5
மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பினை நடாத்துவதா, இல்லையா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அதனை எதிர்க்கட்சியினருக்கு தீர்மானிக்க முடியாது என வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
22வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவருவதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீன தன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதன் மூலம் நீதித்துறை பலமடைகின்றது. நீதித்துறை பலமடைவதற்கு எதிர்த்தரப்பினர் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அவர்களுக்குத் தேவை பலவீனமற்ற நீதித்துறையே.
எமது அரசாங்கம் நாட்டில் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்தையும் முன்னெடுத்துச் செல்கின்றபோதுதான் சுயாதீனமான பலமான நீதித்துறை ஒன்றினை நாட்டில் உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
ஆகையால் இந்த நாட்டு மக்களுடைய பணத்தினை சூறையாடித் தின்றவர்கள், திருடர்களுக்கு ஒருபோதும் தப்பிக்க முடியாது. அதனை நாம் கட்டாயம் செய்துதான் தீருவோம்.
நாட்டுமக்களுக்கு அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றுவோம். நாட்டு மக்களும் அதனையே எங்களிடம் முன்வைத்தனர். ஆகையால் இந்த நாட்டு மக்கள் 22 வயது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினை ஆதரிப்பார்கள் என நாம் நம்புகின்றோம்.
இனி ஒருபோதும் நாட்டில் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டில் தற்சமயம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
குறுகிய அரசியல் இலாபத்துக்காக வேண்டி எதிர்த்தரப்பினர் பொய்யான பிரச்சாரங்களை நாட்டில் முன்னெடுக்கின்றனர் என அமைச்சர் சுசில் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.