பட மூலாதாரம், @CMOTamilnadu
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் மூன்று மாதம் நிறைவடையவுள்ளது. இந்த காலகட்டத்தில், பாலியல் புகார், போதைப்பொருள் கடத்தல், ரீல்ஸ் சர்ச்சை என த.வெ.க நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அணிவகுத்துள்ளன.
‘முதல்வர் விஜயால் கீழ்மட்ட அளவில் கட்சியினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என, அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அக்கட்சி நிர்வாகிகள் மறுக்கின்றனர். ‘ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த கட்சியைக் குறைகூற முடியாது’ என அவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு த.வெ.க தலைமையில் கூட்டணி ஆட்சி உருவானது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் மண்டல வாரியாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒன்றை த.வெ.க தலைவர் விஜய் அமைத்திருந்தார்.
‘குழுவின் மூலம் கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனவும் விஜய் எச்சரித்திருந்தார்.
மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் தலா ஒரு பெண் உள்பட நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ‘ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கட்சி நிர்வாகிகள் மீது இந்தக் குழுக்கள் போதிய கவனம் செலுத்தவில்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பட மூலாதாரம், @TVKHQ
“தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. விஜய், விசில் ஆகிய இரண்டை சுற்றித்தான் அதன் அரசியல் அமைந்துள்ளது” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
“காட்சிசார் அரசியல் மட்டுமே நடக்கிறது. ஆகவே, த.வெ.கவினருக்கு அரசியல்ரீதியாக எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை” என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி த.வெ.க நிர்வாகிகள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகப் புகார் கூறியிருந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் த.வெ.க இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்ரமணியன், த.வெ.க நிர்வாகி ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் புகார் மனுவை வாபஸ் வாங்குமாறு ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ சரவணன் தரப்பில் தன்னைத் தொடர்ந்து மிரட்டுவதாக, ஊடகங்களிடம் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அப்பெண் கோரிக்கை வைத்திருந்தார்.
வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிர்வாகிகள் கைதானதைத் தொடர்ந்து அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கி, த.வெ.க தலைமை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியது. தி.மு.க எம்.பி கனிமொழி, ‘பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள சூழலில் தி.மு.க மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து பொறுப்புடன் முதல்வர் செயல்படப் போவது எப்போது?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் ஆளும்கட்சி பிரமுகர்கள் என்பதால் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
அதிகாரம், பதவி, பணம் மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், பெ.சண்முகம் சாடியிருந்தார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை எம்.எல்.ஏ சரவணன் மறுத்துள்ளார். தன் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருவதாக ஊடகங்களிடம் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
”இந்த விவகாரத்தில் சிலர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.
ஜூலை 6 ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய எம்.எல்.ஏ சரவணன், “தூத்துக்குடியில் அதிகமான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டவனாக நான் இருக்கிறேன். என்னைத் தனிப்பட்ட முறையில் பணியைச் செய்ய விடாமல் தவறாக பேசி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
“அரசியல் காழ்ப்புணர்ச்சியில் என் மீது உண்மைக்கு மாறான ஆதாரற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். என் மீது புகார் கூறுவதற்கு முறையான ஆதாரம் காட்ட வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
‘ஜிபேயில் லஞ்சம்’ – கைதான த.வெ.க நிர்வாகி
செங்கல்பட்டு, மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் த.வெ.க செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா என்கிற வீராசாமி லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டார்.
மாம்பாக்கம் ஊராட்சியில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரிடம், நிலுவையில் உள்ள தொகையை விடுவிப்பதற்கு அவர் 1.30 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது.
ஜிபே மூலம் குறிப்பிட்ட தொகையை ஒப்பந்ததாரர் வழங்கியதாக அதுதொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டுகள் வெளியானது. மீதமுள்ள தொகையை நேரில் வழங்கியதாக காணொளி ஒன்றும் இணையத்தில் வேகமாகப் பரவியது.
இதையடுத்து, ஜூலை 15 ஆம் தேதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்து வீரா என்கிற வீராசாமி நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரில், ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை காவல்துறை கைது செய்துள்ளது.
பட மூலாதாரம், @TVKHQ
‘கட்டாய திருமணம்.. டி.என்.ஏ சோதனை’
திருச்சியை சேர்ந்த த.வெ.க நிர்வாகி ஒருவர் தனது உறவினரான 17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்ததாகப் புகார் எழுந்தது.
கடந்த ஜூன் மாதம் திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கில் அந்த நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே வரிசையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் த.வெ.க கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்த யுவராஜ் மீது, 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.
மாணவிக்கு குழந்தை பிறந்ததால் டி.என்.ஏ பரிசோதனையில் யுவராஜ் தவறு செய்தது கண்டறியப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் மீது போக்சோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை கைது செய்தது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான 25 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கிருஷ்ணராயபுரம் கிழக்கு த.வெ.க ஒன்றிய செயலாளர் ரமேஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மருந்தகம் ஒன்றில் பணிபுரியும் இளம்பெண், பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரைப் பின்தொடர்ந்து சென்று தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகக் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.
அந்தப் பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் த.வெ.க நிர்வாகிகளைத் தாக்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த வழக்கில் ஜூலை 14 ஆம் தேதி த.வெ.க நிர்வாகி ரமேஷை காவல்துறை கைது செய்தது.
தி.மு.க அரசு மீது விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகள்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க அரசு மீது பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, போதைப் பொருள் விற்பனை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை த.வெ.க தலைவர் விஜய் முன்வைத்தார்.
”தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்கு சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக” கடந்த ஜனவரி மாதம் 29 -ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார்.
‘குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஆனால், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் பேசி வருகிறார்’ எனவும் அவர் விமர்சித்திருந்தார்.
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு, “த.வெ.க மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சிகளிலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் இருக்கிறார்கள். ஆளும்கட்சி என்பதால் கட்சித் தலைமை தனது நிர்வாகிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும்” என்கிறார்.
“குழந்தைகள் மீதான வன்முறை கூடியுள்ளது. போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தண்டனை விகிதம் குறைவாக இருப்பதாக நீதிமன்றமே கூறுகிறது. இதனை சரிசெய்வதற்கான முயற்சிகளில் அரசு போதிய ஈடுபாடு காட்ட வேண்டும்” என்கிறார் தேவநேயன் அரசு.
பட மூலாதாரம், Sarathkumar/X
போதைப்பொருள் சர்ச்சைகள்
மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரிடம் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களிடம் இருந்து சுமார் 12 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது. கைதானவர்களில் ஒருவரான காசிநாதன், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய த.வெ.க துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்த வழக்கில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த ஜூலை முதல் வாரத்தில் தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார், 2022-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியின்போது,” போதை மருந்தைப் பயன்படுத்தியதாக” சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியது.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் சரத்குமார், உடல்நிலை சரியில்லாத தன் மகளுக்கு மாத்திரையை பொடி செய்து கொடுத்ததாக விளக்கம் அளித்திருந்தார்.
இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாக, தமிழ்நாடு எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆனால், ‘அமைச்சரவையில் இருந்து சரத்குமாரை நீக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் தாம்பரத்தில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரீல்ஸ் சர்ச்சைகள்
பட மூலாதாரம், VirudhaimagalKeerthana/X
த.வெ.க ஆட்சியின் மீதான விமர்சனங்களில் முக்கியமானதாக, அரசு அலுவலகங்களில் த.வெ.க நிர்வாகிகள் எடுக்கும் ரீல்ஸ் காட்சிகள் அமைந்துள்ளன.
சிவகாசியில் அரசுப் பள்ளி மாணவியிடம் ஆங்கிலத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உரையாடிய காட்சிகள் விமர்சனத்தை ஏற்படுத்தின. மாணவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அமைச்சரின் செயல்பாடு உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த கீர்த்தனா, ‘அரசுப் பள்ளி மாணவியை கேலி செய்ததாக பொய்யான கதையைப் பரப்புகிறார்கள். நானே ஓர் அரசுப் பள்ளி மாணவி. தமிழ்வழிக் கல்வியில் படித்தவள்’ எனக் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம், உத்தரமேரூரில் த.வெ.க நிர்வாகி ஒருவர், ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படத்தைக் காட்டி, ‘யார் தெரிகிறதா?’ எனக் கேள்வி எழுப்பி ரீல்ஸ் பதிவிட்டார். முதலமைச்சரின் படத்தையும் வகுப்பறையில் மாட்டியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, த.வெ.க ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

‘தி.மு.க, அ.தி.மு.க கூட இவ்வாறு செய்யவில்லை’
“பள்ளிகளில் தற்போதைய முதலமைச்சரின் படத்தைக் காட்டி, ‘இவர் யார் தெரியுமா?’ எனக் கேட்பது அந்த அமைப்பையே சீர்குலைப்பதைப் போல பார்க்கப்படும்” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்.
“தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் கட்சிக் கொடியை பள்ளி வளாகங்களுக்குள் அக்கட்சிகளின் நிர்வாகிகள் கொண்டு சென்றது இல்லை.” என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“த.வெ.க நிர்வாகிகளின் செயலை சில வாரம் இந்த அரசு வேடிக்கை பார்த்தது” எனக் கூறும் எஸ்.பி.லட்சுமணன், “ரீல்ஸ் எடுத்தற்காக சிலரைக் கட்சியில் இருந்து நீக்கினர். இதனை முன்னரே செய்திருக்க வேண்டும்” என்கிறார்.
இதே கருத்தை முன்வைக்கும் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு, “த.வெ.கவில் உள்ளவர்களுக்குக் கட்டுப்பாடற்ற தன்மை இருப்பதுபோல தெரிகிறது. ஆளும்கட்சியின் நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது” என்கிறார்.
“பள்ளிகளில் ரீல்ஸ் எடுப்பது, மருத்துவமனையில் ஆய்வு என்ற பெயரில் சென்று ரீல்ஸ் எடுப்பது போன்றவை ஏற்புடையதல்ல” என அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், @FelixGerald_TVK
‘ரீல்ஸ் ஒரு வகையான தகவல் தொடர்பு’
இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, “ரீல்ஸ் போடுவது என்பது ஒருவகையான தகவல் தொடர்பாக பார்க்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவர்களை வைத்து ரீல்ஸ் பதிவிட்டார். அதை யாரும் கேள்வி கேட்கவில்லை” என்கிறார்.
த.வெ.கவினர் ரீல்ஸ் பதிவிடும்போது அதை ஊதிப் பெரிதாக்கும் வேலையை ஊடகங்கள் செய்வதாகவும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு விமர்சித்தார்.
பட மூலாதாரம், CMOTamilnadu
”கீழ்மட்டத்தில் உள்ள சிலர் தங்களுக்கு அதிகாரம் உள்ளதா.. இல்லையா.. அதன் எல்லை என்ன என்பதை அறியாமல் தவறு செய்வதை அனுமதிக்கக் கூடாது” என்கிறார் எஸ்.பி.லட்சுமணன்.
“முதலமைச்சருக்கும் இந்த அதிகாரம் புதிது. தவறுகள், விமர்சனம் வருவதாகக் கூறப்படும் துறைகளில் உயர் அதிகாரிகள் இருந்தும் அவர்கள் எந்தவித யோசனைகளையும் ஆலோசனைகளையும் சொல்லத் தவறிவிட்டார்களோ எனத் தோன்றுகிறது” என எஸ்.பி.லட்சுமணன் விமர்சித்தார்.
“தவெக கட்சிக்காரர்களுக்கு அரசியல்ரீதியாக கட்டுப்பாடுகள் இல்லைஎன தோன்றுகிறது ” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
“ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் இருந்து ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கட்சியினருக்கு போதிய பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும்” என்கிறார், ஷ்யாம்.
“த.வெ.க எம்.எல்.ஏக்களைக் கண்டிப்பதில் வேகம் போதாது” எனக் கூறும் எஸ்.பி.லட்சுமணன், “அவர்களுக்கு போதிய எச்சரிக்கையை வழங்காவிட்டால் முதலமைச்சர் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும்” என்கிறார்.
“த.வெ.க நிர்வாகிகளைக் கண்டிப்பதில் முதலமைச்சர் கோட்டைவிடுவதாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதை சரிசெய்தால் மக்கள் மத்தியில் அவருக்கான நற்பெயர் கூடவே செய்யும்” என்கிறார், எஸ்.பி.லட்சுமணன்.
கட்சி நிர்வாகிகள் மீதான விமர்சனத்துக்கு பட்ஜெட் தொடர்பான கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும் எச்சரிக்கையை விடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் விவரித்த தமிழ்நாடு எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மக்களுக்கு எதிரான எதையும் செய்துவிடக் கூடாது என ஒவ்வொரு கூட்டத்திலும் முதலமைச்சர் கூறி வருவதாகவும் தவறு செய்யக் கூடாது எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘நிர்வாகிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது’
“அரசு அலுவலகங்களில் தேவையில்லாமல் யாரும் ஆய்வு நடத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஆய்வு நடத்தியவர்கள் மீது கட்சிரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்கிறார் தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு.
தவறு செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சம் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் குற்ற வழக்குகளில் சிக்குவது குறித்துப் பேசிய அவர், ” சில ஊடகங்கள் இதை ஊதிப் பெரிதாக்குகின்றன. சில சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கலாம். அதைப் பெரிதாக்கிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு