5
இலண்டன், சவுத் ஹாரோ (South Harrow) பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோரமான கார் விபத்தில், 29 வயது மகேஸ்வரன் பிரவீன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2.40 மணியளவில், சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட் லேன் (Eastcote Lane) பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அந்த வீதியில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு காரைக் கவனித்து, அதனைப் பின்தொடர முயன்றபோது, அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், இலண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் மருத்துவக் குழுவினர், வான்வழி ஆம்புலன்ஸ் மற்றும் அபாயகரமான பகுதி மீட்புக் குழுவினர் (HART) எனப் பெரும்ப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மருத்துவப் பணியாளர்களின் தீவிர முயற்சிகளுக்கு மத்தியிலும், 29 வயதான பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான காரில் இருந்த மற்ற இரு இளைஞர்கள் (25 மற்றும் 20 வயது) காயங்களுடன் மீட்கப்பட்டு, அதிர்ச்சி சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தில்லாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மகேஸ்வரன் பிரவீன், யாழ்ப்பாணம் புங்குடுதீவு 6ஆம் மற்றும் 3ஆம் வட்டாரம் வேம்படியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் இலண்டன் சவுத் ஹாரோவை வதிவிடமாகக் கொண்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான சூழ்நிலைகள் குறித்து இலண்டன் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள், CAD716/22MAY26 என்ற குறியீட்டைக் குறிப்பிட்டு 101 என்ற இலக்கத்திலோ அல்லது வடக்கு தீவிர மோதல் விசாரணைப் பிரிவை 0207 960 8044 என்ற இலக்கத்திலோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
