• Sun. Aug 30th, 2026

24×7 Live News

Apdin News

கிறிஸ்தவ தேவாலயத்தில் அனர்த்தம்: அறிவிப்புப் பலகை விழுந்து பாதிரியார் மரணம்; 6 பேர் காயம்

Byadmin

Aug 30, 2026


இங்கிலாந்தின் வெஸ்ட் சசெக்ஸ் (West Sussex) பகுதியில் உள்ள ஸ்டெய்னிங் (Steyning) அருகே நடைபெற்ற கிறிஸ்தவ தேவாலயத் திருவிழாவின் போது அறிவிப்புப் பலகை விழுந்த விபத்தில் சிக்கி, 41 வயதுடைய ராபர்ட் குவான்கோ (Robert Guanco) என்ற பாதிரியார் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாஸ்டர் ராபர்ட் குவான்கோ, ஈஸ்ட்போர்ன் (Eastbourne) பகுதியில் உள்ள ‘ஜீசஸ் தி லிவிங் வாட்டர்’ (Jesus the Living Water) தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் நேர்ந்த இந்த அனர்த்தத்தில் மேலும் 06 பேர் காயமடைந்தனர்; அவர்களில் 04 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவிருந்த இந்த விழா, இத்துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து அமைப்பாளர்களால் பாதியிலேயே இரத்து செய்யப்பட்டது.

2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘Big Church Festival’, இங்கிலாந்தின் மிகப்பெரிய கிறிஸ்தவ விழாவாகப் பார்க்கப்படுகின்றது.

பாதிரியார் ராபர்ட்டின் மறைவுக்கு அவரது தேவாலயமும் ஆன்மீகத் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

‘ஜீசஸ் தி லிவிங் வாட்டர்’ தேவாலயம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “பாதிரியார் ராபர்ட், கடவுளின் உண்மையுள்ள ஊழியராகவும், அவரது மனைவி இசேக்கு (Isay) அன்பான கணவராகவும், மகள் எல்லிக்கு (Ellie) பாசமுள்ள தந்தையாகவும் விளங்கினார்; அவரது வாழ்க்கை, விசுவாசம், அன்பு மற்றும் கடவுளுக்கான சேவை என்றும் மறக்கப்படாது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.

‘ஜீசஸ் தி லிவிங் வாட்டர் வேர்ல்டுவைடு’ தேவாலயத்தின் பாதிரியார் நார்மன் பான்ஸ் கூறுகையில், “வழிபாடு, கூட்டுறவு மற்றும் கொண்டாட்டத்துக்கான நேரமாக அமைய வேண்டிய ஒரு தருணம், கற்பனை செய்ய முடியாத ஒரு துயரமாக மாறிவிட்டது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், ராபர்ட் குவான்கோவின் வாழ்க்கை தாழ்மை, விசுவாசம், அன்பு, இரக்கம் மற்றும் சேவை மனப்பான்மையைப் பிரதிபலித்தது என்றும், அவரது வழிகாட்டுதல்களும் பிரார்த்தனைகளும் பலரது வாழ்க்கையைத் தொட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேண்டர்பரி பேராயர் (Archbishop of Canterbury) இந்தச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்ததாகக் கூறியுள்ளார்.

By admin