே மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய ஆதரவை பெற்ற தலைவராக விஜய் பார்க்கப்படுகிறார். இது, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கக்கூடிய மாற்றமாக பலரும் மதிப்பிடுகின்றனர்.
தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அதன் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை இந்த முன்னிலை எவ்வாறு மாறும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.