1
ஸ்கொட்லாந்தின் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கையின் தேசிய சாதனையாளர் அருந்தவராசா புவிதரன் இன்று பங்குபற்றுகிறார்.
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 11.35 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தியகம விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட திறன்காண் தேர்வுப் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் 5.20 மீற்றர் உயரத்தைத் தாவி தேசிய சாதனை நிலைநாட்டியதன் மூலம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்ற யாழ்ப்பாணத்தைச் செர்ந்த புவிதரன் தகுதி பெற்றார்
கனாதீபனிடம் எட்டு வருடங்களுக்கு மேல் பயிற்சிப் பெற்று வரும் புவிதரன், பொதுநலவாய விளையாட்டு விழாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் முதல் தடவையாக பங்குபற்றவுள்ளார்.
இந்தப் போட்டி புவிதரனுக்கு இலகுவாக அமையப் போவதில்லை. ஏனேனில் இப் போட்டியில் பங்குபற்றவுள்ள 13 வீரர்களில் 11 பேர் புவிதரனைவிட சிறந்த உயரப் பெறுதிகளைக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை புவிதரன் 5.80 மீற்றர் உயரத்தை அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தை தாவினால் பதக்கம் அவருக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது அதற்காக அவர் கடுமையாக முயற்சிக்க வேண்டிவரும்.
இதேவேளை, ஆண்களுக்கான முப்பாய்ச்சல் இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் யேஷான் விஸ்மித்த பங்குபற்றவுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற முப்பாய்சலுக்கான தகுதிகாண் போட்டியில் 15.67 மீற்றர் தூரம் பாய்ந்து 8ஆம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார். அவரது சிறந்த தூரப் பெறுதி 16.28 மீற்றர் ஆகும்.
இது இவ்வாறிருக்க, இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவு ஜூடோ போட்டியில் இலங்கை வீரர் சாமர ரெப்பியல்லகே பங்குபற்றவுள்ளார். அப் போட்டியில் ஸிம்பாப்வே வீரர் ஜோன் கப்புங்வேயை சாமர எதிர்த்தாடவுள்ளார்.

