11
ஜெர்மனியில் உள்ள யூத அமைப்புகளின் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்ட உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டேனிஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரும் ஈரானுக்கு ஆதரவாக மேற்படி தாக்குதல்களை முன்னெடுக்க சதித்திட்டம் தீட்ட உதவியதாக கூறப்படுகிறது.
ஜெர்மன் தரவு தனியுரிமைச் சட்டங்களின்படி, டேனிஷ் நாட்டவரான அலி எஸ் (Ali S) மற்றும் ஆப்கானிய நாட்டவரான தவாப் எம் (Tawab M) என அடையாளம் காணப்பட்டுள்ள இருவர் மீதும் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அலி எஸ்., ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைக்காகப் பணியாற்றியதாகவும், அவர்களின் சிறப்புப் பிரிவான குட்ஸ் படையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஜெர்மனியில் உள்ள யூதர்களின் மத்திய கவுன்சிலின் தலைவர் ஜோசப் ஷூஸ்டர் மற்றும் ஜெர்மன்-இஸ்ரேலிய சங்கத்தின் தலைவர் வோல்கர் பெக் ஆகியோரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் பெர்லினில் உள்ள இரண்டு யூத மளிகைக் கடைக்காரர்களை உளவு பார்க்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
“ஜெர்மனியில் கொலை மற்றும் தீவைப்புக் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக குறித்த இருவரும் உளவு பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரானிய தூதரகம் மறுத்துள்ளது.