பட மூலாதாரம், AFP via Getty Images
கத்தார் நாட்டில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பபித் (26), சஜித்குமார் (25), சுவின் (24) ஆகியோர் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடனும், கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்பதை கத்தார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் உள்ள நகரத்தின் முக்கிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சுத்திகரிப்பு நிலையத்தில் “தொழில்நுட்ப விபத்து” ஒன்று ஏற்பட்டதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது, இந்த வெடிப்பு காரணமாக நகரத்தின் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது.
இந்த வெடிப்பு நாட்டின் ஏற்றுமதியைப் பாதிக்காது என்று கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி கூறினார், மேலும் “இது ஒரு விபத்து, இது நாசவேலையோ அல்லது விரோதப் போக்கோ கொண்டதல்ல” என்றும் அவர் கூறினார்.