5
இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள செஸ்லின் ஹே (Cheslyn Hay) பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில், தனது குடும்பத்துடன் முகாம் அமைத்திருந்த போது மூன்று மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று காலை 08:45 மணி அளவில், ஸ்ட்ராபெரி லேன் (Strawberry Lane) அருகே உள்ள பகுதியில் ஒரு குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக வான்வழி அவசர சிகிச்சை வாகனம் அனுப்பப்பட்டது. இருப்பினும், சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகக் கூறியுள்ள புலனாய்வு ஆய்வாளர் கேட்டி கிரிகோரி (Katie Gregory), இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், தற்போது இக்குழந்தையின் மரணம் “விவரிக்கப்படாத மரணம்” (unexplained death) என வகைப்படுத்தப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 7,000 மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்து மக்கள் இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதி அதிகாரப்பூர்வ முகாம் தளம் இல்லை என்றாலும், உள்ளூர் இளைஞர்கள் இங்குள்ள இரண்டு குளங்களில் மீன்பிடிப்பதற்கும், இரவில் தங்குவதற்கும் பயன்படுத்துவது வழக்கம் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்றும் பொலிஸ் பாதுகாப்பு வளையம் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு அருகே இரண்டு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பது காணப்பட்டது. உயிரிழந்த குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அப்பகுதியில் மக்கள் ரோஜாப் பூக்களை வைத்துச் சென்றுள்ளனர்.