• Fri. Jun 12th, 2026

24×7 Live News

Apdin News

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை; கலவரத்துக்கு பின்னர் இங்கிலாந்து அரசு அதிரடி!!

Byadmin

Jun 12, 2026


வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற குடியேற்ற எதிர்ப்பு கலவரங்களைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை அடையாளம் கண்டு, நாடு கடத்தும் நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கலவரங்களுக்கு பின்னணியாகக் கூறப்படும் கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய ஹாடி அலோடிட் என்ற நபர், செல்லுபடியாகும் விசா இன்றி அயர்லாந்திலிருந்து வடக்கு அயர்லாந்துக்குள் எல்லையை கடந்திருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, அயர்லாந்து – வடக்கு அயர்லாந்து எல்லைப் பகுதியில் கண்காணிப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசாங்கத்தின் மீது அதிகரித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து அங்கம் வகித்த காலத்தில், புகலிடம் கோருவோர் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சுதந்திரமாக நகர்வதை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட டப்ளின் ஒழுங்குமுறையை பின்பற்றியது. இந்த விதிமுறையின்படி, பாதுகாப்பு அல்லது புகலிடம் கோருபவர்கள் முதன்முதலில் வந்த ஐரோப்பிய நாட்டிலேயே தங்களது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.

எனினும், பிரெக்சிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகியதால், டப்ளின் ஒழுங்குமுறை இனி அந்நாட்டிற்கு பொருந்தாத நிலை ஏற்பட்டது. இதனால், புகலிட கோரிக்கையாளர்களை மீண்டும் அனுப்புவது மற்றும் ஏற்றுக்கொள்வது தொடர்பான சட்ட நடைமுறைகளில் சிக்கல்கள் உருவாகின.

இதனையடுத்து, கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், அயர்லாந்துடன் மாற்று ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் மூலம், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் புகலிட கோருவோரை அயர்லாந்திற்குத் திருப்பி அனுப்பவும், தேவையான சந்தர்ப்பங்களில் மீண்டும் அனுமதிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தம் நடைமுறையில் எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்திற்கு இதுவரை ஒரே ஒரு புகலிட கோரிக்கையாளர் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.

இதனால், அயர்லாந்துடனான குடியேற்ற ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறை ரீதியாக தோல்வியடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் குடியேற்றக் கொள்கை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதேவேளை, சட்டவிரோத எல்லைக் கடப்புகளைத் தடுக்க புதிய மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

By admin