1
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரட்னம் கழகத்துக்கு எதிரான சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் கலம்போ எவ் சி கழகம் 5 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தத் தோல்வியுடன் ரட்னம் கழகம் 3ஆவது நேரடித் தொல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் கலம்போ எவ்சி வெற்றிபெற்ற போதிலும் அது இலகுவாக அமைந்தது என்று கூறிவிட முடியாது.
ரட்னம் கழகத்திற்கு சிறந்த கோல் காப்பாளர் ஒருவர் இல்லாததே கலம்போ எவ்.சி.யின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
கலம்போ எவ்.சி. போட்ட ஐந்து கோல்களில் ஒரு கோலே மிகவும் சிறப்பான கோலாக அமைந்தது. மற்றைய நான்கு கோல்களும் கோல் காப்பாளர்களின் கவனக்குறைவால் புகுத்தப்பட்டது.
போட்டியின் முதலாவது பகுதியில் ரட்னம் கழகத்தின் இளம் கோல்காப்பாளர் நஸ்ரின் யாமான் இழைத்த தவறுகளால் கலம்போ எவ் சி இரண்டு கோல்களைப் போட்டது.
போட்டியின் 26ஆவது நிமிடத்தில் 35 யார் தூரத்தில் இருந்து சலன சமீர ப்றீ கிக் மூலம் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார். அந்த சந்தர்ப்பத்தில் தடுப்புச் சுவரில் (wall) இருந்த நால்வரின் கவனக் குறைவாலும் கோல்காப்பாளர் யாமான் பந்தை சரியாக கணிப்பிடாததாலும் பந்து கோலினுள் புகுந்தது.
இடைவேளைக்கு ஓரிரு நிமிடங்கள் இருந்தபோது கலம்போ எவ்சி வீரர் அப்துல்லா சுமார் 30 யார் தூரத்திலிருந்து எதிரணி கோலை நோக்கி பந்தை உயர்த்தி உதைத்தார்.
அந்தப் பந்தை ரட்னம் கழக பின்கள வீரர் கௌஷல்ய பெரேரா பின்னோக்கி தலையால் முட்டினார். அந்தப் பந்தைப் பிடிக்க கோல்காப்பாளர் யாமான் முயற்சித்தபோது பந்து கைகளில் இருந்து நழுவியதுடன் அவர் தரையில் வீழ்ந்தார். இதனை சாதகமாக்கிக்கொண்டு அஹமத் ஷஸ்னி மிக இலகுவாக பந்தை கோலினுள் புகுத்தினார்.
இடைவேளையின்போது கலம்போ எவ்சி 2 – 0 என முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் யாமானுக்கு பதிலாக மாற்று கோல்காப்பாளராக ஷெஹான் சில்வேரா களம் இறங்கினார்.
அவரது அனுபவம் ரட்னம் கழகத்தை காக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 12 நிமிட இடைவெளியில் அவர் 3 கோல்களை விட்டார்.
போட்டியின் 50ஆவது நிமிடத்தில் ரட்னம் கழக பின்கள வீரர் ஒருவரின் பாதத்தில் பட்டு தன்னை நோக்கி வந்த பந்தை மஹ்மூத் அலி எல்ஷஸ்லி கோலாக்கினார்.
ஆறு நிமிடங்கள் கழித்து வலப்புறத்திலிருந்து சலன சமீர பரிமாறிய பந்தை அஹமத் ஷஸ்னி கோலக்கினார்.
மேலும் 6 நிமிடங்கள் கழித்து சலன சமீர இடது புறத்திலிருந்து பரிமாறிய பந்தை மஹ்மூத் அலி எல்ஷஸ்லி தனது சக வீரர் கூரோஷ் மனேஷுக்கு தட்டிவிட அவர் ஓங்கி உதைத்து கோலாக்கினார்.
போட்டியின் 90ஆவது நிமிடத்தில் ரட்னம் கழகத்துக்கு சந்தேகத்திற்கு மத்தியில் கள மத்தியஸ்தர் சம்ப்பத் லியனகுணவர்தன பெனல்டி ஒன்றை வழங்கினார்.
கலம்போ எவ்சி வீரர் ஒருவர் முழங்கையினால் பந்தை தட்டியதாக ரட்னம் கழகம் சார்பாக ப்றீ கிக்கை எடுத்த அணித் தலைவர் சசங்க டில்ஹார கேள்வி எழுப்பினார்.
கள மத்தியஸ்தர் அதனை சரியாக கவனிக்காத போதிலும் நான்காவது மத்தியஸ்தரின் சமிக்ஞையை அடுத்து பெனல்டியை வழங்கினார்.
ஆனால், அந்த பெனல்டியை ரட்னம் கழக வீரர் பிரான்சிஸ் சிக்கெருபாக கோல் காப்புக்கு மெலாக உதைத்து பெனல்டியைத் தவறவிட்டார்.
சற்று நேரத்தில் போட்டி முடிவுக்கு வர கலம்போ எவ்சி 5 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.









