(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது))
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) காலமானார்.
அவரது உடலுக்கு நாளை காலை முதல் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது என்றும் நாளை மறுநாள் சென்னையில் இறுதிச்சடங்குகள் செய்யப்படுகின்றன என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செளகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு மொழியில் அவர் நடித்த செளகார் என்ற படத்தின் மூலம் ஜானகி தனது பெயருக்கு முன்பாக செளகார் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார்.
புதிய பறவை, எதிர்நீச்சல், பணம் படுத்தும் பாடு, தில்லு முல்லு உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு தமிழ்த் திரையுலகில் பேசப்பட்டன. தனது நடிப்புக்காக தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற அவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
முதலமைச்சர் இரங்கல்
செளகார் ஜானகியின் மறைவு பேரிழப்பு என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
“திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்த அவர் பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்குப் பேரிழப்பு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
செளகார் ஜானகி மறைவையொட்டி திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“சிறந்த திரை ஆளுமையாலும் பல தலைமுறைகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் செளகார் ஜானகி” என்று We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், “மூத்த திரைக் கலைஞரும், சமூக சேவகியுமான செளகார் ஜானகியின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக” தெரிவித்துள்ளார்.
அதோடு, “தனது தனித்துவமான நடிப்பாலும், சிறந்த திரை ஆளுமையாலும் பல தலைமுறைகளின் மனதில் நீங்கா இடம் பிடித்த செளகார் ஜானகியின் மறைவு, திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், AVM Pictures
தென்னிந்திய திரைத்துறையின் தவிர்க்க இயலாத கலைஞர் சௌகார் ஜானகி என்று கமல்ஹாசன் தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டு கால பயணத்தில் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்திய திரையின் தவிர்க்க இயலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “அன்றைய கதாநாயகர்களில் கிட்டத்தட்ட அனைவருடனும் நடித்தவர். என் ஆசிரியர் கே. பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர், மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏழு தசாப்தங்களுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் செளகார் ஜானகி” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “இந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையும், பன்மொழித் திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான செளகார் ஜானகியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “புதிய பறவை, இரு கோடுகள், எதிர்நீச்சல்,உயர்ந்த மனிதன், காவியத்தலைவி, தில்லுமுல்லு உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் செளகார் ஜானகி என்று பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஏழு தலைமுறைகளுக்கும் மேலாக சினிமா மற்றும் நாடகத் துறையில் கோலோச்சி, தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற செளகார் ஜானகியின் மறைவு கலைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சௌகார் ஜானகி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், “தனது நடிப்பால் எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய சௌகார் ஜானகியின் மறைவு, இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது புகழும் கலைப் பங்களிப்பும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.