தமிழக சட்டப்பேரவையில் இன்று (08-09-2026) அவைத் தலைவர் இருக்கையைச் சூழ்ந்துகொண்டு முழக்கமிட்ட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், திமுக கொறடா எ.வ. வேலு பாயிண்ட் ஆஃப் ஆர்டர் ஒன்றை எழுப்பினார்.
நேற்றைய அவை நடவடிக்கைகளின்போது, காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளிக்கும்போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கை, மிசா கைது, அமலாக்கத்துறை ஆவணங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என எ.வ. வேலு வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அவையில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையை மட்டுமே முதலமைச்சர் குறிப்பிட்டதாகவும், மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அவர் கூறிய கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
பட மூலாதாரம், Tamilnadu Assembly
பின்னர், முன்னாள் அமைச்சர் கே.என். நேருவும் முதல்வரின் கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். திருமணம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
மறைந்தவர்களைப் பற்றியும், அவையில் இல்லாதவர்களைப் பற்றியும் முதலமைச்சர் பேசுவது நியாயம் அல்ல என்றும் அவர் கூறினார்.
அதன் பின்னர் பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், சர்க்காரியா கமிஷன் குறித்து முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சட்டப்பேரவையில் ஏற்கெனவே பேசியிருப்பதால், அதுகுறித்து முதலமைச்சர் விஜய் தெரிவித்த கருத்துகளை நீக்கத் தேவையில்லை எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை பதிவு செய்வதுடன் தங்களுடைய ஆட்சியில் இதுபோன்ற ஊழல்கள் நடைபெறாது என்பதையும் உறுதிபடுத்துவதுதான் முதலமைச்சரின் நோக்கம் என கூறினார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் எழுந்துநின்று முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் கோவி செழியனுக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவர் நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும் அமலாக்கத்துறை ஆவணத்தை சட்டப்பேரவையில் பேசியது சரியா என கேள்வி எழுப்பினார்.
சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்படாத நிலையிலும் அதை பேசுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என குறிப்பிட்டர்.
மறைந்த தலைவர் முரசொலி மாறனைப் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னர் அவைத் தலைவர் இருக்கையைச் சூழ்ந்துகொண்டு திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்
“அவையைத் தொடர்ந்து நடத்தவிடாமல் தடுக்கும் உறுப்பினர்களை வெளியேற்றுங்கள்” என்று சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.