• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

எராட்டோஸ்தனீஸ்: வெறும் ஒரு குச்சியை வைத்து பூமியை அளந்த கிரேக்க அறிஞர் – எப்படி?

Byadmin

Sep 17, 2026


எராட்டோஸ்தனீஸ்: ஒரு குச்சியால் பூமியின் அளவை அளந்த கிரேக்க அறிஞர்

    • எழுதியவர், எடிசன் வெய்கா
    • பதவி, பிபிசி நியூஸ் பிரேசிலுக்காக ஸ்லோவேனியாவில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

நிலவியல் முதல் வானியல் வரை அறிவியல் பெரிதும் முன்னேறிய இன்றைய காலத்திலும், பூமி உருண்டையானது என்பதை நம்ப மறுக்கும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் கிமு 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைரீனை சேர்ந்த கிரேக்க அறிஞர் எராட்டோஸ்தனீஸ் (கிமு 276–194), ஒரு குச்சியை மட்டுமே பயன்படுத்தி பூமியின் கோள வடிவம் குறித்து ஏற்கெனவே நிலவிய கருத்தை கணித ரீதியாகச் சோதித்ததுடன், பூமியின் சுற்றளவையும் குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் கணக்கிட்டார்.

எராட்டோஸ்தனீஸின் கணக்கீட்டுக்கு அடிப்படையாக இருந்தது கோடை கதிர் திருப்பம் (Summer Solstice) என்ற முக்கியமான ஒரு வானியல் நிகழ்வு. அதாவது, பூமியின் துருவங்களில் ஒன்று சூரியனை நோக்கி அதிகபட்சமாகச் சாய்ந்திருக்கும் நாள்.

அலெக்சாண்ட்ரியா நூலகத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது, எகிப்தின் தெற்குப் பகுதியிலுள்ள சயீன் நகரத்தில் (இன்றைய அஸ்வான்), கோடைக் கதிர் திருப்ப நாளில் நண்பகல் நேரத்தில் சூரியன் தரைக்கு முற்றிலும் செங்குத்தாக, அதாவது உச்சியில் (zenith) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஓர் அறிவியல் கையெழுத்துப் பிரதியை எராட்டோஸ்தனீஸ் கண்டார். அப்போது சூரிய ஒளி ஒரு கிணற்றின் அடிப்பகுதியை நேரடியாகச் சென்றடையும் அளவுக்கு செங்குத்தாக இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுவே அவருக்குள் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கியது.

அதே நாளில் நண்பகல் நேரத்தில் வேறொரு இடத்தில் சூரிய ஒளி எந்தக் கோணத்தில் விழுகிறது என்பதை அளந்து, அந்த இரண்டு இடங்களுக்கும் இடையிலான தூரத்தைத் தெரிந்துகொண்டால், பூமியின் முழு சுற்றளவையும் கணக்கிட முடியும் என்பதை அவர் உணர்ந்தார். இதற்கு அடிப்படையான முக்கோணவியல் கணக்கீடு மட்டுமே தேவைப்பட்டது.

By admin