18
இலண்டனில் நிகழ்ந்த கார் விபத்தில் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மெட்ரோபொலிட்டன் பொலிஸை சேர்ந்த இரு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பி.சி. கிறிஸ் ஜான்சன் (PC Chris Johnson) மீது அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்றொரு முன்னாள் அதிகாரி டேனி டாம்கின்ஸ் (Danny Tomkins) மீதும் அபாயகரமாக வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதியன்று, தென்கிழக்கு இலண்டனின் கிட்புரூக் (Kidbrooke) பகுதியில் உள்ள A20 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அப்போது அடையாளம் காட்டப்படாத பொலிஸ் வாகனம் மோதியதில், 38 வயதான அந்தப் பெண்ணின் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பலத்த காயமடைந்த அந்தப் பெண், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
‘காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம்’ (IOPC) நடத்திய விரிவான விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வாகனத்தை ஜான்சன் ஓட்டியதாகவும், டாம்கின்ஸ் இரண்டாவது காரை ஓட்டிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் வரும் எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஜேம்ஸ் டெர்ஹாம், இது மிகவும் பயங்கரமான மற்றும் இதயத்தை உலுக்கும் ஒரு சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருக்க தற்போதைய நிலையில் கூடுதல் கருத்துகளைத் தவிர்க்கப்போவதாகக் கூறினார்.