9
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்கிடமான மரணம் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று (08) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
கொள்ளுப்பிட்டி, பேத்ரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து, இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
சுமார் இரண்டு மாதங்கள் விளக்கமறியலில் இருந்த அவர், கடந்த மே 05 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும், அவர் பிணை பெறுவதற்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய இரு பிணையாளர்களும், தலா 15,000 ரூபா பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதன் மூலம் அவர் நீதிமன்றத்தின் நம்பிக்கையை மீறியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று வியாழக்கிழமை (07) நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
இதனைத் தொடர்ந்து, அவரது பிணையை இரத்து செய்த கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நீதவான் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, கோட்டை நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதோடு, கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.