திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ரவி வலேச்சா, தனது சிறுவயதில் படப்பிடிப்பு தளங்களில் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அமிதாப் பச்சனின் சிறுவயது கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற ரவி வலேச்சா, ‘அமர் அக்பர் அந்தோணி’, ‘கூலி’ உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறுவயதிலேயே அதிக படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரமாக உலக சாதனை படைத்த இவருக்கு, சுமார் 8 வயதாக இருக்கும்போது பாலியல் தொல்லைகள் தொடங்கின.
இருண்ட டப்பிங் திரையரங்குகள், படப்பிடிப்பு தளங்கள் மற்றும் பயணங்களின் போது மூத்த நபர்களாலும் உதவியாளர்களாலும் மூன்று முறைக்கு மேல் அத்துமீறல்களுக்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயம் மற்றும் யாரிடமும் கூற முடியாத சூழ்நிலை காரணமாக இந்த கசப்பான அனுபவங்களை பல தசாப்தங்களாகத் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துள்ளார்.
மனநல சிகிச்சை
தற்போது வெற்றிகரமான தொழில்அதிபராக இருக்கும் இவர், இந்த மன உளைச்சலின் காரணமாக ஏற்பட்ட கோபத்தையும் வேதனையையும் போக்க சில ஆண்டுகளுக்கு முன் மனநல சிகிச்சையைத் தொடங்கினார். ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு, இந்த பாதிப்பிலிருந்து மீண்டுள்ள அவர், தற்போது இத்தகைய கொடுமைகள் குறித்து அச்சமின்றி வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளார்.
ஆண்களுக்கான விழிப்புணர்வு முயற்சி
ஆண் குழந்தைகளும் ஆண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைப் பற்றி பயமும் நாணமும் இன்றி பேசுவதற்காக ‘MeAlso’ என்ற ஆதரவு அமைப்பை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். திரைப்படத் துறை மட்டுமல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதாகக் சுட்டிக்காட்டும் ரவி, தனது அனுபவத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பலருக்கு குரல் கொடுக்க முன்வந்துள்ளார்.