• Tue. Jun 23rd, 2026

24×7 Live News

Apdin News

கனடாவில் யூதர்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கிச்சூடு: பொலிஸ் உட்பட மூவர் உயிரிழப்பு

Byadmin

Jun 23, 2026


கனடாவின் மொன்டிரியல் நகரில் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மொன்டிரியலில் பெருமளவான யூதர்கள் வசிக்கும் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்துவருவதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரெஞ்சு மொழி பொது ஒலிபரப்பு நிறுவனமான ரேடியோ கனடா வெளியிட்டுள்ள தகவலின்படி, தாக்குதலாளி “இன்செல்” (Incel) எனப்படும் சித்தாந்தத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இன்செல்” என்பது “Involuntary Celibate” என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமாகும். அதாவது, விருப்பமின்றி தனிமை அல்லது பிரம்மச்சரிய வாழ்க்கையை கடைப்பிடிப்பதாகக் கருதும் சில இணைய அடிப்படையிலான குழுக்களுடன் தொடர்புடைய சிந்தனையாக இது பார்க்கப்படுகிறது. இந்தக் குழுக்களில் சில தீவிரமான கருத்துகளை பரப்புவதாகவும், உலகின் பல நாடுகளில் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்களுடன் இத்தகைய சித்தாந்தங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், மொன்டிரியல் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் இந்த சித்தாந்தத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By admin