சி.பி.எஸ்.இ.12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியை டிஜிட்டல் முறையில் (ஓ.எஸ்.எம். முறை) நடப்பாண்டில் அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்று தேர்வு முடிவு வெளியானது.
அதில் பல மாணவ- மாணவிகளுக்கு குறைந்த மதிப்பெண் வந்தது. மறுமதிப்பீட்டிற்காக வினாத்தாளை கேட்கும்போது, பல மாணவர்கள் தான் எழுதிய பேப்பர் இது இல்லை. அதில் இருக்கும் கையெழுத்து தன்னுடையது இல்லை எனப் புகார் செய்தனர். பின்னர், தவறு நடந்தது சிபிஎஸ்சி ஒப்புக் கொண்டது.
இதனைத்தொடர்ந்து சி.பி.எஸ்.இ. தேர்வு குளறுபடி விவகாரம் தொடர்பாக அதன் தலைவராக இருந்த ராகுல்சிங், செயலாளர் பொறுப்பில் இருந்த ஹூமான்சு குப்தாவும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக அதிகாரிகள் மாற்றப்பட்ட நடவடிக்கை வெறும் ‘கண்துடைப்பு நாடக நடவடிக்கை” என்றும், ‘உண்மையை மூடிமறைக்கும் முயற்சி” என்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில். “சி.பி.எஸ்.இ. தலைவர் மாற்றப்பட்டார். செயலாளர் மாற்றப்பட்டார். ஒரே நபர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால் உண்மையான பொறுப்புக்குரிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உடனடியாக கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்து. நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.